மனித உடலில் மொத்தம் எழுபத்தெட்டு முக்கிய உறுப்புகள் உள்ளன. இந்த உறுப்புகள் ஒன்றிணைந்து பல்வேறு உறுப்பு அமைப்புகளை உருவாக்குகின்றன. இந்த 78 உறுப்புகளில் இதயம் (heart), மூளை (brain), சிறுநீரகம் (kidney_, கல்லீரல் (liver) மற்றும் நுரையீரல் (lungs) ஆகிய ஐந்து உறுப்புகள் உயிர்வாழ்வதற்கு அவசியமானவை. இந்த ஐந்து உறுப்புகளில் ஏதேனும் ஒன்று சில நொடிகள் கூட செயல்படாமல் இருந்தால் மரணம் ஏற்படும்.
மனித உடல் செழுமையான முறையில் இயங்குவதற்குத் தேவையான 500-க்கும் மேற்பட்ட செயல்பாடுகளில் கல்லீரல் பங்கு வகிப்பதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள். இன்று கல்லீரல் பற்றி இங்கு அறிவோம். கடந்த 27 பிப்ரவரி 2025 அன்று இதயத்தைப் பற்றியும் கடந்த 26 மார்ச் 2025 அன்று சிறுநீரகத்தை பற்றியும் விரிவான கட்டுரைகள் பூங்கா இதழில் வெளியிடப்பட்டது. அந்த கட்டுரைகளின் இணைப்பு இறுதியில் வழங்கப்பட்டுள்ளது.
அமைவிடம்
முதுகெலும்புள்ள உயிரினங்களிலும் வேறு சில விலங்குகளின் உடலிலும் காணப்படும் ஒரு முக்கிய உள் உறுப்பான கல்லீரல் உடலின் மிகப்பெரிய சுரப்பியாகும் (glandular). மனிதர்களுக்கு மார்புக் கூட்டின் வலது கீழ்புறத்தில், வயிற்றறைக்கு வலது மேல் பக்கத்திலும் நெஞ்சறையையும் வயிற்றறையும் பிரிக்கும் இடைத்திரைக்கு கீழாகவும் பெரிய ஆப்பு வடிவத்தில் கல்லீரல் இருக்கிறது. இதற்குக் கீழாக பித்தப்பையும், இடது புறமாக இரைப்பையும் இருக்கின்றன. இதுவே உடல் உள்ளுறுப்புக்கள் யாவற்றிலும் மிகப்பெரிய உறுப்பாகும்.
அமைப்பு
பார்ப்பதற்கு செம்பழுப்பு நிறத்தில் இருக்கும் கல்லீரல் ஏறத்தாழ 1.4 முதல் 1.6 கிலோ கிராம் எடை உள்ள பெரிய உள்ளுறுப்பு. உடலியக்கத்திற்குத் தேவையான பற்பல வேதிப்பொருட்களை உருவாக்கித் தருவதால் கல்லீரலை உடலின் வேதிப்பொருள் தொழிலகம் எனலாம். கல்லீரல் வலது, இடது இழைகள் என இரண்டு பங்காகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இழையும் எட்டுப் துண்டுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவை ஒவ்வொன்றும் திசுவியல் அலகுகளான அலகிழைகளால் உருவாக்கப்பட்டுள்ளன. எப்பாட்டிக் தமனி மற்றும் போர்டல் சிரை என்ற இரண்டு பெரிய இரத்த நாளங்களுடன் கல்லீரல் இணைக்கப்பட்டுள்ளது.
வேலைகள்
கல்லீரலுடன் இணைக்கப்பட்டுள்ள எப்பாட்டிக் தமனி ஆக்சிசன் நிறைந்த இரத்தத்தை பெருந் தமனியிலிருந்து கொண்டு செல்கிறது. இதேபோல போர்டல் சிரையானது இரைப்பைக் குழாயிலிருந்தும், மண்ணீரல் மற்றும் கணையத்தில் இருந்தும் செரிமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த இரத்தத்தை கொண்டு செல்கிறது. இதனால் உடலின் பொது இரத்த ஓட்ட சுழற்சிக்குள் காணப்படும் ஊட்டச்சத்துப் பொருட்களின் அளவினை தீர்மானிப்பதில் கல்லீரல் முக்கியப்பங்கு வகிக்கின்றது.
