என்ன படித்தாலும் சாதிக்கலாம்

பழனி அருகே உள்ள கணக்கன்பட்டி கிராமத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்த டாக்டர் வீ. ராமராஜ் அவர்கள் 12 ஆம் வகுப்பில் பள்ளியில் மிக அதிக மதிப்பெண்களை எடுத்த போதிலும் சூழல் காரணமாக கல்லூரியில் இணைய இயலவில்லை. இருப்பினும் தொலைதூரக் கல்வியில் பி. ஏ., பட்டம் பெற்ற பின்னர் அவர் கல்லூரிக்குச் சென்று சட்டக் கல்வியையும் சென்னை பல்கலைக்கழகத்தில் குற்றவியல் துறையிலும் படித்தார். தற்போது பன்னிரண்டு பட்டங்களுக்கு மேல் படித்துள்ள அவர் தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினராகவும் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தின் நீதிபதியாகவும் இருந்து வந்து, தற்போது அமைச்சர்கள் அனைத்து அரசு அதிகாரிகள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் தமிழ்நாடு லோக் ஆயுக்தா அமைப்பில் உறுப்பினராக (at the cadre of high court judge) பணியாற்றி வருகிறார். என்ன படிக்கிறோம் என்பது முக்கியமல்ல என்ன படித்தாலும் திட்டமிட்டு பணியாற்றினால் சாதிக்கலாம் என்பதற்கு எடுத்துக்காட்டு இவராகும்.
ஐந்தாண்டு சட்டக் கல்வி
பட்டப் படிப்பை முடித்தவர்களுக்கு மூன்றாண்டுகள் கால சட்ட பட்ட படிப்பும் (Three-year LL.B.,) பன்னிரண்டாம் வகுப்பு முடித்தவர்களுக்கு ஐந்தாண்டு கால சட்ட பட்ட படிப்பும் (Five-year LL.B.,) சட்டக் கல்லூரிகளில் வழங்கப்படுகிறது. தமிழகத்தில் டாக்டர் அம்பேத்கார் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் 15 அரசு சட்டக் கல்லூரிகளும் சில தனியார் சட்டக் கல்லூரிகளும் இயங்கி வருகின்றன. டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் சேர பன்னிரண்டாம் வகுப்பில் மொழி பாடத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களை தவிர மற்ற மதிப்பெண்களின் மொத்த மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை வழங்கப்படுகிறது. வழக்கமான இட ஒதுக்கீட்டு நடைமுறைகளும் சேர்க்கையில் பின்பற்றப்படுகிறது. சட்டக் கல்லூரியில் சேர விரும்புபவர்கள் https://tndalu.emsecure.in/5YearsLaw என்ற இணையதளத்தை பார்க்கவும்.
அரசு சட்டக் கல்லூரிகள்
01. சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி, பட்டரை பெரம்புதூர், திருவள்ளூர் மாவட்டம் – 631 203
02. சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி, புதுப்பாக்கம், திருப்போரூர் வட்டம், செங்கல்பட்டு மாவட்டம் – 631 203
03. அரசு சட்டக் கல்லூரி, மதுரை – 625 020
04. அரசு சட்டக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி – 620 023
05. அரசு சட்டக் கல்லூரி, கோயம்புத்தூர் – 641 046
06. அரசு சட்டக் கல்லூரி, திருநெல்வேலி – 627 011
07. அரசு சட்டக் கல்லூரி, செங்கல்பட்டு – 603 001
08. அரசு சட்டக் கல்லூரி, வேலூர் – 632 006
09. அரசு சட்டக் கல்லூரி, விழுப்புரம் – 605 603
10. அரசு சட்டக் கல்லூரி, தருமபுரி – 636 701
11. அரசு சட்டக் கல்லூரி, ராமநாதபுரம் – 623 501
12. அரசு சட்டக் கல்லூரி, சேலம் – 636 010
13. அரசு சட்டக் கல்லூரி, நாமக்கல் – 637 001
14. அரசு சட்டக் கல்லூரி, தேனி – 625 534
15. அரசு சட்டக் கல்லூரி, காரைக்குடி – 630 003
தனியார் சட்டக் கல்லூரிகள்
16. மத்திய சட்டக் கல்லூரி, சேலம் – 603 008
17. சரஸ்வதி சட்டக் கல்லூரி, திண்டிவனம்
18. அன்னை தெரசா சட்டக் கல்லூரி, புதுக்கோட்டை மாவட்டம் – 622 102
19. G.T.N சட்டக் கல்லூரி, திண்டுக்கல் மாவட்டம் – 624 005
20. KMC சட்டக் கல்லூரி, திருப்பூர் மாவட்டம் – 641 605
21. ஈரோடு சட்டக் கல்லூரி, ஈரோடு மாவட்டம் – 638 453
22. எஸ்.தங்கப்பழம் சட்டக் கல்லூரி, தென்காசி மாவட்டம் – 627 758
23. துளசி பெண்களுக்கான சட்டக் கல்லூரி, தூத்துக்குடி மாவட்டம் – 628 252
24. முகில் சட்டக் கல்லூரி, கன்னியாகுமரி மாவட்டம் – 629 172
இந்தக் கல்லூரிகளை தவிர டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் சீர்மிகு சட்டப்பள்ளி (School of Excellence in Law) ஒன்றும் நடத்தப்படுகிறது இதில் எல்.எல்.பி., ஹானர்ஸ் (LL.B., Honours) பட்டம் வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.
