பழைய காலத்தில் வீட்டின் இருபுறமும் திண்ணை வைத்து கட்டுவார்கள். உங்கள் வீட்டில் திண்ணை இருக்கிறதா? அந்த திண்ணையில் உட்கார்ந்து மகிழ்ச்சியை அனுபவித்து இருக்கிறீர்களா? கிராமங்களில் புழங்கும் “அண்ணன் எப்ப போவான்? திண்ணை எப்ப காலியாகும்?” என்ற தமிழ் பழமொழியை பெரும்பாலும் அறிந்திருப்போம். ஆனால், இன்று திண்ணைகளே காலியாகி விட்டது என்பதுதான் சோகமான உண்மையாகும்.
வாசல் திண்ணை, நடை, ரேழி, தாவாரம், பாவுள், கூடம், கூடத்து உள், முத்தம், தொட்டி முத்தம், கொல்லை, ரெண்டாங்கட்டு, சமையல் உள், கொல்லைத் தாழ்வாரம், கிணத்தடி, கோட்டைஅடுப்பு, மாட்டு தொழுவம், தோட்டம், புழக்கடை என பல்வேறு பகுதியில் தமிழர்களின் பாரம்பரிய வீடுகளில் இருந்தன.
நம் கிராமத்து வீடுகள் அழகே தனி. ஓலைக்குடிசையின் ஒட்டுத்திண்ணை தொடங்கி, ஓங்கி உயர்ந்த மச்சுவீட்டின் வரவேற்பு திண்ணை வரை அன்றைய சுருக்கமாக கூறினால் ஏழை முதல் பணக்காரர் வரை உள்ள மக்களின் வீடுகளில் இருந்த திண்ணைகள் வீடுகளின் வரவேற்பறைகளாகவும் வீதிகளின் மனித சந்திப்பு இடங்களாகவும் உறவுகளை வளர்த்தன. மக்களின் அன்றாட வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும் நீக்கமற நிறைந்திருந்த திண்ணைகள், வெயில் கால இரவுகளில் காற்றாட படுத்து உறங்கும் கட்டிலாகவும் பயன்பட்டன. இன்று திண்ணைகள் இருக்கும் இடத்தில் இருசக்கர வாகனங்களும், நான்கு சக்கர வாகனங்களும், வாடகைக்கு கடைகளும் இருக்கின்றன.
திண்ணை அழிய தொடங்கியது முதலே மக்கள் மனதில் இருந்த ஈரமும் பரந்த சிந்தனையும் படிப்படியாக மறைய தொடங்கி விட்டது எனலாம். வீட்டு பெரியவர்கள் மாலைநேரத்தில் காற்று வாங்கவும் வசதியாக இருக்கும். அக்ரஹாரங்களின் அழகே திண்ணைகள் தான். வரிசையாக திண்ணையுடன் கூடிய வீடுகளும், தெருகோடியில் ஒரு அழகான கோவிலும் அழகோ அழகு. சாலைகளை அண்டியுள்ள வீடுகளின் திண்ணைகள்.
திண்ணைப் பள்ளிக்கூடம் என்பது ஆங்கிலேயர்களால் புகுத்தப்பட்ட மேற்கத்திய கல்விமுறையிலான இன்றைய பள்ளிக்கல்விமுறை முழுமையாக தமிழகத்தில் பரவுவதற்கு முன் தமிழகத்தில் நிலவிவந்த ஒரு கல்வி முறையாகும். இந்தப் பள்ளிக்கூடங்கள் ஆசிரியரின் வீட்டுத் திண்ணையில் நடந்ததால் இப்பெயர் பெற்றது. சென்னை மாகாணத்தில் 1822 -ல் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திண்ணைப் பள்ளிகள் இருந்ததாக அப்போது மாகாண ஆளுநராக இருந்த தாமஸ் முன்ரோ காலத்தைய கணக்கெடுப்பில் தெரியவருகிறது.
