ஊழல் ஒழிப்பு உயர்நிலை அமைப்பான தமிழ்நாடு லோக் ஆயுக்தாவில் நீதிபதியாக பதவியேற்றுள்ள டாக்டர் வீ. ராமராஜ் அவர்களுக்கு ஓசூர் வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு ஓசூர் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் சிவசங்கர் தலைமை வைத்தார். ஊழலற்ற நிர்வாகமும் வெளிப்படையான ஆட்சி முறையும் நல்லாட்சிக்கு தூண்களாக விளங்குகின்றன என்று ஏற்புரை வழங்கிய டாக்டர் வீ. ராமராஜ் தெரிவித்தார், அவர் பேசியதாவது.

Tamil Nadu Lokayuktha
மனித குலம் தோன்றியபோது ஊழல் பிறக்கவில்லை. ஆனால், மன்னர் ஆட்சி காலத்திலேயே ஊழல் தொடங்கிவிட்டது. பல நாடுகளில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஜனநாயக மரபு தோன்றிய பின்னர் மனிதர்களுக்கு புற்றுநோய் ஏற்படுவது போல ஆட்சியாளர்களையும் அரசு அலுவலர்களையும் ஊழல் பிடிக்கத் தொடங்கியது. உலகில் முதன்முதலாக கடந்த 1809 ஆம் ஆண்டு சுவீடனில் ஊழலை ஒழிப்பதற்காக ஆம்புட்ஸ்மேன் அமைப்பானது ஏற்படுத்தப்பட்டது இந்த அமைப்பு முறையை பல்வேறு நாடுகள் அமல்படுத்த தொடங்கின.
கடந்த 1964 ஆம் ஆண்டு சந்தானம் கமிட்டி பரிந்துரை அடிப்படையில் சென்ட்ரல் விஜிலென்ஸ் கமிஷன் மத்திய அரசால் அமைக்கப்பட்டது. மத்திய விஜிலென்ஸ் கமிஷனர் கமிசனின் தலைவராக தலைமை விஜிலென்ஸ் கமிஷனரும் அவருக்கு உதவியாக விஜிலென்ஸ் கமிஷனர்களும் நியமிக்கப்படுகிறார்கள். இதைப்போலவே பெரும்பாலான மாநிலங்களில் மாநில ஊழல் தடுப்பு அமைப்புகள் தோற்றுவிக்கப்பட்டன.
தமிழகத்திலும் கடந்த 1964 ஆம் ஆண்டு விஜிலன்ஸ் கமிஷனர் தலைமையில் மாநில விஜிலென்ஸ் கமிஷன் ஏற்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் விழிப்பு பணி மற்றும் ஊழல் தடுப்பு இயக்குரகம் (Directorate of Vigilance and Anti-Corruption – DVAC) ஏற்படுத்தப்பட்டு, அரசாங்கத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது.
இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு முதலாவது நிர்வாக சீர்திருத்த ஆணையம் மொரார்ஜி தேசாய் அவர்களின் தலைமையில் அமைக்கப்பட்டது. ஊழலை ஒழிப்பதற்காக மத்தியில் லோக்பால் என்ற அமைப்பையும் மாநிலங்களில் லோக் ஆயுக்தா என்ற அமைப்பையும் உருவாக்க பாராளுமன்றத்தில் சட்டம் இயற்ற வேண்டும் என்று கடந்த 1966 ஆம் ஆண்டில் இந்த ஆணையம் பரிந்துரை செய்தது.
1968 ஆம் ஆண்டிலும் அதன் பின்னரும் பலமுறை லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டமும் வரைவு முன் வரைவு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் சட்டமாக்கப்படவில்லை. இருப்பினும் கர்நாடகா, மத்திய பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான், அசாம் உட்பட பதினாறு மாநிலங்கள் லோக் ஆயுக்தாக்களை 2000 ஆண்டுகளுக்கு முன்பே ஏற்படுத்தி விட்டன.
பல்வேறு கடும் முயற்சிகளுக்குப் பின்னர் பாராளுமன்றத்தில் லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டமானது கடந்த 2013 ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. இதன் விளைவாக தேசிய அளவில் ஊழல் ஒழிப்பில் உயர் அமைப்பான லோக்பால் அமைக்கப்பட்டது. இருப்பினும் பல்வேறு மாநிலங்கள் மாநில அளவிலான ஊழல் ஒழிப்புக்கான உயர் அமைப்பான லோக் ஆயுக்தாவை அமைக்காமல் காலம் தாழ்த்தி வந்தன. உச்ச நீதிமன்றம் மாநிலங்களில் லோக் ஆயுக்தா அமைப்பதற்கு இறுதி கெடு விதித்த பின்னர் கடந்த 2018 ஆம் ஆண்டு தமிழ்நாடு லோக் ஆயுக்தா சட்டம் இயற்றப்பட்டது. தமிழகத்தில் முதல்முறையாக 2019 ஏப்ரல் மாதத்தில் லோக் ஆயுக்தா அமைக்கப்பட்டது.
அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகள் முதல் அரசின் கடைநிலை ஊழியரான அலுவலக ஊழியர் மீதான ஊழல் தொடர்பான வழக்குகளை விசாரிக்க அதிகாரம் கொண்டுள்ளது. லோக் ஆயுக்த அமைப்பு குறித்த விழிப்புணர்வு பொதுமக்களிடம் ஏற்படுத்தப்பட வேண்டும். தமிழ்நாடு அயுக்தாவில் புகார் அளிப்பது குறித்த விவரங்கள் அதன் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது இதனை மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். ஊழலற்ற நிர்வாகமும் வெளிப்படையான ஆட்சி முறையும் நல்லாட்சிக்கு தூண்களாக விளங்குகின்றன என்று லோக் ஆயுக்தா நீதிபதி வீ. ராமராஜ் பேசினார்
ஊழல்களை கண்டறிந்து நடவடிக்கை மேற்கொள்வது, ஊழல்களை தடுப்பது (handling corrupution), லஞ்சம் கேட்பவர்களை பொறி வைத்து பிடிப்பது (trap), வருமானத்துக்கு மீறி சொத்து சேர்த்தவர்கள் (Disproportionate Assets) மற்றும் அதிகாரத்தை தவறுதலாக பயன்படுத்துபவர்கள் (Abuse of Authority) மீதான நடவடிக்கைகளை மேற்கொள்வது உள்ளிட்டவை விழிப்பு பணி மற்றும் ஊழல் தடுப்பு இயக்குரக அமைப்பின் ஊழல் தடுப்பு (anti-corruption) பணிகளாகும்.
ஊழல் தொடர்பான தகவல்களை சேகரிப்பது (collection intelligence), திடீர் ஆய்வுகளை மேற்கொள்வது (surprise checks), துறை வாரியான விழிப்பு நடவடிக்கைகள் (internal vigilance) மற்றும் முன்னெச்சரிக்கை விழிப்பு நடவடிக்கைகள் (preventive vigilance) உள்ளிட்ட விழிப்பு பணிகளையும் இந்த அமைப்பு புரிகிறது வருகிறது.
துறைவாரியான ஒழுங்கு நடவடிக்கை, தீர்ப்பாயங்கள் மூலமாக ஒழுங்கு விசாரணை மற்றும் நீதிமன்றங்களில் குற்றம் சாட்டுதல் ஆகிய பணிகளை விழிப்பு பணி மற்றும் ஊழல் தடுப்பு ஆணையம் செய்கிறது. ஆரம்ப நிலை விசாரணை, முழுமையான விசாரணை, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து நீதிமன்றத்தில் வழக்கு நடத்துதல் போன்ற போன்ற படிநிலைகள் விசாரணை முறைகளில் உள்ளது.
ஒவ்வொரு நாடும் மக்களுக்கு நல்லாட்சி வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் கடந்த 1945 ஆம் ஆண்டு முதல் ஐக்கிய நாடுகள் சபை செயல்பட்டு வருகிறது. உலகெங்கும் ஊழலின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு அதனை தடுக்கும் விதமாக கடந்த 2003 அக்டோபர் 31 அன்று ஐக்கிய நாடுகள் சபையால் சர்வதேச ஊழல் தடுப்பு உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் ஒன்பதாம் தேதியை சர்வதேச ஊழல் தடுப்பு தினமாக ஐக்கிய நாடுகள் சபை அனுசரித்து வருகிறது என்று லோக் ஆயுக்தா நீதிபதி வீ. ராமராஜ் பேசினார்.
நிகழ்ச்சியில் ஓசூர் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் டி. எம். சிவசங்கர், செயலாளர் கோ. கதிரவன், முன்னாள் ஓசூர் வழக்கறிஞர் சங்கத் தலைவர்கள் எம். சிவண்ணா சௌத்ரி, எஸ். ராஜ் விவேக், உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினார்கள். ஜெயசீலன், அப்துல் ரஹீம், பார்த்திபன், மதியழகன், முருகன், பாஸ்கரன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான வழக்கறிஞர்களும் ஏராளமான பொதுமக்களும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
பூங்கா இதழ் (The News Park) கருத்து: லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க தக்க நடவடிக்கைகளை அரசுகளும் தன்னார்வ அமைப்புகளும் கல்வி நிறுவனங்களும் மேற்கொள்ள வேண்டும்.