நிகர் நிலை பல்கலைக்கழகங்கள்
தமிழகத்தில் டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் நடத்தப்படும் சட்ட கல்லூரிகளை தவிர வேலூர் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி, சென்னை, சாஸ்திரா நிகர் நிலை பல்கலைக்கழகம், தஞ்சாவூர், எஸ்.ஆர்.எம் நிகர் நிலை பல்கலைக்கழகம், சென்னை, சவிதா நிகர் நிலை பல்கலைக்கழகம், சென்னை உள்பட தனியார் நிகர் நிலை பல்கலைக்கழகங்களிலும் (deemed universitites). சட்டப்படிப்புகள் நடத்தப்படுகின்றன. இந்தக் கல்லூரிகளில் சேர தனியாக விண்ணப்பம் செய்ய வேண்டும்.
சில நிகர் நிலை பல்கலைக்கழக கல்லூரியில் தேசிய அளவில் நடத்தப்படும் மத்திய சட்ட சேர்க்கை தேர்வு (CLAT-central law admission test) மதிப்பெண்களையும் சில நிகர் நிலை பல்கலைக்கழக கல்லூரியில் வேறு வகையான சட்டக் கல்லூரி சேர்க்கை தேர்வு (other entrance) மதிப்பெண்களையும் பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கின்றனர். சில நிகர் நிலை பல்கலைக்கழகசட்டக் கல்லூரிகள் தனியாக நுழைவுத் தேர்வுகளை நடத்துகிறார்கள். முழுமையான சேர்க்கை விவரங்கள் சட்ட படிப்புகளை நடத்தும் ஒவ்வொரு நிகர் நிலை பல்கலைக்கழக இணையதளங்களில் வெளியிடப்படுகிறது. இந்தக் கல்லூரிகளை தவிர திருச்சி அருகே உள்ள ஸ்ரீரங்கத்தில் தேசிய சட்ட பள்ளியும் செயல்படுகிறது இதில் சேர தேசிய அளவில் நடத்தப்படும் மத்திய சட்ட சேர்க்கை தேர்வு (CLAT-central law admission test) மதிப்பெண்களை பெற்றிருக்க வேண்டும்.
பிரிவுகள்
ஐந்தாண்டு சட்ட கல்வியில் அனைவருக்கும் பொதுவாக சட்ட பாடங்கள் கற்பிக்கப்படும் போதிலும் முதல் இரண்டு ஆண்டுகள் சேரும் பிரிவுக்கு ஏற்ப கலை, வணிகவியல் போன்ற பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன ஐந்து ஆண்டு சட்டக் கல்லூரியில் உள்ள பிரிவுகள் பின்வருமாறு.