வளர்சிதை மாற்றங்களின் நச்சுத்தன்மையை அகற்றல், புரதத் தொகுப்பு மற்றும் செரிமானத்திற்கு தேவையான உயிர்வேதியியல் பொருட்களை உற்பத்தி செய்தல் உள்ளிட்ட பணிகள் கல்லீரலில் நடைபெறுகின்றன. உணவு சமிபாட்டின் பின்னர் உருவாகும் எளியவடிவிலான ஊட்டக்கூறுகள், தேவைக்கு அதிகமாக இருக்கையில் வேறு வடிவுக்கு மாற்றப்பட்டு கல்லீரலில் சேமித்து வைக்கப்படும். பின்னர் உடலுக்கு ஊட்டக்கூறுகளின் தேவை ஏற்படுகையில், எளிய வடிவில் மாற்றப்பட்டு, குருதியினூடாக தேவைப்படும் இடத்துக்கு கொண்டு செல்லப்படும். பொதுவாக எல்லா குடல் பாகங்களிலிருந்தும் உடலுக்குள் நுழையும் வெளிப்பொருட்கள் யாவற்றையும் போர்டல் இரத்த ஓட்டம் மூலமாகத் தன்னுள் கல்லீரல் இழுத்துக் கொள்கிறது.
எப்பாட்டோசைட் எனப்படும் கல்லீரல் செல்லால் கல்லீரலின் மிக உயர்ந்த சிறப்பு திசு உருவாக்கப்பட்டுது. சிறு மற்றும் சிக்கலான மூலக்கூறுகளைத் தொகுத்தல் மற்றும் சிதைத்தல் உள்ளிட்ட பலமுக்கியமான உயர்-அளவு உயிர்வேதியியல் வினைகளை இது ஒழுங்குபடுத்துகிறது. வளர்சிதை மாற்றம், கிளைக்கோசன் சேமிப்பை முறைப்படுத்துதல், இரத்தச் சிவப்பணுக்கள் சிதைவு மற்றும் ஆர்மோன் உற்பத்தி ஆகியவற்றிலும் கல்லீரல் முக்கிய பங்கு வகிக்கிறது.
ஒரு துணை செரிமான சுரப்பியாக கல்லீரல் பித்தநீரை உருவாக்குகிறது, பால்மமாக்குதல் வழியாகக் கொழுப்புத் திசுக்களின் செரிமானத்திற்கு உதவுகிறது. பித்தப்பை, கல்லீரலின் கீழ் அமைந்திருக்கும் நார்த்திசுவால் ஆன ஒரு சிறிய பையாகும். கல்லீரல் மூலம் உற்பத்தி செய்யப்படும் பித்தநீர் இங்கு சேமிக்கப்படுகிறது. பித்தநீர் சுரக்கவும், ஈமோகுளோபினின் அமைப்பில் பங்களிக்கும் இரும்பு, ஏனைய சில தனிமங்கள், உயிர்ச்சத்துக்கள், கொலஸ்டிரால், கிளைகோஜன் வடிவில் காபோவைதரேட்டு, சில இயக்குநீர்கள் போன்றவற்றைச் சேமித்து வைக்கவும், யூரியா உற்பத்தி, பிளாசுமா புரத உற்பத்தி போன்ற உற்பத்திகளில் ஈடுபடுவதும், உட்கொள்ளும் உணவைச் செரித்து ஆற்றலை உருவாக்கவும், சுரப்பிகளைச் செயல்பட வைக்கவும், காயங்களை ஆற்றும் வண்ணமும், இரத்தத்தை உறைய வைக்கவும் தேவையான புரதங்களையும், வேறு பல நொதியங்களையும் உற்பத்தி செய்யவும் கல்லீரல் உதவுகிறது.
முதிர்ச்சியடைந்த செங்குருதியணுக்களில் இருந்து பிலிருபின் என்னும் கழிவுப்பொருளை நீக்கிப் பித்தநீரை உண்டாக்குகிறது. கல்லீரலில் உருவாக்கப்படும் பித்தநீர், சிறுகுடலில் செலுத்தப்பட்டு கொழுப்பு உணவைச் செரிக்க வைக்க உதவும். கல்லீரலில் உருவாகும் பித்தநீர் பித்தப்பையில் (gallbladder) சேர்த்து வைக்கப்படும். உணவில் கொழுப்புச்சத்தினை உட்கொள்ளூம்போது பித்தநீர் பித்தப்பையில் இருந்து குடலுக்குள் செலுத்தப்பட்டு அக்கொழுப்பினைக் கரைக்க உதவும்.
சுருங்கக் கூறின், கல்லீரல் இரத்தத்தில் உள்ள நச்சுகளைப் பிரித்து வெளியேற்றுகிறது. பித்தம் என்ற செரிமான திரவத்தை உற்பத்தி செய்து, கொழுப்புகளை செரிமானமாக்க உதவுகிறது. இரத்த உறைதல் காரணிகள் மற்றும் பிற புரதங்களை உற்பத்தி செய்கிறது. கார்போஹைட்ரேட்டுகள், கொழுப்புகள் மற்றும் புரதங்களை வளர்சிதைமாற்றுகிறது. கிளைகோஜன், வைட்டமின்கள் மற்றும் பிற பொருட்களை சேமித்து தேவைப்படும் போது வெளியிடுகிறது.
