அதிகாலையில் பூங்கா இதழ் அலுவலகத்துக்கு வந்த வாக்காளர் சாமிக்கு வணக்கம் கூறி விட்டு “என்ன சாமி செய்திகள்?” என்றதும் “அதற்குத்தானே வந்திருக்கிறேன்” என செல்லமாக கோபித்துக் கொண்டுகருத்து மூட்டைகளை அவிழ்க்க தொடங்கினார் வாக்காளர் சாமி.
“பல காலமாக பாலஸ்தீனத்தின் மீது போரை நடத்திக் கொண்டிருக்கும் இஸ்ரேலின் பார்வை ஈரான் மீது திரும்பி நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. அணு ஆயுதங்களை தயாரிக்கும் முயற்சியில் ஈரான் ஈடுபட்டு வந்த நிலையில் அந்த நாடு அணு ஆயுத நாடாக மாறினால் தமக்கு மிகுந்த பாதிப்பாக இருக்கும் என்று ஈரான் கருதி வந்தது. இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்பு ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்த உடனடியாக ஈரான் பதில் தாக்குதல் ஒன்றையும் நடத்தியது. இத்துடன் பிரச்சனை முடிந்தது என்று இருந்த நிலையில் மீண்டும் ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்த ஈரானும் பதில் தாக்குதலை தொடங்கியது. தற்போது இருவருக்கும் இடையே தொடர்பு தாக்குதல்கள் வான் வழியில் ஏவுகணைகள் மூலமாக நடந்து கொண்டிருக்கின்றன.
இந்த சூழ்நிலையில் ஈரான் அணு ஆயுத தடுப்பு ஒப்பந்தத்தில் கையொப்பம் செய்ய வேண்டும் என்றும் உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நிர்பந்திக்க தற்போதைய நிலையில் தாங்கள் ஒப்பந்தத்தில் கையொப்பம் செய்ய மாட்டோம் என்றும் இஸ்ரேல் போரை நிறுத்தினால் நாங்கள் நிறுத்துவோம் என்றும் ஈரான் அறிவித்துவிட்டது. நேற்று, கனடாவில் நடைபெற்ற ஜி 7 எனப்படும் வளர்ச்சி அடைந்த நாடுகளின் கூட்டத்தில் அமெரிக்கா, பிரான்ஸ், ரஷ்யா, ஜெர்மனி, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்ட போதும் இதில் ஈரான் – இஸ்ரேல் போரை நிறுத்த ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை.
இஸ்ரேலுக்கு அமெரிக்கா தீவிர ஆதரவை தரும் நிலையில் அதன் நட்பு நாடுகளும் அந்நாட்டுக்கு ஆதரவு கரம் நீட்டி வருகின்றன. ஈரானுக்கு ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் ஆதரவளிக்கின்றன. இந்தப் போரை நிறுத்த ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் இந்தியா வெளிநடப்பு செய்துள்ளது. இதை போலவே சங்காய் ஒத்துழைப்பு நாடுகளின் உறுப்பினராக இந்தியா உள்ள நிலையில் இஸ்ரேலை கண்டித்து வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்தியா கையொப்பம் செய்யவில்லை. இருப்பினும் சீனா, ரஷ்யா உள்ளிட்ட சமுதாய ஒத்துழைப்பு நாடுகளின் கையொப்பத்துடன் அந்த அறிக்கையை வெளியானது. பெரும்பாலான பிரிக்ஸ் நாடுகளும் சங்காய் ஒத்துழைப்பு நாடுகளும் ஈரானுக்கு இஸ்ரேலுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ள நிலையில் பிரிக்ஸ் மற்றும் சங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பில் உறுப்பினராக உள்ள இந்தியாவின் நிலைப்பாடு மாறாக உள்ளது. தற்போதைக்கு இஸ்ரேல் – ஈரான் போர் ஓயாது என்றும் உலகப்போராக மாறக்கூடிய சூழல் தவிர்க்கப்பட வேண்டும் என்றும் சர்வதேச பாதுகாப்பு நிபுணர்கள் கருதுகிறார்கள்
இஸ்ரேல் – ஈரான் போர் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் உயர்வதால் இந்தியாவில் டீசல், பெட்ரோல் விலை உயரக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்த விலை உயர்ந்தால் காய்கறி, அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வும் போக்குவரத்துக்கான செலவும் உயர்வு தோடு அனைத்து பொருட்களின் விலையும் உயரக்கூடும். பெட்ரோல் விலை உயர்வை தடுக்க போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்கும் என்று நம்புவோமாக” என்றார் வாக்காளர் சாமி. “உள்ளூர் செய்திகள் இல்லையா சாமி” என்றேன் நான்.