1. பி. ஏ., எல்எல். பி.,
2. பி.காம்., எல்எல்.பி.,
3. பி.பி.ஏ., எல்எல். பி.,
4. பி.சி.ஏ., எல்எல். பி.,
5. பி. ஏ., எல்எல். பி., ஹானர்ஸ்
6. பி.காம்., எல்எல்.பி., ஹானர்ஸ்
7. பி.பி.ஏ., எல்எல். பி., ஹானர்ஸ்
8. பி.சி.ஏ., எல்எல். பி., ஹானர்ஸ்
உயர்கல்வி
ஐந்தாண்டு இளம் சட்டவியல் (LL.B.,) படிப்பை முடித்தவர்களுக்கு முதுநிலை சட்டவியல் (LL.M.,) படிப்பு தமிழகத்தில் டாக்டர் அம்பேத்கர் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளிலும் தனியார் நிகர் நிலை பல்கலைக்கழகத்தில் நடத்தப்படும் சட்ட பள்ளிகளிலும் நடத்தப்படுகிறது. முதுநிலை சட்ட பட்ட படிப்பை தேர்வு செய்யும் போது அரசியலமைப்பு சட்டம், சர்வதேச சட்டம், குற்றவியல் சட்டம், மனித உரிமைகள் சட்டம், வரி சட்டம், தொழிலாளர் நல சட்டம், நிர்வாக சட்டம் போன்ற சிறப்பு பாடத்தை (specialization) தேர்வு செய்ய வேண்டும். ஐந்து ஆண்டு சட்டப் படிப்பை (LL.B.,) முடித்த பின்னர் பலர் லண்டன் உள்ளிட்ட வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் ஓராண்டு கால அளவு கொண்ட முதுநிலை சட்டப்படிப்பு (LL.M.,) படிக்க செல்கின்றனர்.
வாய்ப்புகள்
சட்டக் கல்வி தொழில்முறை படிப்பு (poressional) என்பதால் பட்டம் பெற்று பார் கவுன்சிலில் பதிவு செய்தவுடன் வழக்கறிஞராக பணியாற்றும் வாய்ப்பும் நீதித்துறையில் நீதிபதிகளாக பணியாற்றும் வாய்ப்பும் சட்டம் படித்தவர்களுக்கு கிடைக்கிறது. நீதித்துறையை தவிர பெரும்பாலான தீர்ப்பாயங்கள் (tribunals), ஆணையங்கள் (commissions) போன்றவற்றின் தலைவராகவும் உறுப்பினராகவும் பணியில் சேர சட்டப்படிப்பு அவசியமானதாக உள்ளது.
மத்திய, மாநில அரசு பணிகளில் இணைவதற்கு சட்ட பட்ட படிப்பு பெரிதும் உதவிகரமாக இருப்பதோடு அரசின் சில பணிகளுக்கு சட்ட படிப்பு மிக அவசியமானதாக உள்ளது. தனியார் நிறுவனங்களிலும் சட்ட அலுவலராக பணியாற்ற சட்டம் படித்தவர்களுக்கு வாய்ப்புகள் உள்ளன. இதனைத் தவிர ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளிலும் சட்டம் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்புகள் உள்ளன.
இளம் அறிவியல் (பி.எஸ்சி.,) பட்டப் படிப்பில் இத்தனை பிரிவுகளா?
தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில் மாணவ – மாணவியர்கள் கல்லூரி படிப்பிற்கு விண்ணப்பம் செய்ய தயாராகி வருகின்றனர். மருத்துவம், பொறியியல் பட்ட படிப்புகள் மட்டுமல்லாது இளம் அறிவியல் (பி.எஸ்சி.,) பட்டப் படிப்பின் மீதும் பலருக்கு ஆர்வம் உள்ளது.
விவசாயம்
இளம் அறிவியல் (பி.எஸ்சி.,) பட்ட படிப்பில் விவசாயம் (Agriculture), தோட்டக்கலை (Horticulture), பட்டு வளர்ப்பு (Sericulture), வனவியல் (Forestry) உணவுத் தொழில்நுட்பம் (Food technology) மற்றும் பால் தொழில்நுட்பம் (diary Technology) பிரிவுகளை படிப்பவர்களுக்கு அரசு மற்றும் தனியார் துறையில் வேலை வாய்ப்புகளும் உயர் கல்விக்கான வாய்ப்புகளும் உள்ளன. இந்த தொழில்முறை அறிவியல் பட்டப் படிப்புகளை படித்த பலர் இந்திய குடிமை தேர்வுகளை (Civil Service) எழுதி உயர் பொறுப்புக்களை பெற்றுள்ளார்கள். சொந்தமாக வேளாண் பண்ணைகளையும் இயற்கை விவசாயத்தையும் விவசாயம் சார்ந்த தொழில்களையும் செய்ய விரும்புவோரும் இந்த பாடப்பிரிவுகளை தேர்ந்தெடுக்கிறார்கள்.
