Advertisement

சமரச தீர்வில் சாதனை படைத்த நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம்

1986 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தில் நுகர்வோர்   தகராறுகளில் சமரச பேச்சுவார்த்தை மூலம் தீர்ப்பதற்கான சட்டபூர்வமான   வழிமுறை ஏற்படுத்தப்படவில்லை. இந்த குறையை போக்கும் வகையில் 2019 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தில் ஒவ்வொரு  மாவட்ட நுகர்வோர் ஆணையத்திலும் சமரச மையம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. 

புதிய சட்டப்படி கடந்த 2022 மார்ச் மாதத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட நுகர்வோர் நீதிமன்றங்களிலும் தலைவர் மற்றும் உறுப்பினர் காலியிடங்களை சென்னை உயர்நீதிமன்றத்தின் சார்பில் நடத்தப்பட்ட எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்ட தகுதி வாய்ந்த நபர்களை தமிழக அரசு நியமனம் செய்தது.  இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட   தலைவருக்கு மூத்த மாவட்ட நீதிபதிக்கான சம்பள விகிதமும் (district judge super time scale as per the judicial pay commission) உறுப்பினர்களுக்கு மாநில அரசின் துணை    செயலாளருக்கான சம்பள விகிதமும்  நிர்ணயம் செய்யப்பட்டு பணியில் அமர்த்தப்பட்டனர். நீதிபதிகள் பாதுகாப்புச் சட்டம், 1985,  இரண்டாம் பிரிவில் வரையறையின்படி நுகர்வோர் ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நீதிபதிகளாக செயல்படுகிறார்கள்.  இவ்வாறு நியமனம் பெற்றவர்கள் புதிய நுகர்வோர் பாதுகாப்புச் சட்டப்படி சமரசத்   தீர்வில் அதிக அக்கறை உள்ளவர்களாக இருக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டு தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட நுகர்வோர்   நீதிமன்றங்களிலும் சமரச மையங்கள் அமைக்கப்பட்டு சமரசர்கள் (mediators) நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள்.  கடந்த 2023 ஏப்ரல் மாதம் முதல் 2024 மார்ச்   வரையான காலத்தில்   நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிபதி டாக்டர் வீ. ராமராஜ் தலைமையிலான அமர்வு   நூற்றுக்கு மேற்பட்ட  வழக்குகளை சமரச மையத்தில் பேசுவதற்கு பரிந்துரை செய்ததோடு சமரசர்களையும் நியமித்து  உத்தரவிட்டுள்ளது, இதன் விளைவாக கடந்த ஓராண்டு காலத்தில் 36 வழக்குகளில் முறையீட்டாளர்களுக்கும் எதிர் தரப்பினர்களுக்கும் சமரசம் ஏற்பட்டு பாதிக்கப்பட்ட நுகர்வோர்களுக்கு உரிய நீதி வழங்கப்பட்டுள்ளது.  கடந்த ஓராண்டில் தமிழகத்தில் உள்ள மாவட்ட நுகர்வோர் நீதிமன்றங்களில் சமரசம் மூலம் அதிக வழக்குகளை முடித்து நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் சாதனை படைத்துள்ளது.

இதே ஓராண்டு காலத்தில் 302 வழக்குகளில் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்புகளை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் தொடங்கப்பட்ட நவம்பர் 2000 முதல் 2023 மார்ச் இறுதி வரையில் 22 ஆண்டுகளில் வழங்கப்பட்ட மொத்த தீர்ப்புகளின் எண்ணிக்கை 1107 மட்டுமே என்பது   கவனிக்கத்தக்கது. நுகர்வோர் பிரச்சனைகள் குறித்த வழக்குகள் 90 நாட்களில் முடிக்கப்பட வேண்டும் என்று சட்டம் கூறுவதைப் போல மாவட்ட நுகர்வோர் நீதிமன்றங்களால் வழக்குகள் 90 நாட்களில் தீர்த்து வைக்கப்படும் சூழல் தமிழகம் முழுவதும் உருவாகியுள்ளதாகவே கருதப்படுகிறது

சாஜ். ம
சாஜ். ம
சாஜ். ம, வழக்கறிஞர்/ சட்டக் கல்லூரி விரிவுரையாளர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Google search engine

Latest Articles