வாய் சாமர்த்தியம் இருந்தால் எதுவும் இயலும்
ஒரு செருப்பு கடைக்காரர் தனது கடைக்கு “வேலையாள் தேவை ” என விளம்பரம் கொடுத்தார். பல பேர் வந்தனர். முதலாளிக்கு எவரையும் பிடிக்கவில்லை. எடுப்பான வாலிபன் ஒரு நாள் வந்தான். அவனிடம் இந்த ஒரு ஜோடி செருப்புகளை 500 ரூபாய்க்கு உன்னால் விற்க முடியுமா என்று கேட்டார். வந்த பையனோ நான் 550 ரூபாய்க்கு விற்பேன் என்றான். அப்படியா ?அவ்வாறு விட்டால் உனக்கு வேலையும் உறுதி. சம்பளமும் இரட்டிப்பாக கொடுக்கப்படும் என்றார்.
ஒத்துக்கொண்ட இளைஞன் வாடிக்கையாளரின் வருகைக்காக காத்திருந்தான். ஒருவர் வந்தார். புன்னகையோடு அவரை வரவேற்று அவருக்கு செருப்புகளை காட்ட தொடங்கி, அவரை யோசிக்க விடாமல் அடுத்தடுத்த செருப்புகளைக் காட்டிக் கொண்டே இருந்தான்.
(தொடர்ச்சி கீழே உள்ள அட்டவணை செய்திகளுக்கு கீழ்)
இறுதியாக 550 ரூபாய்க்கு விற்றுக் காட்ட முடியும் என்று சொன்ன. அந்த செருப்பு ஒரு ஜோடி யை எடுத்து அதனுடைய தரத்தையும் தயாரிப்பையும் மிகப் பிரமாதமாகச் சொல்லிக் கடையில் இந்த மாடலில் இரண்டே இரண்டு ஜோடி மட்டும் தான் இருக்கிறது. அதனுடைய விலை 600 ரூபாய். ஆனால், உங்களுக்காக 550 ரூபாய்க்குக் கொடுக்கிறேன் என்று சொன்னான்.
இவை அனைத்தையும் கடைக்காரர். மிகக் கூர்மையாக பார்த்துக் கொண்டிருந்தார். இளைஞனின் சொல்லாடலில் மயங்கிய வாடிக்கையாளர் விலை அதிகமாக இருக்கிறது என்றும் தன்னிடம் அந்த அளவு பணம் இல்லை என்றும் சொல்ல இளைஞன் உங்களிடம் இப்போது எவ்வளவு இருக்கிறது ? என்று கேட்டான். 450 ரூபாய் இருக்கிறது என்று அவர் சொன்னார்.
“அதனால் பரவாயில்லை. இப்பொழுது செருப்பை வாங்கிச் செல்லுங்கள். வீட்டிற்குச் சென்று மறுபடி வரும்போது மீதி ரூபாயை கொடுங்கள் என்று சொல்ல வாடிக்கையாளர் மகிழ்ச்சியாக செருப்புகளை வாங்கிச் சென்றார்.
வாடிக்கையாளர் போனதும் கடை முதலாளி இளைஞனை வார்த்தைகளால் வெளுத்து வாங்கி விட்டார். ரூ.50 நட்டத்திற்கு விற்று விட்டாயே, இனி அந்த ஆளு திருப்பிக் கொண்டு வந்து கொடுப்பாரா? எனக் கோபத்தோடு கத்தினார். இளைஞனோ “நிச்சயம் வருவார் ” என்றான். “வரமாட்டார் “என்றார் முதலாளி. இப்படியே மாறி மாறி இருவரும் பேசிக் கொண்டிருக்க கடைசியில் அந்த இளைஞன் சொன்னான். “ஐயா ! நான் கொடுத்தபெட்டியில் இருந்த செருப்புகள் இரண்டுமே வலது காலுக்கு உரியவை. அவர் வீட்டிற்கு சென்று பார்த்து விட்டு பதறி அடித்துக் கொண்டு பணத்தோடு வருவார் கவலைப்படாதீர்கள் என்றான்.
முகம் மலர்ந்த முதலாளி அவருடைய கெட்டிக்காரத் தனத்தைப் பாராட்டி “உனக்கு வேலை நிச்சயம்! சம்பளம் இரட்டிப்பாக கிடைக்கும் ” என்றார். வாய் சாமர்த்தியம் இருந்தால் எதுவும் இயலும்.
தவறை உணர்ந்தவன் வெளியிலே வந்துட்டான்.