கணினி அறிவியல்
இளம் அறிவியல் (பி.எஸ்சி.,) பட்ட படிப்பில் கணினி அறிவியல் (Computer Science), தகவல் தொழில்நுட்பம் (Information Technology), மின்னணு ஊடகம் (Electronics Media), இயங்குபடம் (Animation) மற்றும் பயன்பாட்டு அறிவியல் (Applied Science) போன்ற பிரிவுகள் பலராலும் கவரப்படுவையாகும். இந்த பாடப்பிரிவு படிக்கும் மாணவர்களுக்கு கணினி அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் நிறுவனங்களிலும் பிற துறைகளிலும் வேலை வாய்ப்புகள் கிடைப்பதோடு சுய தொழில் புரிவதற்கும் இப்படிப்புகள் உதவியாக உள்ளன.
செவிலியர்
இளம் அறிவியல் (பி.எஸ்சி.,) பட்ட படிப்பில் செவிலியர் (Nursing) பாடப்பிரிவானது அதிக வேலை வாய்ப்புகளை வழங்கக்கூடியது என்பதால் மாணவ – மாணவிகள் இப்பிரிவில் சேர அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். இந்த பட்டம் படித்தவர்கள் வெளிநாடுகளுக்கு (குறிப்பாக வளைகுடா நாடுகளுக்கு) வேலைக்கு செல்ல நல்ல வாய்ப்பு உள்ளது. இளம் அறிவியல் (பி.எஸ்சி.,) பட்ட படிப்பில் ஆய்வக தொழில்நுட்பம் (Lab Technology) பிரிவும் வேலை வாய்ப்புகளை வழங்க கூடியதாகும்.
இயற்பியல்
இளம் அறிவியல் (பி.எஸ்சி.,) பட்டப்படிப்பில் இயற்பியல் (Physics) பிரிவு அறிவியலில் மகத்தான இடத்தை பிடித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இயற்பியலில் சிறந்து விளங்கும் அறிஞர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது. பொறியியலில் உள்ள அனைத்து பிரிவுகளுக்கும் அடிப்படையாக திகழ்வது இயற்பியல் எனலாம். இளம் அறிவியல் இயற்பியல் பட்டம் பெற்றவர்கள் முதுநிலை அறிவியல் பட்டம் மட்டுமல்லாது இளம் தொழில்நுட்பவியல் (பி. டெக்.,) படிப்பில் இரண்டாம் ஆண்டு வாய்ப்புகள் சேருவதற்கும் வாய்ப்புகள் உள்ளன. அரசின் ஆய்வு அமைப்புகளிலும் (Research Institutions) தனியார் துறைகளிலும் வேலை வாய்ப்புகள் உள்ளன.
வேதியியல்
இளம் அறிவியல் (பி.எஸ்சி.,) பட்டப்படிப்பில் வேதியியல் (Chemistry) பிரிவு சமூகத்திற்கு தேவைப்படும் ஒரு பிரிவாகும். ஒவ்வொரு ஆண்டும் வேதியியலில் சிறந்து விளங்கும் அறிஞர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது. இளம் அறிவியல் வேதியியல் பட்டம் பெற்றவர்கள் முதுநிலை அறிவியல் பட்டம் மட்டுமல்லாது இளம் தொழில்நுட்பவியல் (பி. டெக்.,) படிப்பில் இரண்டாம் ஆண்டு வாய்ப்புகள் சேருவதற்கும் வாய்ப்புகள் உள்ளன. அரசின் ஆய்வு அமைப்புகளிலும் (Research Institutions) தனியார் துறைகளிலும் வேலை வாய்ப்புகள் உள்ளன.
கணிதம்
இளம் அறிவியல் (பி.எஸ்சி.,) பட்டப்படிப்பில் கணித (Mathmatics) பிரிவு படிக்கும் மாணவர்களுக்கு உயர் படிப்புக்கும் ஆசிரியர் பணி உட்பட்ட அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலைகளுக்கும் வாய்ப்புகள் உள்ளன. இளம் அறிவியல் கணிதம் பட்டம் பெற்றவர்கள் முதுநிலை அறிவியல் பட்டம் மட்டுமல்லாது இளம் தொழில்நுட்பவியல் (பி. டெக்.,) படிப்பில் இரண்டாம் ஆண்டு வாய்ப்புகள் சேருவதற்கும் வாய்ப்புகள் உள்ளன.
