அதிகாலையில் பூங்கா இதழ் அலுவலகத்துக்கு வந்த வாக்காளர் சாமிக்கு வணக்கம் கூறி விட்டு “ஏன் சாமி கடந்த ஒரு மாதமாக வரவில்லை?” என்றதும் “எனக்கும் கோடை விடுமுறை கிடையாதா?” என செல்லமாக கோபித்துக் கொண்டுகருத்து மூட்டைகளை அவிழ்க்க தொடங்கினார் வாக்காளர் சாமி.
“அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெறுவதற்கு மிகப்பெரிய நிதி உதவியை வழங்கியதோடு பிரச்சாரத்தில் அவருக்கு உறுதுணையாக இருந்தவர் தொழிலதிபர் எலன் மாஸ்க். டொனால்ட் டிரம்ப் ஆட்சிக்கு வந்தவுடன் அரசின் சிக்கன நடவடிக்கைகளுக்காக புதிய அமைப்பு ஒன்றை உருவாக்கி எலன் மாஸ்கை தலைவராக்கினார் டிரம்ப். ஆட்சிக்கு வந்து நான்கு மாதங்கள் கடந்த நிலையில் எலன் மாஸ்க்கும் டிரம்புக்கும் மிகப்பெரிய மோதல் வெடித்துள்ளது. எலன் மாஸ்க் அரசு பதவியில் இருந்து விலகி உள்ளார் என்பதோடு புதிதாக கட்சி ஒன்றை ஆரம்பிக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
இருவருக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதல் போக்கு பல பிரச்சனைகளை தோற்றுவித்துள்ளது. அமெரிக்காவின் விண்வெளி அமைப்பான நாசாவில் எலன் மாஸ்க் நிறுவனத்தின் உதவியுடன் பல்வேறு திட்டங்கள் நடைபெறுகிறது. இதே போல ஒவ்வொரு துறையிலும் அமெரிக்க அரசுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது எலன் மாஸ்க் நிறுவனம். எலன் மாஸ்க் ஒத்துழைக்காவிட்டால் அரசுக்கு பெரும் நெருக்கடி ஏற்படும் என்பதை அறிந்தாலும் அவரை எதிர்த்து நகரத் தொடங்கி இருக்கிறார் ட்ரம்ப்” என்றார் வாக்காளர் சாமி.
“அமெரிக்க அரசியலமைப்புபடி அமெரிக்காவில் பிறந்தவரே அமெரிக்க அதிபராக முடியும். ஆனால், அமெரிக்காவில் எலன் மாஸ்க் மிகப்பெரிய சக்தியாக இருந்தாலும் அவர் தென்னாப்பிரிக்காவில் பிறந்தவர் என்பதால் அரசியல் கட்சி ஒன்றை எலன் மாஸ்க் தொடங்கினாலும் அமெரிக்காவின் அதிபராக அவரால் வர முடியாது. ஒரே உறையில் இரண்டு கத்திகள் இருக்க முடியாது அல்லவா?. அரசுத் துறையில் அனைத்தையும் தனியாருக்கு வழங்கி விட்டால் திடீரென தனியார் ஒத்துழைப்பு இல்லை என்றால் அரசு ஆட்டம் காணும் என்பதற்கு அமெரிக்கா சாட்சி சாமி” என்றேன் நான்.
“நிறுவனங்கள் பணியாளர்களை 10 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என நிர்பந்திக்கும் வகையில் ஆந்திர பிரதேச அரசாங்கம் புதிய சட்டம் ஒன்றை இயற்றியுள்ளது. இந்த சட்டத்தில் தேவைப்பட்டால் நிறுவனங்கள் பணியாளர்களை மேலும் இரண்டு மணி நேரம் பணியாற்றுமாறு கேட்டுக் கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. 8 மணி நேரம் வேலை என்பது தொழிலாளர்கள் போராடி பெற்ற உரிமை என்ற நிலையில் இத்தகைய சட்டம் அம் மாநில முதலமைச்சர் சந்திரபாபு எதிரான மனநிலையை உருவாக்க கூடும் என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்” என்றார் வாக்காளர் சாமி. “பாரதிய ஜனதா கட்சி உள்ளிட்ட சந்திரபாபு நாயுடுவின் கூட்டணி கட்சிகளை தவிர மற்ற கட்சிகள் இந்த சட்டத்துக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்” என்றேன் நான்.