நோய்கள்
கல்லீரல் முழுமையாக செயலிழந்தால் நமது உடலும் செயல் இழந்து விடும். கல்லீரல் உயிரணுக்களில் பல நொதிகள் காணப்படுகின்றன. கல்லீரல் உயிரணுக்கள் பாதிப்படயும்போது இவை நோய் நிலைகளின்போது இரத்தத்தில் வெளிப்படுகின்றன. கல்லீரலை பாதிக்கும் சில நோய்கள் ஆல்கஹால் கல்லீரல் நோய் (Alcoholic liver disease), கொழுப்பு கல்லீரல் நோய் (Fatty liver disease), ஹெப்படைடிஸ் (Hepatitis) போன்றவை. மாற்றுக் கல்லீரல் பொருத்துதல் என்ற சிகிச்சைக்கு உதவும் வகையில், கல்லீரல் குருத்தணுவைப் பயன்படுத்தும் பல ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன
கல்லீரல் அழற்சி (Hepatitis): உடலில் உள்ள கல்லீரல் அழற்சி அல்லது வீக்கம் கொள்வதாகும், அந்த நிலைமையில் அந்த உறுப்பின் திசுக்கள் சார்ந்த உயிரணுக்கள் வீக்கத்துடன் காணப்படுவதே கல்லீரல் அழற்சி அறிகுறியாகும். இந்த நிலைமையானது தனது வரம்பிற்குள்ளேயே அடங்கலாம், மேலும் தன்னாலேயே குணமாகலாம், அல்லது மேலும் மோசமடைந்து கல்லீரலில் வடு ஏற்படலாம். ஆறு மாதங்களுக்கும் குறைவாக கல்லீரல் அழற்சி இருந்தால், அந்நிலைமை கடுமையான பாதிப்பை குறிக்கும். ஆனால், அதற்கு மேலும் நீடித்தால் அப்போது அது கடுமையாக நீடிக்கும் வகையை சாரும்.
மஞ்சள் காமாலை: கல்லீரல் சேதமடைந்தால் குருதியில் பிலிரூபினின் அளவு அதிகமாகி உடற்தோலும் கண்களும் மஞ்சள் நிறச் சாயலைப் பெற்றுக் மஞ்சள் காமாலை நோய் உண்டாகும்.
கல்லீரல் இழைநார் வளர்ச்சி: ஓர் தீரா கல்லீரல் நோயாகும். இந்த நோயாளிகளின் கல்லீரல் திசுவானது இழைமப் பெருக்கம், காய வடு திசு மற்றும் மறு உருவாக்க முடிச்சுகள் (சேதமடைந்த திசு மீ்ண்டும் உருவாகும் நிகழ்முறையில் ஏற்படும் கட்டிகள்) போன்றவற்றால் மாற்றியமைக்கப்படுவதால் கல்லீரலின் செயலிழப்பிற்கு வழிகோலுகிறது. கல்லீரல் இழைநார் வளர்ச்சி குடிப்பழக்கம், கல்லீரல் அழற்சி பி மற்றும் சி மற்றும் கொழுப்புநிறை கல்லீரல் நோய் ஆகியவற்றாலேயே ஏற்படுகிறது.
கல்லீரல்நோய் மூளைக்கோளாறு (Hepatic encephalopathy) அல்லது ஈரல்சிரையமைப்பு மூளைக்கோளாறு (portosystemic encephalopathy): கல்லீரல் செயலிழப்பால் மனக்குழப்பம், சுய உணர்வுநிலை தடுமாற்றம், ஆழ்துயில் என்பன தோன்றுவதைக் கல்லீரல்நோய் மூளைக்கோளாறு (Hepatic encephalopathy) அல்லது ஈரல்சிரையமைப்பு மூளைக்கோளாறு (portosystemic encephalopathy) குறிக்கிறது. இதன் முற்றிய நிலைகளில் ஈரல் ஆழ்துயில் அல்லது கோமா ஹெப்பாடிகம் என அழைக்கப்படுகின்றது. இறுதியில் மரணமும் நேரிடலாம்.
கல்லீரலின் ரத்தக்கசிவு: கல்லீரலின் ரத்தக்கசிவு சாதாரண நிலையில் இருக்கும்போது அது வெளியில் தெரியாது. ரத்தக்கசிவு அதிகமானால் ரத்த வாந்தி, மலம் கறுப்பு நிறமாவது போன்ற அறிகுறிகள் தெரியும். சிரோசிஸ் நிலைக்கு கல்லீரல் வந்து, மஞ்சள் காமாலை குறையாதபட்சத்திலும், தூக்கம் வருவது போன்ற மயக்க நிலை, வயிறில் நீர் சேர்வது, மருந்துகள் கொடுத்தும் கட்டுப்படுத்த முடியவில்லை எனில் உடனடியாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்.