தாவரவியல்
இளம் அறிவியல் (பி.எஸ்சி.,) பட்ட படிப்பில் தாவரவியல் (Botony)), விலங்கியல்
(Zoology)) பிரிவுகளைப் படிப்பவர்களுக்கு உயர் கல்வி வாய்ப்புகளும் அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலை வாய்ப்புகளும் உள்ளன. இந்தக் கல்வியை பயின்று சுய தொழில்களையும் புரிய வாய்ப்புகள் உள்ளது.
ஊட்டச்சத்து
இளம் அறிவியல் (பி.எஸ்சி.,) பட்ட படிப்பில் ஊட்டச்சத்து (Nutritution) படிப்பிற்கு தற்போது ஆர்வம் அதிகரித்துள்ளது. மருத்துவமனைகளிலும் உணவு உற்பத்தி தொழிற்சாலைகளிலும் இப்பட்டம் படித்தோருக்கு வேலை வாய்ப்புகள் உள்ளன. இந்த பட்டத்தை படித்தவர்கள் சுயமாகவும் உணவு ஆலோசகர்களாக பணியாற்றுகிறார்கள். இளம் அறிவியல் (பி.எஸ்சி.,) பட்ட படிப்பில் வீட்டு அறிவியல் (Home Science) பிரிவும் நல்ல வாய்ப்புகளை வழங்குகிறது
இன்னும்
இளம் அறிவியல் (பி.எஸ்சி.,) பட்டப் படிப்பில் பேஷன் தொழில்நுட்பம் (Fashion Technology) தடய அறிவியல் (Forensic Science), கடலியல் (Ocenography), மானுடவியல் (Arthopology) போன்ற பிரிவுகளும் உள்ளன. இளம் அறிவியல் பட்ட படிப்பை படிப்பதன் மூலம் அரசுத் துறையிலும் பொதுத்துறை நிறுவனங்களிலும் தனியார் துறைகளும் வேலை வாய்ப்புகளை முயற்சி செய்தால் பெற இயலும். இளம் அறிவியல் கல்வி சுய தொழிலுக்கும் ஏற்றது என்பதோடு இந்த கல்வியால் வாழ்வில் வெற்றிகளையும் சாதனைகளையும் படைக்க முடியும் என்பது நிதர்சனம். இளம் அறிவியல் பட்ட படிப்பை படிக்க உள்ள அனைத்து மாணவ மாணவியர்களுக்கும் வாழ்த்துக்கள்!
பி. காம்., உள்ளிட்ட வணிகவியல் பட்டங்கள்
பன்னிரண்டாம் வகுப்பு முடித்த பின்னர் வணிகவியல் (commerce) தொடர்பான பட்டங்களை படிப்பதற்கு ஒரு பிரிவு மாணவர்களிடையே எப்போதும் .ஆர்வம் இருந்து வருகிறது. பி. காம்., (பொது) – B.Com., (General) என்ற வணிகவியல் பட்டம்தான் சுமார் பத்தாண்டுகளுக்கு முன்பு அனைத்து கல்லூரிகளும் கற்பிக்கப்பட்டு வந்தது. தற்போதும் பெரும்பாலான கல்லூரியில் இந்த பட்டப் படிப்பு போதிக்கப்படுகிறது. சமீப காலமாக, இந்த பட்டப் படிப்பை படிப்பவருக்கு குறிப்பிட்ட சிறப்பு பாடங்களையும் (Specialization) இணைத்து வணிகவியல் பட்டப்படிப்பை பல கல்லூரிகள் வழங்குகின்றன. உதாரணங்கள் பின்வருமாறு.