“மணிப்பூர் மாநிலத்தில் ஓராண்டுக்கு மேலாக கலவரம் அரசுக்கு எதிராக தொடரும் நிலையில் தற்போது மீண்டும் வன்முறை அதிகரிக்க தொடங்கியுள்ளது அங்கு ஆட்சி நடத்தும் ஆளுநருக்கு பெரும் தலைவலியாக உள்ளது. இதனை கட்டுப்படுத்த சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட தகுந்த நடவடிக்கைகளை மத்திய அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்களும் எதிர்க்கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றனர். மணிப்பூரில் நிலைமை இவ்வாறு இருக்க தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது என்று பாரதிய ஜனதா கட்சி பேசுவது எவ்வாறு சரியானது என்று தமிழகத்தில் திமுக தலைவர்கள் கேட்கிறார்கள்” என்றார் வாக்காளர் சாமி. “தனக்கு வந்தால் ரத்தம். அடுத்தவருக்கு வந்தால் தக்காளி சட்னி என்ற பழமொழி தெரியாத சாமி?” என்றேன் நான்.
“சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் தேர்தலுக்கு நான் சுமார் 4 மாதங்களுக்கு முன்புதான் தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகள் தொடங்குவார்கள் ஆனால் ஓராண்டு கழித்து வரக்கூடிய தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு தேர்தல் காலத்தில் செய்வது போல இங்கு உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளை மிகப் பெரிய அளவில் தொடங்கி விட்டனர். கூட்டணி அமைப்பதை பொருத்தவரை திமுகவின் தலைமையிலான கூட்டணி வலுவாக உள்ளது. அதிமுக கூட்டணியை பொறுத்தவரை பாரதிய ஜனதா கட்சி இணைந்து இருந்தாலும் இன்னும் ஓரிரு செல்வாக்கான கட்சிகளை இணைக்க முயற்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
(தொடர்ச்சி கீழே உள்ள அட்டவணை செய்திகளுக்கு கீழ்)
தமிழக வெற்றிக் கழகத்தை பொறுத்தவரை அதன் தலைவர் விஜய்க்கு என்று மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்தாலும் எவ்வாறு வாக்கு கிடைக்கும்? என்பதில் எவ்வித உறுதி தன்மையும் இல்லை. ஒவ்வொரு தேர்தலிலும் பேர வலிமையை சிறப்பாக நடத்தும் பாட்டாளி மக்கள் கட்சிதற்போது குடும்பப் பிரச்சினையால் சிக்கித் தவிக்கிறது. இருப்பினும் அந்த கட்சி பெரும்பாலும் அதிமுக கூட்டணியில் இணையவே வாய்ப்புள்ளது. விஜயின் கட்சி தனித்துப் போட்டியிட்டால் மட்டும் பாமக, தேமுதிக போன்ற கட்சிகள் அங்கு நகர வாய்ப்புகள் உள்ளன. ஆனால், தனித்து போட்டியிடுவது என்பது விஜய்க்கு பெரிய சவாலாகவே இருக்கும். கூட்டணியுடன் போட்டியிடுவது என்றால் அதிமுகவின் தலைமையை விஜய் ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலைமையை ஏற்படும். ஆனால் எப்பாடுபட்டாவது பாமக, தேமுதிக கட்சிகளை தங்களது கூட்டணிக்கு பாரதிய ஜனதா கட்சி கொண்டு வந்து விடும் என்று எடப்பாடி பழனிச்சாமி நம்புகிறார்” என்றார் வாக்காளர் சாமி.
“தேர்தல் கூட்டணி என்றாலே பேரம் என்ற நிலைமை ஏற்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டது சாமி. தற்போதைய நேரத்தில் ஓபிஎஸ் -ன் நிலைமை மோசமாகி விட்டது” என்றேன் நான். “கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு கமிஷனில் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் இல்லாத நிலைமை பல பிரச்சினைகளை தோற்றுவித்துள்ளது. இந்நிலையில் இன்னும் இரண்டு வாரத்துக்குள் இந்த கமிஷனுக்கு தலைவர் மற்றும் உறுப்பினர்களை தமிழக அரசு நியமித்து விடும் என்று தெரிகிறது” எனக் கூறிவிட்டு விடைபெற்றார் வாக்காளர் சாமி.
பூங்கா இதழ் (The News Park) கருத்து: ஒவ்வொரு வாரமும் வாருங்கள் சாமி! உங்கள் உரைவீச்சை தாருங்கள் சாமி!