Advertisement

அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய “வாக்காளரியல்” (Voterology)

கடந்த 1999 ஆம் ஆண்டுக்கு முன்பு “வாக்காளரியல்” (Voterology)  என்ற வார்த்தை தமிழிலும் ஆங்கிலத்திலும் பிற மொழிகளிலும் பயன்படுத்தப்பட்டது இல்லை.  கடந்த 1994 ஆம் ஆண்டு திண்டுக்கல் மாவட்டத்தின் தேசிய வாக்காளர் விழிப்புணர்வு இயக்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக இருந்த டாக்டர் வீ. ராமராஜ் அவர்கள்  “வாக்காளரியல்” என்ற வார்த்தையை உருவாக்கி (coined the word “Voterology”) அதனை பயன்படுத்தியதோடு அதற்கான தர்க்க வாதங்களையும் (advocated) முன் வைத்தார். “வாக்காளரியல்” குறித்து 1999 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் (25 ஆண்டுகளுக்கு முன்பு) பிரபலமான தமிழ்  நாளிதழ் ஒன்றில் அவரால் எழுதப்பட்ட கருத்துக்களின் சுருக்கத்தை பார்ப்போம்.

  • இருபதாம் நூற்றாண்டில் அரசியல் அறிவியல் (Political Science) பல்வேறு வளர்ச்சிகளை பெற்றிருக்கிறது.  இதில் ஆட்சி அதிகாரம், அரசாங்க வடிவம், அதிகாரத்தை கைப்பற்றுதல் குறித்த சிந்தனைகளே முக்கியத்துவம் பெற்று இருக்கின்றன. அதற்கு இணையான முக்கியத்துவம் படைத்த வாக்காளர்கள், அவர்களது எண்ணங்கள், அவர்களது நலன் மற்றும்   மக்கள் பிரதிநிதிகள் தேர்வு முறை சீர்திருத்தங்கள் போன்றவை அதிகம் வளர்ச்சி பெறவில்லை. ஆனால், இவை இரண்டும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள்.
  • மனிதனின் தேவைதான் படைப்புகளின் காரணகர்த்தா.  ஒவ்வொரு துறைகள் குறித்த கல்வியும் ஆய்வுகளும் காலப்போக்கில் விரிவடைந்து புதிய பிரிவுகளை தோற்றுவித்து வளர்ச்சி அடைகின்றன. மனித குலத்தின் மேம்பாட்டிற்கு புதிய சிந்தனைகள் தோன்றி வளர்வது தேவையானது. தற்போது “வாக்காளரியல்”என்பது அரசியல் அறிவியலில் இருந்து உருவாகும்  புதிய சிந்தனைகளின் தொடக்கமாகும்.
  • வாக்காளர்களின் தகுதிகள், உரிமைகள், கடமைகள் மற்றும் இயல்புகள் போன்றவை பற்றியும் வாக்காளர் பட்டியல் தயாரிப்பதில் தொடங்கி தேர்தல்கள் முடியும் வரையான நடைமுறைகள் பற்றியும் உச்ச அதிகாரம் படைத்த வாக்களிக்கும் உரிமையின் மதிப்பை பற்றியும் ஆய்ந்தறிந்து கல்வி புகட்டுவதே “வாக்காளரியல்”ஆகும். கற்றுக் கொள்வதில் புதிய பிரிவாக “வாக்காளரியல்”  இருப்பதால் இன்னும் அதன் எல்லைகள் வரையறுக்கப்படவில்லை. மக்களின் வளமான வாழ்விற்கு ஜனநாயகத்திற்கும் வளர்ச்சிக்கும் வழி வகுப்பதே “வாக்காளரியல்”கல்வியின் பிரதான நோக்கமாகும். சிந்தனையாளர்களும் கல்வி நிலையங்களும் “வாக்காளரியல்” கல்வியில் தக்க கவனம் செலுத்த வேண்டிய நேரம் இதுவாகும்.
