Friday, June 13, 2025
spot_img

லோக்சபா எம்.பி., ராஜ்யசபா எம்.பி., வேறுபாடுகள் என்ன? போதிய எம்எல்ஏக்கள் இல்லாமல் அதிமுக இரண்டு ராஜ்யசபா உறுப்பினர்களை வென்றது எப்படி?

இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி அமைக்கப்பட்டுள்ள பாராளுமன்றத்தில் மக்களவை (லோக்சபா) மாநிலங்களவை (ராஜ்யசபா) என்ற இரண்டு பிரிவுகள் உள்ளன. மக்களவையில் 545 உறுப்பினர்களும் (எம்.பி)  மாநிலங்களுடைய 250 உறுப்பினர்களும் (எம்.பி) இருக்க வேண்டும் என்று இந்திய அரசியலமைப்புச் சட்டம் வரையறை செய்துள்ளது. பணம் சம்பந்தப்பட்ட மசோதாக்கள் நிறைவேற பாராளுமன்றத்தில் மக்களவை ஆதரவு இருந்தால் போதுமானது. மற்ற அனைத்து சட்ட மசோதாவும் இரண்டு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே சட்டமாக மாறுகிறது. 

நாடு முழுவதும் 543 மக்களவை உறுப்பினர்கள் (எம்.பி) பொதுத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். ஆங்கிலோ இந்தியர்களுக்கான பிரதிநிதித்துவ அடிப்படையில் இருவரை இந்திய குடியரசுத் தலைவர் நியமிக்கிறார். பொதுத் தேர்தல் மூலம் தேர்வு செய்யப்படும் லோக்சபா எம்.பி-க்களின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் எனினும் லோக்சபாவில் யாருக்கும் இறுதி பெரும்பான்மை இல்லாமல் (majority) அரசு கவிழ்ந்து புதிய தேர்தல் அறிவிக்கப்பட்டால் லோக்சபா உறுப்பினர்கள் ஐந்தாண்டு காலத்தை நிறைவு செய்ய இயலாது.

மாநிலங்கள் அவையான ராஜ்யசபாவிற்கு ஒவ்வொரு மாநிலங்களிலும் எம்எல்ஏ-க்கள் வாக்களித்து 238 உறுப்பினர்களை நாடு முழுவதும் தேர்வு செய்கிறார்கள். கலை, இலக்கியம் உள்ளிட்டவற்றில் சிறப்பு வாய்ந்த 12 நிபுணர்களை தேர்வு செய்து மாநிலங்களவை உறுப்பினர்களாக குடியரசுத் தலைவர் நியமனம் செய்கிறார். மாநிலங்களவைக்கு தேர்வாகும் உறுப்பினர்களின் பதவிக்காலம் ஆறு ஆண்டுகள் ஆகும். மாநிலங்களவை உறுப்பினர்கள் ஒரே நேரத்தில் ஓய்வு பெறுவதில்லை. மாறாக, இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மூன்றில் ஒரு பங்கு மாநிலங்களவை உறுப்பினர்கள் ஓய்வு பெறும் வகையில் அரசியலமைப்புச் சட்டம் வழி வகுத்துள்ளது.

இந்த வகையில் மாநிலங்களவையில் தமிழகத்துக்கு 18 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் ஆறு உறுப்பினர்கள் வரும் ஜூலை 24 அன்று ஓய்வு பெறுகிறார்கள். இதனை தொடர்ந்து கடந்த மாதம் தமிழகத்தில் இருந்து ஓய்வு பெறும் ராஜ்யசபா எம்பி-பதவி இடங்களுக்கு தேர்தல் நடத்துவதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. 

தற்போதைய நிலவரப்படி, தமிழக சட்டமன்றத்தில் உள்ள 34 எம்எல்ஏக்கள் வாக்களித்தால்தான் ஒரு ராஜ்யசபா உறுப்பினரை தேர்வு செய்ய முடியும். இந்த வகையில் உரிய எம்எல்ஏக்களை திமுக பெற்று இருப்பதால் மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்கு நான்கு வேட்பாளர்களை அறிவித்தது. இந்த வகையில் ராஜ்ய சபா எம்.பி. வேட்பாளர்களாக இருவரை அதிமுக அறிவித்தது. ஆனால், அந்த இருவரும் தேர்ந்தெடுக்கப்பட 68 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவை. 

