நாற்காலியை அந்தரத்தில் தொங்க விட்டது?
பரீட்சையில் மாணவர்களுக்கு என்னென்ன கேள்விகள் எல்லாம் கேட்கலாம் என இரவெல்லாம் கண் முழித்து கேள்விகளை தயாரித்த சந்தோஷத்தோடு வகுப்பறைக்குள் நுழைந்த கணித ஆசிரியருக்கு பகீர் என்று இருந்தது. அவர் அமர வேண்டிய நாற்காலி அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்தது. சீலிங்கில் இருந்த ஃபேன் மாட்டும் வளையத்தில் ஒரு கயிற்றால் அந்த நாற்காலியை கட்டி தொங்க விட்டிருந்தார்கள் மாணவர்கள்.
யார் தொங்க விட்டிருப்பார்கள் என கண்களில் கேள்வி காட்டி மாணவர்களை நோட்டம் விட்டார் ஆசிரியர். முகத்தில் எந்த சலனமும் காட்டாமல் அமைதியாய் அமர்ந்திருந்தார்கள் மாணவர்கள். அவருக்கு புரிந்து. எத்தனை முறை கேட்டாலும், எப்படி கேட்டாலும் இந்த செயலை செய்தது யார் என யாரும் சொல்லப் போவதில்லை. அதனால் ஆசிரியர் எதையும் கண்டு கொள்ளாதது போல் மாணவர்களிடம் அமைதியாக பேசினார்,
‘இப்போ நடக்கப் போற கணக்கு பரிட்சை மிக முக்கியமான பரிட்சை. இந்தப் பரிட்சை வெறும் 15 நிமிடங்கள் மட்டுமே நடக்கும். வெறும் மூன்று கேள்விகள் மட்டும் தான் கேட்க போகிறேன். மொத்த மதிப்பெண் 100. இதில் நீங்கள் பாஸாகி விட்டால் முழு ஆண்டு தேர்வில் கணக்கு எழுத வேண்டியது இல்லை. இதில் ஃபெயில் ஆகிவிட்டால் அடுத்த வகுப்பிற்கு தேர்ச்சியாகி போக முடியாது. நீங்கள் இந்த வகுப்பை மீண்டும் படிக்க வேண்டி வரும். அதனால் கவனமாக கேள்விக்கு பதில் தாருங்கள். போர்டில் கேள்விகளை எழுதி போடட்டுமா?’ மாணவர்கள் உற்சாகமாக ‘எழுதி போடுங்கள் சார்’ என்றனர்.
மாணவர்களை ஒரு முறை தீர்க்கமாக பார்த்துவிட்டு போர்டில் கேள்விகளை எழுதினார் ஆசிரியர், கேள்வி 1: நாற்காலிக்கும் தரைக்கும் இடையிலான தூரத்தை சென்டிமீட்டரில் கணக்கிடுங்கள் (1 மதிப்பெண்). கேள்வி 2: நாற்காலியின் உச்சவரம்பு சாய்வின் கோணத்தைக் கணக்கிடுங்கள். (1 மதிப்பெண்) கேள்வி 3: நாற்காலியை கூரையில் தொங்கவிட்ட மாணவரின் பெயரையும், அவருக்கு உதவிய நண்பர்களின் பெயரையும் எழுதுங்கள். (98 மதிப்பெண்கள்) (படித்ததில் பிடித்தது).
நீங்களும் சைக்காலஜி நிபுணர்தான்
ஒருவர் நம்மிடம் கடன் கேட்டால், அவர் புரபஷனல், நாம கத்துக்குட்டி என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். ஏன் என்றால் கடன் வாங்குபவர்களுக்கு பலரிடம் கடன் வாங்கிய அனுபவம் இருக்கும். கொடுப்பவர்களுக்கு இருக்காது. ஒரு புரபஷனலும், கத்துகுட்டியும் மோதினால் என்ன ஆகும்?
ஒருமுறை ஒரு கல்லூரியில் வேலைக்கு சேர்ந்தவுடன், சில நாட்களில் அந்த கல்லூரி பேராசிரியர் ஒருவர் வந்து “ஒரு எமெர்ஜென்சி, ரூ 3000 கொடு” என்றார். சம்பளமே ஆறாயிரம். இவர் சீனியர் பேராசிரியர். மூவாயிரத்துக்கு நம்பாமலா இருப்போம்? ஆனால் எனக்கு அப்போது தெரியாத விசயம் என்னவெனில் மனிதர் மதுப்பிரியர் என்பதும், கடன் வாங்கி தன்ணியடிப்பது தான் அவரது வழக்கம் என்பதும்
அப்ப எல்லாம் நான் சூதுவாது தெரியாத அப்பாவி. ஆனால் கொடுக்க நிஜமாவே காசு இல்லை. வேலைக்கு சேர்ந்து இன்னும் சம்பளம் வாங்கலை “அடடா, சம்பளம் இன்னும் வாங்கலையே சார்” என்றேன் “அது எல்லாம் பிரச்சனை இல்லை. ஆபிஸ்ல போய் எமெர்ஜென்சின்னு கேட்டால் அட்வான்ஸா கொடுப்பாங்க. வாங்கிக்கொடுங்க”
“சார், புதுசா வேலைக்கு சேர்ந்திருக்கேன். முதல் மாசமே எப்படி போய் கேட்கறது?” “ஆபிஸ் மேனேஜர் எனக்கு பிரண்டு தான். நான் சொல்றேன். வாங்க””இல்ல சார். நல்லா இருக்காது” என மறுத்துவிட்டேன். அவர் போனபின் தான் அந்த சைக்காலஜி பிடிபட்டது. நம்மை கடன் வாங்கி இவருக்கு கடன் கொடுக்க வைக்க முயன்று இருக்கிறார்.
சைக்காலஜி படித்தவர்கள் தான் சைக்காலஜி நிபுணர்கள் என நினைப்போம். அது எல்லாம் சும்மா. நம்மை சுற்றியிருப்பவர்களிடம் கற்றுக்கொள்ள ஆயிரம் விசயம் இருக்கு. கற்றுக்கொள்ளணும் என நினைத்தால் எல்லாரும் நமக்கு குருதான் (படித்ததில் பிடித்தது).
பூங்கா இதழ் (The News Park) கருத்து: கதைகள் சிரிக்கவும் வைக்கின்றன. சிந்திக்கவும் வைக்கின்றன.