“நான் விரும்புவது கூட்டணி ஆட்சி அல்ல. பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சிதான் என்று சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பேசியிருந்தார். தமிழகத்தில் எங்களது கூட்டணியின் தலைவர் ஈ பி எஸ், அவர்தான் முதலமைச்சர் வேட்பாளர், அவர்தான் கூட்டணி ஆட்சியா? என்று முடிவு செய்ய வேண்டும் என்று நேற்று நடந்த நிகழ்வு ஒன்றில் தற்போதைய பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியுள்ளார். அதிமுகவோடு இணைந்து பணியாற்றுவதில் அண்ணாமலைக்கு விருப்பமில்லை என்பது ஊரறிந்த ரகசியம். இந்நிலையில் வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு ஏற்பட்டுள்ள பாஜக – அதிமுக கூட்டணிக்கு ஏதாவது பங்கம் விளைவித்து விடுவாரா அண்ணாமலை என்ற அச்சம் பல பாஜக தலைவர்களிடையே உள்ளது. இதுகுறித்து தமிழிசை சௌந்தர்ராஜன் மேல் இடத்தில் புகார் தெரிவித்ததாக செய்திகள் வந்தன. ஆனால், அவர் அதனை மறுத்துள்ளார்.
கூட்டணியில் இருந்தாலும் தேவைப்பட்டால் மீசையை முறுக்குவோம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பேசியதாக வந்த செய்தியின் அடிப்படையில் அண்ணன் எப்போது மீசையை முறுக்குவார் என்று அண்ணாமலை கேட்டுள்ளார் இதை போலவே பாட்டாளி மக்கள் கட்சியில் நிலவும் குடும்ப பிரச்சனைக்கு திமுக தான் காரணம் என்று அன்புமணி ராமதாஸ் பேசியுள்ளார். எப்படியாவது திமுக கூட்டணியில் இருந்து ஒரு சிலரை வெளியில் கொண்டு வர வேண்டும் என்று ஏதாவது ஒன்றை எதிர்க்கட்சிகள் பேசிக் கொண்டிருக்கின்ற நிலையில் அதிமுக -பாஜக கூட்டணி தொடரக்கூடாது என்றும் விஜயின் தமிழக வெற்றி கழகம் அதிமுக கூட்டணியில் சேர்ந்து விடக்கூடாது என்றும் சிலர் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்” என்றார் வாக்காளர் சாமி.
“பாட்டாளி மக்கள் கட்சியில் அப்பா ராமதாஸுக்கும் மகன் அன்புமணி ராமதாஸுக்கும் நடந்த நடந்து கொண்டுள்ள பிரச்சினை தற்போதைக்கு முடிவு வராது போலும். அப்பாவும் மகனும் மாறி மாறி ஆள் பிடிக்கும் வேலையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாகவோ என்னவோ, நேற்று மயிலாடுதுறை பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் அதிமுகவில் இணைந்துள்ளார். இதைப்போலவே பாட்டாளி மக்கள் கட்சியினர் பலர் மாற்றுக் கட்சியில் இணைந்து கொண்டிருப்பதாக தெரிகிறது. ” என்றேன் நான்.
“இதனிடையே ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடைய நேற்று ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளார். இதில் என்ன முடிவு எடுப்பது என்பதில் குழப்பம் நீடித்ததாக தெரிகிறது. இதனுடைய நாடாளுமன்றத் தேர்தலில் அண்ணா திமுக வேட்பாளர் எதிர்த்து போட்டியிட்டதால் ஓ. பன்னீர்செல்வம் எம்எல்ஏ ஆக நீடிக்க கூடாது என்று சபாநாயகரிடம் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டசபையில் அதிமுக எம்எல்ஏவாக ஓபிஎஸ் தொடரும் நிலையில் இரட்டை இலை சின்னத்தில் நாடாளுமன்றத்தில் தேர்தலில் அதிமுக வேட்பாளர் போட்டியிட்டபோது இரட்டை இலை சின்னத்தை எதிர்த்து சுயேசையாக ஓபிஎஸ் போட்டியிட்டதால் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று எழுப்பப்பட்டுள்ள கோரிக்கை ஏற்கப்பட்டால் ஓபிஎஸ் இருக்கு தற்போது இருக்கும் பின்னடைவை விட மிக அதிக பின்னடைவு ஏற்படும் என கருதப்படுகிறது” என்றார் வாக்காளர் சாமி. “தேர்தல் நெருங்க நெருங்க இதுவரை எந்த தேர்தலிலும் இல்லாத ஆடுபுலி ஆட்டம் நடக்கும் போல தெரிகிறதுசாமி!” என்றேன் நான்.
“ஆள் கடத்தலுக்கு உடந்தையாக இருந்ததாக கூறப்படும் வழக்கில் காவல் துறையில் டிஜிபிக்கு அடுத்ததாக இரண்டாவது உயர்நிலை பதவியில் உள்ள ஏடிஜிபி ஜெயராமனை உயர் நீதிமன்றத்திற்கு வந்து ஆஜராக சொல்லி அங்கேயே அவரை கைது செய்ய உயர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது” எனக் கூறிவிட்டு விடைபெற்றார் வாக்காளர் சாமி.
பூங்கா இதழ் (The News Park) கருத்து: அரசியல் இல்லாமல் அனுபவம் நகராது என்ற நிலையில் நடைபெறும் நிகழ்வுகள் மக்களுக்கு பாதிப்பு இல்லாமல் இருக்க வேண்டும்.