எடப்பாடி பழனிச்சாமியின் தலைமையை ஆதரித்து அதிமுகவில் உள்ள எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 62 மட்டுமே.  வெற்றிக்கு தேவையான 68 எம்எல்ஏக்கள் அதிமுக தலைமையின் வசம் நேரடியாக இல்லாத நிலையில் (அதாவது, ஆறு எம்எல்ஏக்கள் குறைவாக உள்ள நிலையில்) அதிமுகவில் இருந்து பிரிந்து சென்று ஓபிஎஸ் பக்கமும் அதிமுகவிலேயே இருந்து கொண்டு ஓபிஎஸ் பக்கமும் இருக்கும் எம்எல்ஏக்கள், பாரதிய ஜனதா கட்சியின் எம்எல்ஏக்கள் அல்லது பாட்டாளி மக்கள் கட்சியின் 4 எம்எல்ஏக்கள் ஆகியோரில் ஆறு எம்எல்ஏக்கள் ஆதரவளித்தால்தான் அதிமுகவின் இரண்டு ராஜ்யசபா வேட்பாளர்களும் வெற்றி பெற முடியும்.  ஆனால், காலியாக அறிவிக்கப்பட்ட ஆறு ராஜசபா  உறுப்பினர்களுக்கான பதவிகளுக்கு திமுக 4 வேட்பாளர்களை மட்டுமே அறிவித்ததாலும் மீதமுள்ள இரண்டு காலியிடங்களுக்கு இரண்டு வேட்பாளர்களை அதிமுக அறிவித்ததாலும் வாக்கு பதிவு இன்றி அதிமுகவின் இரண்டு வேட்பாளர்களும் வெற்றி பெற்று விட்டார்கள்.

திமுக தரப்பில் ஐந்தாவது ஒரு வேட்பாளரை ராஜ்யசபா தேர்தலில் அறிவித்திருந்தால் எம்எல்ஏக்கள் வாக்களிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கும். அதிமுகவின் இரண்டாவது வேட்பாளருக்கு 34 வாக்குகள் விழா விட்டால் ஆறாவது இடத்திற்கு மீண்டும் தேர்தல் நடத்தப்படும். அப்போது, பெரும்பான்மை அடிப்படையில் மற்றொரு (ஐந்தாவது) ராஜ்யசபா உறுப்பினர் பதவியும் திமுக கைப்பற்றியிருக்கும். அதற்கான வாய்ப்பு இருந்தும் திமுக ஏன் ஐந்தாவது வேட்பாளரை ராஜ்யசபா தேர்தலுக்கு அறிவிக்கவில்லை என்பதற்கு காரணம் பின்வரும் கணக்குதான்.

(தொடர்ச்சி கீழே உள்ள அட்டவணை செய்திகளுக்கு கீழ்)

கீழே உள்ள தலைப்புகளை படியுங்கள்! பிடித்தால் தலைப்புகளை தொடுங்கள்! முழுவதும் படியுங்கள்!
 
உங்களையும் உங்கள் எண்ணங்களையும் அடையாளப்படுத்த – உங்கள் படைப்புகள் பூங்கா இதழ் மற்றும் நுகர்வோர் பூங்காவில் வெளியாக வேண்டுமா? இங்கே தொடவும் (Click Here!)
 
லோக் ஆயுக்தா, நுகர்வோர் நீதிமன்றங்கள், குழந்தைகள் ஆணையம் உள்ளிட்டவை குறித்த விழிப்புணர்வு மக்களிடையே ஏற்படுத்தப்பட வேண்டும் – லோக் ஆயுக்தா உறுப்பினர் (நீதிபதி) டாக்டர் வீ. ராமராஜ் வலியுறுத்தல்.
 
