சேலத்தில் உள்ள மத்திய சட்டக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்பு தொடக்க விழா கல்லூரியின் தலைவர் சரவணன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் தமிழ்நாடு லோக் ஆயுக்தா உறுப்பினர் டாக்டர் வீ. ராமராஜ் கலந்துகொண்டு பேசியதாவது.
கல்லூரி காலத்தில் அறிவை தேடி (acquiring knowledge) வளர்த்துக் கொள்வது மாணவர்களின் கடமையாகும். படித்து முடித்த பின்னரும் நல்லவற்றை தொடர்ந்து கற்றுக்கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் தாம் கற்றுக்கொண்ட அறிவை சமூக முன்னேற்றத்திற்காக பரப்புவது (dissemination of knowledge) அவசியமானதாகும். மக்களிடையே சமூக, அரசியல், பொருளாதார, பண்பாடு மற்றும் சிவில் உரிமைகளை அறிவை பரப்பும் விழிப்புணர்வின் மூலம் மட்டுமே வலுப்படுத்த முடியும். ஒவ்வொரு நாடும் ராணுவத்துக்காக செலவு செய்யும் தொகையை மக்களின் நல்வாழ்வுக்கு செலவு செய்தால் உலகில் வறுமையை முற்றிலும் ஒழிப்பதோடு அனைவருக்கும் மிகச் சிறப்பான கல்வியை கட்டணமில்லாமல் வழங்க இயலும். உலக அமைதியை ஏற்படுத்துவது சவால் நிறைந்தது என்ற நிலையில் அதனை சமாளிக்க அறிவு பரவல் முக்கியமானதாகும் என்று ராமராஜ் தெரிவித்தார்.
உலகெங்கும் பரந்து விரிந்துள்ள ஊழலை முற்றிலும் ஒழிப்பது எளிதானதல்ல. ஆனால், இயலாததும் அல்ல. ஊழலை ஒழிக்க மக்களிடையே தகுந்த விழிப்புணர்வை ஏற்படுத்த அனைத்து தரப்பினரும் பாடுபட வேண்டும். மாணவர்களால் மக்களிடையே ஊழல் எதிர்ப்பு பிரச்சாரத்தை நாடு முழுவதும் கொண்டு செல்ல முடியும் என்று ராமராஜ் மாணவர்களுக்கு வேண்டுகோள் வைத்தார்.
லோக் ஆயுக்தா என்பதற்கும் லோக் அதாலத் என்பதற்கும் உள்ள வேறுபாடு பெரும்பாலானவர்களுக்கு தெரிவதில்லை. அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் மாநில அளவிலான உயர் அமைப்பு லோக் ஆயுக்தா ஆகும். அனைத்து நீதிமன்றங்களிலும் உள்ள வழக்குகளில் சமரசம் பேசுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளும் அமைப்பு லோக் அதாலத் ஆகும். ஊழலுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் மன்றமாக தேசிய அளவில் லோக்பாலும் மாநில அளவில் லோக் ஆயுக்தாவும் செயல்படுகிறது என்ற விழிப்புணர்வை நாடு முழுவதும் உள்ள சட்டக் கல்லூரி மாணவர்கள் மக்களிடையே ஏற்படுத்த வேண்டும் என்று ராமராஜ் கேட்டுக்கொண்டார்.
கல்லூரிகளில் படிக்கும் போது தேர்ந்தெடுத்துள்ள படிப்பை மட்டும் படிப்பது தற்போதைய வாழ்க்கை சூழலுக்கு போதுமானதல்ல. கல்லூரி காலத்தில் நல்ல குணங்களையும் ஒழுக்கத்தையும் வளர்த்துக் கொள்வதும் பலதரப்பட்ட திறன்களை கற்றுக் கொள்வதும் அவசியமானதாகும். மாணவர்கள் கல்லூரியில் படிக்கும் போதே இலக்கை தேர்வு செய்து அதற்காக திட்டமிட்டு தொடர்ந்து பணியாற்ற வேண்டும். சரியாக நேரத்தை திட்டமிட்டு தொடர்ச்சியாக பணியாற்றுவதன் மூலமே எண்ணிய இலக்கை அடைய முடியும். சமுதாயத்தில் வெற்றியாளர்களுக்கு விடுமுறை கிடையாது என்பதையும் முயற்சி கைவிட்டாலும் முயற்சியை நாம் கைவிடக்கூடாது என்பதையும் மனதில் கொண்டு மாணவர்கள் செயல்பட வேண்டும் என்று ராமராஜ் மாணவர்களை கேட்டுக் கொண்டார்.
ஐக்கிய நாடுகள் சபையின் ஊழலுக்கு எதிரான ஒப்பந்தம் 2003 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு 2005 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது. இந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டு அதனை ஏற்றுக் கொண்டுள்ளது. ஊழலுக்கு எதிரான சர்வதேச ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாடுகளை இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை அழைத்து ஆய்வு மாநாட்டை ஐக்கிய நாடுகள் சபையின் குற்றங்களுக்கு எதிரான அமைப்பு (United Nations Office of the Drug and Crimes) நடத்துகிறது இதற்கான பதினோராம் மாநாடு வரும் டிசம்பர் மாதத்தில் கத்தாரில் நடைபெற உள்ளது என்று ராமராஜ் தெரிவித்தார்.
முன்னதாக கல்லூரி தலைவர் சரவணன் பேசுகிறீர் சட்டம் படிக்கும் மாணவர்கள் சட்டத்தை காப்பாற்ற வேண்டுமே தவிர எக்காரணத்தை கொண்டும் அதனை மீறக் கூடாது என்றும் தீயவற்றை ஒதுக்கி நல்லவற்றை எடுத்துக் கொண்டு கல்லூரியில் படித்து முன்னேற வேண்டும் என்றும் மாணவர்களை கேட்டுக் கொண்டார். இந்த நிகழ்வில் சட்டக் கல்லூரி பேராசிரியர்களும் நூற்றுக்கணக்கான முதலாம் ஆண்டு மாணவர்களும் அவரது அவர்களது பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.
பூங்கா இதழ் (The News Park) கருத்து: கல்லூரி காலத்தில் படித்து அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள்! அதற்கு பின்னரும் தொடர்ந்து படியுங்கள்! கற்ற கல்வியை பயன்படுத்தி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்! என்ற டாக்டர் வீ. ராமராஜ் அவர்களது கருத்து போற்றுதலுக்குரியது.