பழனி நகராட்சி மேல்நிலை பள்ளியில் முன்னாள் மாணவர்கள் அமைப்பு நடத்திய பள்ளியின் நூற்றாண்டு விழா கடந்த 11 நவம்பர் 2025 ஆம் தேதியில் நடைபெற்றது. காலையில் நடைபெற்ற முதல் அமர்வுக்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் செ. சரவணன் தலைமை வகித்தார். பள்ளியின் சார்பில் தற்போதைய தலைமை ஆசிரியர் மா.சுதா அவர்களும் முன்னாள் மாணவர்கள் அமைப்பின் சார்பில் இதே பள்ளியில் படித்தவரும் இதே பள்ளியில் முன்னாள் தலைமை ஆசிரியராக பணியாற்றியவர்களுமான வெ. மனோகரன் அவர்களும் வரவேற்புரை நிகழ்த்தினார்கள்.
நூற்றாண்டு நுழைவாயில் வாயிலை திறந்து வைத்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறப்புரையாற்றினார். அய்யன் திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்து உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி சிறப்புரை நிகழ்த்தினார். விழாவில் நூற்றாண்டு சிறப்பு மலர் வெளியிடப்பட்டது. விழாவில் கலந்து கொண்ட முக்கிய பிரமுகர்களுக்கும் முன்னாள் ஆசிரியர்களுக்கும் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.
மதியம் நடைபெற்ற இரண்டாவது அமர்வுக்கு தமிழ்நாடு லோக் ஆயுக்தா உறுப்பினர் டாக்டர் வீ. ராமராஜ் தலைமை வகித்தார் இந்த அமர்வில் திண்டுக்கல் மக்களவை உறுப்பினர் இரா. சச்சிதானந்தம், பழனி சட்டமன்ற உறுப்பினர் இ. பெ. செந்தில்குமார், நகரமன்ற பழனி நகர மன்ற துணைத் தலைவர் கு. கந்தசாமி ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள். தமிழ்நாடு லோக் ஆயுக்தா உறுப்பினர் டாக்டர் வீ. ராமராஜ் தலைமை உரையில் பேசியதாவது.
கடந்த 1918 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நகராட்சி தொடக்கப்பள்ளி வளர்ச்சி அடைந்து உயர்நிலைப் பள்ளியாக உயர்ந்து கடந்த 1978 ஆம் ஆண்டில் மேல்நிலைப் பள்ளியாக மாறி கடந்த 107 ஆண்டுகளில் பல்லாயிரக்கணக்கானவருக்கு கல்வி செல்வத்தை வழங்கியுள்ளது. பெருமைமிகு இப்பள்ளியில் இரண்டு ஆண்டு காலம் (1983-85) மேல்நிலை பள்ளி படிப்பை நான் பயின்றிருப்பது எனக்கு பெருமிதமாக உள்ளது என டாக்டர் வீ. ராமராஜ் தெரிவித்தார்.
அரசு மற்றும் அரசு சார்ந்த அமைப்புகள் நடத்தும் பள்ளிகளில் முன்னாள் மாணவர் சங்கங்கள் வலுப்படுத்தப்பட வேண்டும். இந்த சங்கங்கள் பள்ளியின் உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும் மாணவர்களின் முன்னேற்றத்தை உறுதிப்படுத்துவதற்கும் பாடுபட வேண்டும். பள்ளியின் கல்வித்தரத்தையும் பள்ளி நிர்வாகத்தையும் பள்ளி மேலாண்மை குழுக்களின் செயல்பாடுகளையும் தன்னார்வமாக கண்காணிக்கும் ஒரு அமைப்பாக முன்னாள் மாணவர்கள் சங்கங்கள் ஒவ்வொரு பள்ளியிலும் இயங்க வேண்டும் என டாக்டர் வீ. ராமராஜ் பேசினார்.
அனைத்து பள்ளிகளிலும் அரசாணை மூலமாக பள்ளி மேலாண்மை குழுக்கள், பெற்றோர் ஆசிரியர் கழகம் ஆகியன அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. சமூக நலத்துறை அரசாணை அடிப்படையில் ஊரகப்பகுதிகளில் கிராம குழந்தைகள் பாதுகாப்பு குழுக்களும் ஊராட்சி ஒன்றிய அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழுக்களும் மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழுக்களும் செயல்பட்டு வருகின்றன. இதைப்போலவே நகரப் பகுதிகளில் பேரூராட்சி குழந்தைகள் பாதுகாப்பு குழுக்களும் நகராட்சி குழந்தைகள் பாதுகாப்பு குழுக்களும் மாநகராட்சி வார்டு அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழுக்களும் செயல்பட்டு வருகின்றன.
அரசு மற்றும் அரசு சார்ந்த பள்ளிகளின் முன்னாள் மாணவர்கள் சங்கங்கள், பள்ளி மேலாண்மை குழுக்கள், பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் ஆறு வகையான குழந்தை பாதுகாப்பு குழுக்கள் ஆகியவற்றுக்கு சட்ட அந்தஸ்து வழங்கும் வகையில் தமிழ்நாடு மாணவர்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புச் சட்டத்தை இயற்றினால் மாணவர்களுக்கும் குழந்தைகளுக்கும் பயனுள்ளதாக அமையும் என்ற கருத்தை டாக்டர் வீ. ராமராஜ் முன்வைத்தார்.

பழனி நகர மன்ற தலைவர் இரா. உமா மகேஸ்வரி, முன்னாள் நகர மன்ற தலைவர் ஆ. வேலுமணி, முதன்மை கல்வி அலுவலர் ப. உஷா, நகராட்சி ஆணையர் டிட்டோ, கமலேஷ் ஜுவல்லரி உரிமையாளர் பி. கண்ணன், கந்த விலாஸ் என். செல்வக்குமார், கந்த விலாஸ் என். பாஸ்கரன், அரிமா சுப்புராஜ் உள்ளிட்டவர்களும் பள்ளியின் முன்னாள் ஆசிரியர்களும் ஏராளமான முன்னாள் மாணவர்களும் பொதுமக்களும் விழாவில் கலந்து கொண்டனர்.
வெ. மனோகரன், பி சிவனேசன், பா. சந்திரசேகர ஹரிஹர சுவாமிநாதன், ஆ. நந்திவர்மன், வீ. அழகிரிசாமி, ந. தொல்காப்பியன், மு. முருகானந்தம் ஆகிய ஒருங்கிணைப்பு மற்றும் நிதி குழுவினரும் எஸ். முத்துக்குமாரசாமி, மீ. பழனிச்சாமி, வீ. தேவசகாயம், பி. விவேகானந்தன், எம். சேக் அப்துல்லா, வீ. சீனிவாசன், எம். குருசேவ், டி. சுப்பிரமணி, சு. தம்பரம், கே. பாலசுப்பிரமணியன், வி. பாலகிருஷ்ணன், ஜி. பத்மநாபன், சி. பாலாஜி கணேசன், வை. ராஜசேகர், ஆர். திருமுருகன், ஏ. கே. சுப்பிரமணி, வேலு. இளங்கோ ஆகிய செயற்குழு உறுப்பினர்களும்முன்னாள் மாணவர் அமைப்பின் சார்பில் விழாவுக்கான ஏற்பாடுகளை முன்னின்று நிகழ்த்தினார்கள்.
பூங்கா இதழ் (The News Park) கருத்து: குழந்தை பாதுகாப்பு குழுக்களுக்கும் பள்ளி மேலாண்மை குழுக்களுக்கும் முன்னாள் மாணவர் சங்கங்களுக்கும் சட்ட அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்ற கருத்து வரவேற்கத்தக்கது.