கிராமங்களில் நடைபாதைகளை ஒட்டி அமைந்துள்ள திண்ணைகளை வழியில் செல்லும் பொதுமக்கள் இளைப்பாறவும் உள்ளூர் மக்களுடன் கலந்துரையாடவும் பயன்படுத்தினார். சாலைகளையும் ஒட்டி அமைந்துள்ள திண்ணைகள் பழங்காலத்தில் தூரப் பயணத்தில் ஈடுபட்டுள்ள வழிப்போக்கர்கள் தங்கிச் செல்வதற்கு உரிய இடமாகவும் இவை பயன்பட்டன. பழந் தமிழ் இலக்கியங்களில் இதற்கான சான்றுகளைப் பரவலாகக் காணமுடியும்.
கூட்டு குடும்பம் இல்லாமல் எப்படி நமது பண்பாடு சீர்கெட்டு விட்டதோ, அப்படியே திண்ணைகள் இல்லாமல் குடும்ப வாழ்விலும் சமூக வாழ்விலும் அமைதி இல்லாமல் போய்விட்டது. ஒற்றை திண்ணையை விட இரட்டை திண்ணையே விஷேசமானது. வீட்டுக்கு வருபவர்களை உட்கார வைத்து பேச வசதியாக இருக்கும். மாலையில் காற்று வாங்கவும், அருகில் வசிப்பவர்கள் கடந்து செல்லும் போது குசலம் விசாரிக்கவும், வீட்டுப் பெரியவர்கள் மாலை திண்ணையில் அமர்ந்து கதை பேசவும் திண்ணைகளின் பயன்பாடு அளப்பரியது.
எல்லா நேரமும் எல்லாத் திண்ணைகளும் ஏதோ ஒரு சேதியை சொல்லி கொண்டுதான் இருந்தன. அதில் அமர்ந்துதான் பாட்டிகள், பேரன் பேத்திகளுக்கு கதைகள் சொன்னார்கள். இளையவர்கள் பல்லாங்குழி விளையாடினார்கள். பெரியவர்கள் பரமபதம் ஆடினார்கள், அப்பாக்கள் அரசியல் பேசினார்கள். அம்மாக்கள் ஊர்க்கதை பேசினார்கள். புழக்கடை திண்ணையில் அமர்ந்து புது மணத்தம்பதியர் நிலாவை ரசித்தார்கள். எதிர் திண்ணைகளில் காதலர்கள் சமிக்ஞையில் காதலை வளர்த்தார்கள்.
திண்ணைகள் பள்ளிகூடமாகவும், அரசியல் மேடைகளாகவும், நடன அரங்கமாகவும், கலைக் கூடமாகவும், விளையாட்டு அரங்கமாகவும் தேவைக்கேற்ப மாறிக் கொள்ளும் இயல்புடையதாக இருந்தது. சாணம் மணக்கும் ஏழை வீட்டுத் திண்ணை தொடங்கி, கிரானைட் கல் பதித்த பெரிய வீட்டு திண்ணை வரை கல்வி, விளையாட்டு, ஆடல், பாடல், அரசியல், அனுபவம், பக்தி, பஞ்சாயத்து, கதை, நாடகம், காதல், காமம், மகிழ்ச்சி, சோகம், இளமை, முதுமை என்று நமது கலாச்சாரங்களை சொல்ல ஆயிரமாயிரம் விஷயங்கள் உண்டு திண்ணைகளிடம்.
ஆனால், தற்காலத்தில் ஒருவரோடொருவர் பேசுவது என்பதே அரிதாகி விட்டது. கிராமபுறங்களிலாவது அக்கறையுடன் குசலம், நலம் விசாரித்தல் இன்னும் நடைமுறையில் உள்ளது. ஆனால், நகர்ப்புறங்களில், அதுவும் அடுக்குமாடி குடியிருப்புகளில் மிகவும் மோசம். கிராம புறங்களில் சன்னதி தெருவின் அழகே அழகு. இப்போது அதுவும் கொஞ்சம் கொஞ்சமாக தொலைந்து வருகிறது.
பூங்கா இதழ் (The News Park) கருத்து: மனிதர்கள் ஒருவருக்கொருவர் நலம் விசாரித்து, அன்பை பரிமாறினாலே உலகில் பாதி நோய்கள் குறைந்து விடும். மண்ணையும் கல்லையும் வைத்து கட்டப்பட்ட இடமாக அல்லாமல் மனிதநேயத்தின் அடையாளமாக திண்ணைகள் விளங்கின. நமது பாரம்பரியமான திண்ணைகளை போற்றுவோம்.