- பி. காம்., (தொழில்முறை) – B.Com., (Professional)
- பி. காம்., (ஹானர்ஸ்) – B.Com., (Honours)
- பி. காம்., (கணினி அறிவியல்) – B.Com., (Computer Science specialization)
- பி. காம்., (வங்கி நிர்வாகம்) – B.Com., (Bank Management specialization)
- பி. காம்., (வரிவிதிப்பு) – B.Com., (Taxation specialization)
- பி. காம்., (பயண மேலாண்மை) – B.Com., (Travel Management specialization)
பி. காம்., பட்டப்படிப்பை போலவே மாணவர்கள் அதிகமாக வணிகம் தொடர்பாக அதிகம் ஆர்வம் காட்டும் மற்றொரு படிப்பு பி.பி.ஏ., (Bachelor of Business Management). மேலும், பி.பி.எம்., (Bachelor of Banking Management) பி.எஃப். எம்., (Bachelor of Financial Management) போன்ற வணிகவியல் சார்ந்த பட்டங்களும் சில கல்லூரிகளில் போதிக்கப்படுகின்றன.
இத்தகைய வணிகவியல் பட்டங்களை பெறுவதன் மூலம் பட்டப்படிப்பை குறைந்தபட்ச தகுதியாக கொண்டுள்ள அரசு பணியிடங்களுக்கான வேலை வாய்ப்புகளும் தனியார் துறை வேலை வாய்ப்புகளும் சுய தொழிலுக்கான வாய்ப்புகளும் மாணவர்களுக்கு உருவாகிறது. எம்.காம் எம்.பி.ஏ., போன்ற முதுநிலை பட்டங்களையும் படிக்க இத்தகைய கல்வி வாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறது.
தி இன்ஸ்டிட்யூட் ஆஃப் கம்பெனி செக்கரட்டரிஸ் (The Institute of Company Secretaries) என்ற அரசு சார்பான நிறுவனம் வழங்கும் செயலகப் பணியில் ஏ.சி.எஸ்., (Associate in Company Secretaryship) என்ற படிப்பையும் பிளஸ் டூ முடித்த மாணவர்கள் படிக்கலாம். இது குறித்த முழுமையான விவரங்களை அதிகாரப்பூர்வ இணையதளம் (https://www.icsi.edu/home/) மூலம் அறிந்து கொள்ளலாம். நிறுவன செயலக படிப்பு நல்ல வேலை வாய்ப்பையும் தொழில்முறையையும் உருவாக்கக்கூடியதாக உள்ளது.
இதே போலவே அரசு சார்பான நிறுவனங்களான தி இன்ஸ்டியூட் ஆப் சார்ட்டட் அக்கவுண்டென்ஸ் மற்றும் தி இன்ஸ்டிட்யூட் ஆஃப் காஸ்ட் அக்கவுண்டென்ஸ் வழங்கும் ஆடிட்டர் (Auditor) பணிக்கான சி.ஏ., (C.A.,) படிப்பையும் செலவு கணக்காளர் (Cost Accountant) பணிக்கான ஐ.சி.டபிள்யூ.ஏ., (IC.W.A.,) படிப்பையும் மாணவர்கள் படிக்க வாய்ப்புகள் உள்ளன. இதன் மூலம் அரசு துறையிலும் தனியார் துறையிலும் வேலை வாய்ப்புகளும் சுய வேலை வாய்ப்புகளும் கிடைக்கிறது. இந்த படிப்புகள் குறித்த முழுமையான விவரங்களை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (https://www.icai.org/ & https://icmai.in/icmai/ ) அறிந்து கொள்ளலாம்.
பி.காம்., பி.பி.ஏ., போன்ற படிப்புகளை படிப்பவர்களும் பட்டப் படிப்பை படிக்கும் காலத்திலேயே ஏ. சி. எஸ்., சி.ஏ., ஐ.சி.டபிள்யூ. ஏ., என்ற படிப்புகளையும் ஒரே சமயத்தில் பயிலலாம். இதன் மூலம் சிறந்த அறிவாற்றலை வளர்த்துக் கொள்வதுடன் வேலை வாய்ப்புகளும் அதிகரிக்கிறது.
இளங்கலை (பி. ஏ.,) படித்தாலும் சாதிக்கலாம்!
தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பின் பொது தேர்வு முடிவுகள் வெளியாகி விட்டது. மாணவ, மாணவியர்கள் கல்லூரியில் காலடி பதிக்க விண்ணப்பங்களை செய்ய தொடங்கி விட்டனர். ஒவ்வொரு படிப்புக்கும் ஒரு தனி சிறப்பு உண்டு. குறிப்பிட்ட பாடத்தை படித்தால்தான் வெற்றி பெற முடியும் என்பது சரியானது அல்ல. படிக்காதவர்களும் மேதைகளாக உருவான நாடு இந்தியா. பட்டப்படிப்பில் இளங்கலை (B.A.,) பட்டத்தை மட்டும் பெற்று சாதனை படைத்தோர் பலர் உண்டு.
