தயவு செய்து நான் சொல்வதை ஒரு வினாடி கேட்டுவிட்டு செல்
ஒரு முறை ஒரு குதிரை வீரன் தனது குதிரையில் பாலைவனத்தில் பயணித்துக் கொண்டிருந்தான். அப்போது தாகத்தால் தவித்த ஒருவனை கண்டு குதிரை நிறுத்தினான். தண்ணீர் கொடுத்ததும் குடித்துவிட்டு அவன் சற்று அமைதியானான். ”நீ ஏதோ கேட்க வெட்கப்படுகிறாய், நான் வேண்டுமானால் உன்னை நீ போக வேண்டிய இடத்திற்கு கொண்டுபோய் சேர்க்கட்டுமா?” என்றான். ”உங்கள் தாராள மனதுக்கு மிக்க நன்றி, நானும் உதவி கேட்கலாம், என்றுதான் இருந்தேன் ஆனால் வெட்கமாக இருந்தது” என்றான்.
குதிரை வீரன் சிரித்தவாறே, “ஏறுங்கள்” என்றான். அவன் ஏற முயன்ற போது அவனால் ஏற முடியவில்லை, “நான் ஒரு உழவன், குதிரை மீது ஏறி எனக்கு பழக்கம் இல்லை” என்றான். குதிரை வீரன் கீழே இறங்கி அவன் ஏறி அமர உதவி புரிந்தான். குதிரை மீது அவன் ஏறியவுடன், தேர்ச்சி பெற்ற குதிரை வீரனாக குதிரை மீது தட்டி வேகமாக அவன் குதிரையுடன் நகரத் தொடங்கினான். தலையில் கையை வைத்த குதிரை வீரன், தான் ஒரு பெரும் கொள்ளைக்காரனிடம் சிக்கியது தெரியவந்தது.
”தயவு செய்து நான் சொல்வதை ஒரு வினாடி கேட்டுவிட்டு செல்” என்று குதிரை வீரன் சப்தமிட்டான். ‘இவனது அழைப்பு சற்று வித்தியாசமாக இருக்கிறது’ என்று திருடன் திரும்பிப் பார்த்து, “என்ன விசயம் சொல்!” என்றான். “தயவு செய்து இந்த விசயத்தை ஊரில் யாரிமும் சொல்லிவிடாதே!” என்று கெஞ்சினான். ”ஏன் வீரன் என்ற உன் நற்பெயர் கெட்டுவிடும் என்று பயப்படுகிறாயா?” என்று கேட்டான். ”இல்லை, மக்களிடையே ஒருவருகொருவர் உதவிக்கரம் நீட்டுவது நின்று விடும் என்று அஞ்சுகிறேன்” என்றான். கன்னத்தில் ஒரு அறை விழுந்தவன் போல், திருடன் குதிரையை விட்டும் இறங்கி நடையை கட்டினான்.
மனைவியாக நான்கு இளவரசிகளின் யாரை தேர்வு செய்வது?
ஒரு நாட்டில் கண்பார்வை இல்லாத ஒரு மன்னன் ஆண்டு வந்தான். அவனுக்கு ஒரு பட்டத்து இளவரசன் இருந்தான்.. ஒரு நாள் அவனை அழைத்து “மகனே! இந்த தேசத்திற்கு நீ மன்னன் ஆகும் நேரம் வந்து விட்டது. நீ அரியணை ஏற்க வேண்டும் அதற்கு முன் உனக்கு திருமணம் செய்ய வேண்டும் உனக்கு எப்படிப்பட்ட துணை வேண்டும்” என்று கேட்க, அதற்கு இளவரசன் “அப்பா நான்கு சிற்றரசர்களின் மகள்கள் இருக்கிறார்கள் அவர்களில் ஒருவரை நான் தேர்ந்தெடுக்க ஆசைப்படுகிறேன்.. ஆனால் யாரை தேர்ந்தெடுப்பது என்று தெரியவில்லை. நீங்கள் தான் அதற்கு உதவ வேண்டும்” என்று சொன்னான்.
