இனிய வணக்கம் …. நம்மை நாமே ஒரு வெற்றியாளராக கருதாதவரை …. எதையும் வெற்றிகரமாக நிகழ்த்திக்காட்ட முடியாது — ஜிக் ஜேக்லர் If we don’t see ourselves as a winner…Then cannot perform as a winner….. Zig Ziglar |
காலம் பொன் போன்றது (time is precious) இப்படிப்பட்ட வாசகங்கள் எல்லாம் பார்ப்பதற்கும் படிப்பதற்கும் கேட்பதற்கும் இதமாகத்தான் இருக்கிறது. நடைமுறை வாழ்வில் நம்மில் எத்தனை பேர். நேரத்தை எப்படி எல்லாம் பயன்படுத்துகிறோம். எப்படி எல்லாம் வெட்டித்தனமாக வீணடிக்கிறோம்.
கடவுள் டாட்டாவிற்கும் 24 மணி நேரம்தான் கொடுத்திருக்கிறார். ஏழைக்கும் 24 மணி நேரம் தான் கொடுத்துள்ளார். இந்த 24 மணி நேரத்தை திட்டமிட்டு செலவழிப்போர் வாழ்வில் வெற்றி பெறுகிறார்கள். நேரத்தை சரியாக பயன்படுத்தாதவர் தனக்கு நல்ல நேரம் இன்னும் பிறக்கவில்லை என சுற்றி வருகிறார்கள்.
வேலை செய்ய நேரம் ஒதுக்குங்கள் அதுவே வெற்றிக்கு வழி. சிந்திக்க நேரம் ஒதுக்குங்கள் அதுவே ஆக்கப்பூர்வமான சக்தி. விளையாட நேரம் ஒதுக்குங்கள் அதுவே இளமைக்கான இரகசியம். படிக்க நேரம் நோக்கங்கள் அதுவே அறிவுக்கான ஊற்று.
எட்டு மணி நேரத்தை உழைப்பிற்காக செலவழிக்கிறோம். எட்டு மணி நேரம் தூங்குவதற்காக போய் விடுகிறது. மீதமுள்ள 8 மணி நேரத்தை எவ்வாறு செலவிடுகிறோம் என்பதைப் பொறுத்தே. நமது எதிர்காலம் தீர்மானிக்கப்படுகிறது. கால விரையங்கள் தாமதங்கள் பலரை தவறு செய்ய வைக்கிறது. திட்டமிட்டு நேரத்தை பயன்படுத்தி உழைப்பவர்கள்.. உயர்ந்த இடத்திற்கு சென்றிருக்கிறார்கள்.
ஒரு சாதாரண இரும்புத் துண்டின் விலை 10 ரூபாய் என்று வைத்துக் கொள்வோம். அதை லாடமாக தயாரித்தால் அதன் மதிப்பு 20 ரூபாய். அதையே ஆணி ஆக்கினால் மதிப்பு 40 ரூபாய். அதையே கொண்டு ஊசியாக மாற்றினால் மதிப்பு எண்பது ரூபாய். கடிகாரத்திற்கு தேவையான முள்ளாக மாற்றினால் பல நூறு ரூபாய் மதிப்பு பெறுகிறது. பொருள் ஒன்றுதான். ஆனால், மதிப்பு எப்படி கூடுகிறது என்று பாருங்கள்.
எனது நண்பரின் மைத்துனர் ஒருவர் மதுரையில் இருக்கிறார். கல்விப் பின்னணி இல்லாத குடும்பத்தில் பிறந்தவர். குடிசை வீட்டில் வாழ்ந்த ஏழையின் புதல்வர். பத்தாம் வகுப்பு தாண்டாத இவர் துவக்கத்தில் ஒரு வங்கியில் கடைநிலை ஊழியராக பணி யில் சேர்ந்தார். நேரத்தினை விரையமாக்காது மீண்டும் மீண்டும் படித்து வங்கித் தேர்வுகளை எழுதினார். இறுதியாக ஒரு வங்கியின் மேலாளராக பதவி உயர்வுபெற்று சிறப்பாக பணியாற்றி பணி நிறைவு செய்துள்ளார். இன்னும் கூட அவர் புத்தகங்களை படிப்பதனை நிறுத்தி விடவில்லை. நல்ல புத்தகங்கள் என்றால் எனக்கும் பரிந்துரை செய்வார்.
சில பேர் ஒரு மணி நேரத்தில் இரண்டு மணி நேர வேலைகளை செய்கிறார்கள். அதனால் வெற்றிக்கோட்டை எளிதாக தொடுகிறார்கள். காலத்தினை பயன்படுத்துவதை பொறுத்து அது மதிப்பு மிக்கதாக மாறுகிறது. நமது காலடியை தாண்டிச் சென்று விட்ட நீரும் கடந்து சென்று விட்ட நொடிப்பொழுதும் என்றும் திரும்ப வராது என்பதை உணர்ந்தவர்கள் நேரத்தினை சரியாகப் பயன்படுத்தி உலகில் சாதனையாளராக உலா வருகிறார்கள்.
நாட்டினுடைய அரசு நிர்வாக முறையில் உள்ள பல தடைகள். காலவிரயங்களை ஏற்படுத்தி விரைவாக இலக்குகளை எட்டிப்பிடித்திட இடையூறாக இருக்கிறது. காலவிரயத்தை விளக்க ஒரு நகைச்சுவை கதையை பார்ப்போமா?.
ஒரு அதிகாரியின் மாமியாருக்கு உடல் நலம் கடுமையாக பாதிக்கப்பட்டது. பல டாக்டர்கள் பார்த்தும் நோய் குணமாகவில்லை. கடைசியில் ஒரு நாட்டு வைத்தியரிடம் காண்பிக்க அவர் கடல் நீரை சிறிது காலத்திற்கு மாமியாருக்கு குடிக்கக் கொடுத்தால் நோய் குணமாகும் என்று கூறியுள்ளார்.
அந்த அதிகாரி எதனையும் விதிமுறைப்படி செய்ய கூடியவர். எனவே கடல் நீரை தினந்தோறும் எடுத்துப் பயன் படுத்திட வருவாய் துறையில் கிராம நிர்வாக அதிகாரிக்கு (V.A.O.,) மனு கொடுத்தார். அவர் ரெவென்யு இன்ஸ்பெக்டருக்கு (R.I.,) அனுப்ப அவர் அதனை டெப்டி தாசில்தாருக்கு அனுப்பினார். டெப்டி தாசில்தார். தாசில்தாருக்கு அனுப்பினார். அவர் மாவட்ட கலெக்டருக்கு அந்த விண்ணப்பத்தை அனுப்பினார். மாவட்ட கலெக்டர் தலைமைச் செயலருக்கு அனுப்பினார்
கடல் மத்திய அரசுக்கு சொந்தம். ஆகவே, இதில் மாநில அரசு தலையிட முடியாது என டெல்லிக்கே அந்த மனுவை,அனுப்பி வைத்தார் தலைமைச் செயலாளர். டெல்லியில் இருந்து பதில் வர மூன்று வருடங்கள் ஆகிவிட்டன. அதற்குள் மாமியார் மண்டையை போட்டு விட்டார். கதையைப் படித்து சிரியுங்கள். நேரத்தின் அருமையை உணர்ந்து பணியாற்றுங்கள். வெற்றி கோட்டை தொடுங்கள்.
பூங்கா இதழ் (The News Park) கருத்து: ஒவ்வொரு மணித்துளையும் பொன்னானது என்பதை தெரிந்து கொள்பவரே வாழ்க்கையில் வெற்றியாளராக வெற்றியாளர் ஆகிறார்.