வாக்காளரியல் (Voterology) என்றால் என்ன? அறிந்து கொள்ளுங்கள்! சிந்தனைகள் பரவ அனைவருக்கும் பகிருங்கள்! இங்கே தொடவும் (Click Here!)  
கருத்துக்களும் புகைப்படமும் வெளியாக வெளியாக வேண்டுமா? விவரங்களுக்கு இங்கே தொடவும்.  (Click Here!)
 
இணைய பத்திரிகைகளில் கௌரவ தூதர், இயக்குனர், புரவலர், விரிவாக்க அலுவலர், ஆசிரியர் – ஆசிரியர் குழு உறுப்பினர், தன்னார்வலர் பொறுப்புகளில் இணைய விருப்பமா? இங்கே தொடவும் (Click Here!)
 
பயிற்சி கட்டுரையாளராக (Columnist Trainee) அல்லது பயிற்சி சந்தைபடுத்துனராக (மார்க்கெட்டிங் ட்ரெய்னிங்யாக) அல்லது சந்தைப்படுத்துதல் முகவராக (மார்க்கெட்டிங் ஏஜெண்டாக) பணியாற்ற விருப்பமா? இங்கே தொடவும் (Click Here!)  

ஒருவேளை ஐந்தாவது வேட்பாளரை திமுக அறிவித்து இருந்தால் இரண்டு நிகழ்வுகள் ஏற்பட வாய்ப்புகள் இருந்தன. முதலாவதாக, அதிமுகவின் இரண்டாவது வேட்பாளருக்கு போதிய 34 எம்எல்ஏக்கள் ஆதரவு  வாக்கு கிடைக்கவில்லை எனில் மீண்டும் கடைசி ஒரு ராஜ்யசபா உறுப்பினருக்கான தேர்தல் நடத்தப்படும் போது பெரும்பான்மை அடிப்படையில் திமுக ஐந்தாவது எம்பி பதவியையும் கைப்பற்றலாம். 

இரண்டாவதாக, அதிமுகவில் இருந்து பிரிந்து சென்று ஓபிஎஸ் பக்கமும் அதிமுகவிலேயே இருந்து கொண்டு ஓபிஎஸ் பக்கமும் இருக்கும் எம்எல்ஏக்கள், பாரதிய ஜனதா கட்சியின் 4 எம்எல்ஏக்கள் அல்லது பாட்டாளி மக்கள் கட்சியின் எம்எல்ஏக்கள் ஆகியோரிலிருந்து ஆறு  எம்எல்ஏக்கள் அதிமுகவின் இரண்டாவது வேட்பாளருக்கு ஆதரவு அளித்து வாக்களித்து விட்டால் அதிமுக வேட்பாளர் வெற்றியடைவதோடு திமுகவின் ஐந்தாவது வேட்பாளர் தோல்வி அடைந்து விடுவார்.

திமுக ஐந்தாவது வேட்பாளரை அறிவிக்கும் போது, இரண்டாவது நிகழ்வு நிகழ்ந்து அதிமுக வேட்பாளர்கள் இருவரும் வெற்றி பெற்று திமுகவின் ஐந்தாவது வேட்பாளர் தோல்வி அடைந்தால் அந்த தோல்வி திமுகவுக்கு பின்னடைவாக கருதப்படும். அத்துடன் அதிமுகவின் தலைமையில் மற்ற கட்சிகளின் எம்எல்ஏக்களும்   வாக்களிக்க ஒற்றுமையை உருவாக்கும் வாய்ப்பை திமுகவே ஏற்படுத்திக் கொடுத்ததாகவும் ஏற்படுத்திக் கொடுத்த நிலையும் ஏற்படும். 

இந்த கணக்கு அடிப்படையில்தான், அதிமுகவுக்கு இரண்டு ராஜ்யசபா உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க 68 எம்எல்ஏக்கள் அதிமுகவுக்கு இல்லை எனினும் அதிமுக சார்பில் ராஜ்யசபாவுக்கு போட்டியிட இரண்டு வேட்பாளர்களை அறிவித்து அதில் வெற்றியும் பெற்றுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி. 

பூங்கா இதழ் (The News Park) கருத்து: அரசியலில் ராஜதந்திர கணக்குகள் தான் வெற்றி பெறுமோ?

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Google search engine

Latest Articles