“கவலைப்படாதே அந்த நால்வருக்கும் நான் ஒரு சோதனை வைக்கிறேன் அதில் யார் வெற்றி கொள்கிறார்களோ அவர்களை நீ திருமணம் செய்து கொள்ளலாம். அதுவரை நீ அரண்மனையில் இரு.. உனக்கு உடம்பு சரியில்லை வயிற்று வலியில் துடிப்பதாக சொல்லப் போகிறேன்” என்றார் மன்னன்.
நான்கு இளவரசிகள் அழைக்கப்பட்டார்கள். மன்னன் அவர்களிடம் சொன்னான் “பட்டத்து இளவரசன் உடம்பு சரியில்லை அவனுக்கு தீராத வயிற்று வலி ஏற்பட்டிருக்கிறது. அதனால் நீங்கள் ஒரு சிறந்த சூப்பை தயார் செய்யுங்கள் முதலில் நாம் அதை சுவைத்து பார்ப்பேன்.. எந்த உணவு நன்றாக இருக்கிறதோ அந்த உணவை சமைத்தவர் அடுத்த பட்டத்து இளவரசி ஆவார்” என்று சொல்ல.. நான்கு இளவரசிகள் போட்டி போட்டு கொண்டு உணவை தயார் செய்ய ஆரம்பித்தனர். ஒரு மணி நேரம் கழித்து மன்னரிடம் சுவைக்க எடுத்து வரப்பட்டது.
முதல் இளவரசி சிக்கனை கொண்டு நல்ல சூப் ஒன்றை தயார் செய்து இருந்தாள். மன்னர் சுவைத்து பார்த்தார் சுவை அலாதியாக இருந்தது. இரண்டாம் இளவரசி காய்கறிகள் மற்றும் நிறைய மசாலாக்கள் சேர்த்து அருமையான சூப் தயாரித்து இருந்தார்.. அதுவும் அமிர்தமாக இருந்தது. மூன்றாவது இளவரசி வெண்ணெய் சேர்த்து மணக்கும் சூப் ஒன்றை தயார் செய்து இருந்தார்.. அதுவும் சுவைக்க அமிர்தம் போல் இருந்தது.
ஆனால், நான்காம் இளவரசி செய்த சூப் உப்பு காரம், மசாலா இல்லாமல், சூடு அதிகம் இல்லாமல் இருந்தது சுவை ஒன்றும் சொல்லி கொள்ளும்படி இல்லை. முதல் மூன்று இளவரசியும் நான்காவது இளவரசியை பார்த்து நகைத்தனர். கண்டிப்பாக முதல் மூன்றில் ஒருவர் தான் மன்னன் தேர்ந்து எடுப்பார் என்று முடிவு செய்து இருந்தனர். ஆனால், மன்னன் நான்காவது இளவரசியை தேர்ந்து எடுத்தார்.
அவையில் இருந்த அனைவரும் மன்னனிடம் ஏன் என்று கேட்க அதற்கு மன்னன் சொன்னார், முதல் மூன்று பேரும் எப்படி வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தார்கள். ஆனால், நான்காவது இளவரசி மட்டும் தான் இளவரசனுக்கு உடம்பு சரியில்லை வயிறு சரியில்லை அதனால் உப்பு, காரம், எண்ணெய் மற்றும் சூடு குறைவாக இருக்கும் சூப்பை தயார் செய்தார். அவர் தான் உண்மையில் குடும்பத்திற்கும் ஏன் நாட்டிற்கும் சிறந்தவராக இருப்பார் என்று சொல்லி முடித்தார்.
பூங்கா இதழ் (The News Park) கருத்து: புத்திசாலித்தனத்தால் சூழ்நிலைகளை வெல்லலாம்.