பொருளாதாரம்
இளங்கலை (B.A.,) பட்டப்படிப்பில் பொருளாதார (Economics) பிரிவு படிக்கும் மாணவர்கள் சிறந்த பொருளாதார நிபுணர்களாக உருவாக வாய்ப்பு உள்ளது. இந்த படிப்பை முடித்துவிட்டு முதுகலை பொருளாதாரம் (M.A., Economics), முதுநிலை வணிக மேலாண்மை (M.B.A.,) உள்ளிட்ட படிப்புகளை படிக்கலாம். பொருளாதார பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு தேசிய அளவில் பொருளாதார சேவை (Indian economic services) போட்டி தேர்வுகள் மூலம் இந்திய ஆட்சிப் பணிக்கு (I.A.S.,) இணையான பதவிகளை பெற வாய்ப்புண்டு. பொருளாதார நிபுணத்துவம் இல்லாத எந்த ஒரு நாடும் வெற்றி அடைந்ததாக சரித்திரம் கிடையாது.
பொது நிர்வாகம்
இளங்கலை (B.A.,) பட்ட படிப்பில் பொது நிர்வாகம் (Public Administration) மற்றும் அரசியல் அறிவியல் (Political Science) பிரிவுகளை படிக்கும் மாணவர்களுக்கு அகில இந்திய அளவில் நடத்தப்படும் குடிமை தேர்வுகளில் (Civil Service) வெற்றி பெறுவதற்கான அறிவாற்றலை பெறுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. இந்த படிப்பை முடித்துவிட்டு முதுகலை (M.A.,), முதுநிலை வணிக மேலாண்மை (M.B.A.,) உள்ளிட்ட படிப்புகளை படிக்கலாம். அரசியல் அறிவியல், பொது நிர்வாகம் ஆகிய துறைகளை படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது ஜனநாயக நாடுகளின் மக்களாட்சி தத்துவத்திற்கு உறுதுணையாக இருக்கும்.
சரித்திரம்
இளங்கலை (B.A.,) பட்டப்படிப்பில் சரித்திர (History) பிரிவு படிக்கும் மாணவர்கள் பட்டப் படிப்பை படித்துக் கொண்டிருக்கும் போதே வேலை வாய்ப்புகளுக்கான போட்டி தேர்வுகளுக்கு (competitive examinations) தயாராக உரிய நேரமும் வாய்ப்புகளும் கிடைக்கின்றன. இந்த படிப்பை முடித்துவிட்டு முதுகலை (M.A.,), முதுநிலை வணிக மேலாண்மை (M.B.A.,) உள்ளிட்ட படிப்புகளை படிக்கலாம். வரலாற்றை புரிந்து கொள்ளாமல் ஒரு நாட்டின் வளர்ச்சியை காண இயலாது.
மொழி பாடங்கள்
இளங்கலை (தமிழ் ), இளங்கலை (ஆங்கிலம்), இளங்கலை (இந்தி), இளங்கலை (வெளிநாட்டு மொழிகள்) போன்ற படிப்புகளுக்கும் வேலை வாய்ப்புகளிலும் மற்ற வகைகளிலும் நல்ல வாய்ப்புகள் உள்ளன. தமிழ் மற்றும் ஆங்கிலம் பயிலும் மாணவர்களுக்கு பத்திரிக்கை துறையிலும் தொலைக்காட்சி உள்ளிட்ட ஊடகத்துறைகளும் சாதனை படைக்க வாய்ப்புகள் உள்ளது ஆசிரியர் பணிக்கும் மிகுந்த வாய்ப்புகள் உள்ளன. இளங்கலையில் வெளிநாட்டு மொழிகளைப் படிக்கும் மாணவர்களுக்கு மொழிபெயர்ப்பாளர் (Translators) பதவிகள் பெற வாய்ப்புகள் உள்ளன. வெளிநாட்டு மொழிகளின் மொழிபெயர்ப்பாளர்கள் பணிகளுக்கு மிகுந்த பற்றாக்குறை நிலவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மொழிப்பாட படிப்புகள் சிறந்த எழுத்தாளர்களையும் உருவாக்கும் ஆற்றல் கொண்டது.