கல்லீரல் மாற்று சிகிச்சை என்பது ஒருவரிடம் இருக்கும் கல்லீரலை அப்படியே மொத்தமாக எடுத்து பாதிக்கப்பட்டவருக்கு வைப்பதல்ல. கல்லீரலின் சிறிய பகுதியை அகற்றி, பாதிக்கப்பட்டவருக்கு வைக்கலாம். கல்லீரல் தானாகவே வளர்ந்துவிடும். எனவே, உயிருடன் இருக்கும் கொடையாளரிடம் இருந்தும் கல்லீரலை தானம் பெறலாம். இறந்தவரின் கல்லீரலை எடுத்தும் மாற்று சிகிச்சை செய்யலாம்.
புற்றுநோய்: ஹெபடைட்டிஸ் பாதிப்பு, ஆல்கஹால் அல்லாத கல்லீரல் கொழுப்பு கொண்டவர்களுக்கு கல்லீரலில் புற்றுநோய் வரும் வாய்ப்பு அதிகம். இதனால் கல்லீரலின் செயல்திறன் வேகமாகக் குறையும். சிடி ஸ்கேன் எடுத்தால் இந்த நிலை புரிந்துவிடும். ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்துவிட்டால் கல்லீரல் மாற்று சிகிச்சை செய்து குணப்படுத்திவிடலாம். உடலின் மற்ற பாகங்களுக்கு, ரத்தக்குழாய்களுக்கு, நெறிக்கட்டிகளுக்கு, நுரையீரலுக்குப் பரவினால் குணப்படுத்துவது சிரமமாகிவிடும்.
அறிகுறிகள்
கல்லீரலின் ஆரோக்கியம் கெடுகிறது என்பதை முன்கூட்டியே உணர்வது கடினம். சுமார் 70 சதவிகித நோயாளிகளுக்கு எந்த அறிகுறிகளும் காட்டுவதில்லை. குறிப்பாக, `ஃபேட்டி லிவர்’ (Fatty liver) பிரச்னையில் அறிகுறியைத் தெரிந்துகொள்ளவே முடியாது. ஆனால், கல்லீரலில் வீக்கம் ஆரம்பிக்கும்போது சில அறிகுறிகளைத் தெளிவில்லாமல் உணர முடியும். வயிற்றில் அசௌகர்ய உணர்வு ஏற்படும், வாந்தி உணர்வு இருக்கும்.
சிரோசிஸ் என்ற கல்லீரல் சுருக்கம் உண்டானால் கால்களில் வீக்கம், வயிற்று உப்புசம், எளிதாக தொற்று ஏற்படுவது, ரத்தம் உறையும் தன்மை குறைவதால் எளிதாக ரத்தக்கசிவு போன்றவை உண்டாகும். ஓர் இடத்தில் அடிபட்டுவிட்டால் நீண்ட நேரம் ரத்தக்கசிவு இருக்கும். வாந்தி உண்டாகும். மேலும், சிரோசிஸ் தீவிரமாகும்போது மந்தமாக இருப்பது, குழப்பமான மனநிலை உண்டாகும். ஆரம்ப நிலையில் அறிகுறி தெரியாது. வைரஸ் தொடர்பான பிரச்னை, ஆல்கஹால், தொடர்பான பிரச்னைகளிலும் கல்லீரலில் ஏற்படும்போது அறிகுறிகள் தெரியும். ஆனால், `ஃபேட்டி லிவர்’ பிரச்னைக்கான அறிகுறிகள் தெரியாது.
கல்லீரல் ஆரோக்கியத்துக்கு
மது அருந்துவது கல்லீரலில் எதிரி ஆகும். உடல் பருமன், நீரிழிவு, தைராய்டு, கொலஸ்ட்ரால், மரபியல் காரணங்கள் போன்ற காரணங்களாலும் கல்லீரல் பாதிக்கப்படும். கல்லீரல் ஆரோக்கியத்துக்கு சமச்சீரான உணவுமுறை, கார்போஹைட்ரேட் குறைவாக எடுத்துக்கொள்வது, கொழுப்புள்ள உணவுகளைத் தவிர்ப்பது முக்கியம். துரித உணவுகளைத் தவிர்க்க வேண்டும். புரத உணவுகளைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஃப்ரெஷ்ஷான பழங்கள், காய்கறிகள், சாலட் போன்றவற்றை சேர்த்துக்கொள்ளலாம். ஏதேனும் ஓர் உடற்பயிற்சியைத் தினமும் மேற்கொள்ள வேண்டும்.
பூங்கா இதழ் (The News Park) கருத்து: கல்லீரலை பாதுகாப்போம்! உடல்நலம் பேணுவோம்!