  • அரசியல் அறிவியல்   உலகில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களில் இளநிலை, முதுநிலை, ஆய்வு பட்டங்களுக்கான கல்வி பிரிவாக பல்லாண்டு காலமாக இருந்து வருகிறது. இதில் பழங்கால அரசியல் கொள்கைகள், தற்கால அரசியல் கொள்கைகள், பிராந்திய அரசியல் சிந்தனைகள், பொதுத்துறை ஆட்சியியல், அரசியலமைப்புகள், அரசியலமைப்பு வரலாறு போன்ற பல  பாடங்கள் இடம் பெற்றுள்ளன. அரசியலின் அடிப்படை ஆதாரமாக திகழும் “வாக்காளரியலுக்கு” அரசியல் அறிவியலில் தனி முக்கியத்துவம் வழங்கப்படவில்லை.
  • இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் கல்வி திட்டத்தில் அரசியல் அறிவியல் துறையில் இருந்து “வாக்காளரியல்” தனி பிரிவாக ஏற்படுத்தப்பட்டு “வாக்காளரியல்”  கல்வியும்   “வாக்காளரியல்”  ஆய்வுகளும் வளர வேண்டும். “வாக்காளரியல்”சிந்தனைகள், தேர்தல்களின் வரலாறு, தற்கால தேர்தல் முறைகள், இந்திய தேர்தல் முறை, தேர்தல் சட்டங்கள் மற்றும் ஒப்பீட்டு தேர்தல் முறைமைகள் போன்றவை  பாடங்களாக “வாக்காளரியல்”கல்வியில் சேர்க்கப்பட வேண்டும்.
  • ஒவ்வொரு தேசத்திலும் வாக்காளர்கள் விழிப்புணர்வு உடையவர்களாக இருக்கத் தேவையான “வாக்காளரியல்”கல்வியை மக்களுக்கு வழங்குவது அரசாங்கத்தின் அடிப்படை கடமையாகும். சில நாடுகளில் ராணுவ பயிற்சி மக்களுக்கு கட்டாயமானதாக   உள்ளதைப் போல வாக்காளராக  தகுதி பெறும் அனைவருக்கும் அடிப்படை வாக்காளர் கல்வி கட்டாயமாக்கப்பட வேண்டும்.
  • நாடாளுமன்றம், சட்டமன்றம் ஆகியவற்றிற்க்கான தேர்தல்கள் மட்டுமல்லாது நாட்டின் உள்ளாட்சி அமைப்புகள், கூட்டுறவு நிறுவனங்கள், தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட அனைத்து அமைப்புகளிலும்   ஒவ்வொருவரும் வாக்காளர் என்ற நிலையில் அவரது கடமை என்ன? என உணர வேண்டும். “வாக்காளரியல்”சிந்தனைகள் ஆக்கமும் ஊக்கமும் பெற்று ஜனநாயகம் தழைத்திட தகுந்த பங்கினை ஒவ்வொருவரும் வழங்க வேண்டும். ஐக்கிய நாடுகள் சபை “வாக்காளரியல்” தொடர்பான சர்வதேச ஆவணங்களை உருவாக்க வேண்டும்.

கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக “வாக்காளரியல்” என்ற வார்த்தையை உபயோகித்து அதன் அவசியத்தை தர்க்க ரீதியாக எடுத்துரைப்பதால் (Dr. V.Ramaraj, Father of Voterology, advocates the need of Voterology) டாக்டர் வீ. ராமராஜ்  அவர்களை “வாக்காளரியலின்  தந்தை”   என அழைப்பது பொருத்தமானதாக இருக்கும் என்றால் மிகையல்ல. வரும் 2025 ஜனவரி முதல் நாளில் தொடங்கப்பட உள்ள சர்வதேச அமைதிக்கான உத்திகள் கல்வி நிறுவனத்தின் கல்வித் துறைகளில் ஒன்றாக “வாக்காளரியல் மற்றும் அமைதி கலாச்சாரம்” விளங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கே.பி. மனோகரன்
கே.பி. மனோகரன்
அமைதிக்கான உத்திகள் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Google search engine

Latest Articles