இதழியல்
இளங்கலை (B.A.,) பட்டப்படிப்பில் இதழியல் (Journalism) பிரிவு படிக்கும் மாணவர்கள் பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி உள்ளிட்ட ஊடகங்களில் பணியாற்றும் வாய்ப்பை பெறுவதோடு விளம்பரம் (Advertising), மக்கள் உறவியல் (Public relations), பொதுமக்கள் தொடர்பு (Mass Communication) போன்ற துறைகளிலும் வெற்றிக்கான வாய்ப்புகள் உள்ளன. இந்தப் பாடப்பிரிவு சிறந்த எழுத்தாளர்களையும் சிந்தனையாளர்களையும் உருவாக்கும் வாய்ப்பாக அமையும்.
குற்றவியல்
இளங்கலை (B.A.,) பட்டப்படிப்பில் குற்றவியல் (Criminology) பிரிவு தமிழகத்தில் ஒரு சில கல்லூரிகளில் மட்டுமே உள்ளது. இதனைப் படித்து முடித்துவிட்டு முதுகலை குற்றவியல், காவல் அறிவியல், காவல் நிர்வாகம், தடய அறிவியல் (Forensic Science) போன்ற படிப்புகளை படிக்கலாம். மேலை நாடுகளில் இந்த படிப்பு அதிக முக்கியத்துவம் கொண்டதாக உள்ளது. இதனை படிப்பவர்கள் பலர் இந்திய காவல் பணியில் (I.P.S.,) அல்லது காவல்துறையில் அலுவலர்களாக சேர விரும்புகின்றனர்.
ராணுவ உத்திகள்
இளங்கலை (B.A.,) பட்டப்படிப்பில் ராணுவ உத்திகள் (Defence Strategies) பிரிவு தமிழகத்தில் ஒரு சில கல்லூரிகளில் மட்டுமே உள்ளது. தரைப்படை, விமானப்படை, கப்பல் படை உள்ளிட்ட இந்திய ராணுவத்தின் உயர் பதவிகளுக்கு நேரடியாக இணைய விருப்பம் உள்ளவர்களும் ராணுவத்தில் பணியாற்ற விருப்பம் உள்ளவர்களும் பாதுகாப்பு ஆராய்ச்சிகளில் ஈடுபட விருப்பம் உள்ளவர்களும் தேர்வு செய்வதில் முக்கியமான பிரிவாக இளங்கலை ராணுவ உத்திகள் பட்ட ,படிப்பு உள்ளது.
சமூகவியல்
இளங்கலை (B.A.,) பட்டப்படிப்பில் சமூகவியல் (Sociology) மற்றும் சமூகப்பணி (Social Work) பிரிவுகளை படிக்கும் மாணவர்களுக்கு அரசிலும் தன்னார்வ நிறுவனங்களிலும் வேலை வாய்ப்புகள் உள்ளன. தன்னார்வ அமைப்புகளை உருவாக்கி சிறந்த சமூக பங்களிப்பை வழங்கும் வாய்ப்புகளை இந்த படிப்பு வழங்குகிறது.
இன்னும்
இளங்கலை பட்டப்படிவில் நுண்கலை (Fine Arts), உளவியல் (Psychology), சுற்றுலா (Tourism) போன்ற பல பிரிவுகளும் உள்ளன. இளங்கலை படிப்புகளில் ஒவ்வொரு பிரிவுக்கும் ஒவ்வொரு தனித்தன்மை உள்ளது. இளங்கலை பட்ட படிப்பை படிக்கும் போதே மாநில அளவிலும் தேசிய அளவிலும் நடத்தப்படும் அரசு, பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்டவற்றின் வேலை வாய்ப்புகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கு தயாராகலாம். இளங்கலை படிப்பை படிக்கும் போதே ஏ.சி.எஸ்., (Company Secretaryship) ஐ.சி.டபிள்யூ.ஏ., (Cost Accountant) சி. ஏ., (Auditor) போன்ற படிப்புகளை பயிலும் மாணவர்களும் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள்
பூங்கா இதழ் (The News Park) கருத்து: இளங்கலை படிப்புகளை படித்து பல்வேறு சாதனைகளை படைக்கலாம் – வாழ்வில் வெற்றிகளும் பெறலாம் என்பதில் மாற்றமில்லை.