ஒரு ராஜா இருந்தாராம். அவரு ஒரு நாள் மாறுவேஷம் போட்டுக்கிட்டு நகர் சோதனைக்காகப் புறப்பட்டார். சிறைச்சாலையிலே கைதிகள் எப்படி இருக்காங்கன்னு பார்த்திட்டு வரலாம்ன்னு அந்தப் பக்கமா போனார். பல கைதிகள் அடைபட்டுக் கிடந்தாங்க. அதுல ஒரு ஆளைக் கூப்பிட்டு, நீ ஏன் இந்த இடத்துக்கு வந்து சேர்ந்தே?”ன்னு விசாரித்தார். ராஜா! “நான் ஒரு வாடகை வீட்டிலே குடியிருந்தேன். அதைக் காலி பண்ணச் சொன்னாங்க. வேறே வீடு கிடைக்கலே. அதனாலே காலி பண்ணாம இருந்தேன். அதுக்காக எம்பேர்லே வழக்கு போட்டு ஒரு வருஷம் உள்ளே தள்ளிட்டாங்க!” அப்படின்னான் அந்த ஆளு!
ராஜா இன்னொரு கைதியைக் கூப்பிட்டு “நீ எப்படி இங்கே வந்தே”ன்னு கேட்டார். “என்பேர்லேயும் தப்பு ஒண்ணும் இல்லீங்க! ஒருநாள் தெருவுலே நடந்து போய்க்கிட்டிருந்தேன். வழியிலே ஒரு தங்கச் சங்கிலி கிடந்தது. அனாதையா கிடந்துது. அதனாலே அதை நான் எடுத்துக்கிட்டேன். அதை விற்கிறதுக்காகப் போனேன். அந்த இடத்துலே என்னைப் பிடிச்சிட்டாங்க! திருடினேன்னு சொல்லி தண்டனையும் குடுத்துட்டாங்க!” அப்படின்னான் அவன்.
ராஜா அடுத்தபடியா இன்னொரு ஆளைக் கூப்பிட்டு விசாரித்தார். “ஐயா! எங்க ஊர்லே கணக்கு வழக்கு பார்த்துகிட்டு ஒரு ஆள் இருந்தார். அவரு அடிக்கடி என்கிட்டே ஏதாவது காசு வாங்கிட்டே இருப்பாரு. நானும் அப்பப்ப கையில கிடைச்சது ஏதாவது குடுத்துக் கிட்டுத்தான் வந்தேன். ஒரு சமயம் கேட்டாரு, நான் கையிலே இல்லேன்னு சொன்னேன். அவருக்குக் கோவம் வந்துட்டுது. அன்னைக்கு ராத்திரி அவரு வீட்டு வைக்கப் போரு பத்திக்கிட்டு எரிஞ்சிட்டுது. அதை நான் தான் கொளுத்தினேன்னு சொல்லிபுட்டார். எல்லாரும் நம்பிட்டாங்க! அதனாலேதான் நான் இங்கு வருவது போல ஆயிட்டுது!”ன்னான் அந்த ஆளு!”
ராஜா சளைக்கலே! இன்னொரு ஆளையும் கூப்பிட்டு விசாரிச்சார். “ஐயா! நான் வேற ஒண்ணும் பண்ணலே. ஒரு சின்ன கோயில் கட்டலாம்னு நினைச்சி பலபேருகிட்டே நன்கொடை வசூல் பண்ணினேன். பணம் கொடுத்தவங்கள்லாம் இன்னோண்ணையும் குடுத்துட்டாங்க. அதாவது எம்பேர்ல புகாரையும் கொடுத்துட்டாங்க! வசூல் பண்ணின பணத்தையெல்லாம் சாப்பிட்டுப்டேன்னு சொல்லி என்னை இங்கே கொண்டு விட்டுட்டாங்க!” அப்படின்னான் அவன்! இப்படி எல்லாருமே தான் ஒரு தப்பையும் பண்ணலேன்னும். அநியாயமா சிறையிலே கொண்டாந்து அடைச்சிட்டாங்கன்னும் சொல்லிக்கிட்டிருந்தாங்க.
ராஜா கடைசியா வேற ஒரு ஆளுகிட்டே போனார். “நீ என்ன காரணத்துக்காக ஜெயிலுக்கு வந்தே?”ன்னார். “ஐயா. நான் ரொம்ப ஏழை! ஏழு பிள்ளைங்க! வயசான அப்பா. அம்மா. இருக்காங்க. வேலை செஞ்சும் போதுமான கூலி கிடைக்கலே! சில சமயத்துலே வேலையும் கிடைக்கறதில்லே. பசிக்கொடுமை. தாங்க முடியலே! அதனாலே செய்யக் கூடாத ஒரு காரியத்தைச் செஞ்சுட்டேன்! ஒரு செல்வந்தர் வீட்டுலே திருடிப்புட்டேன்! திருடுறது பெரிய குற்றம்! புத்திகெட்டுப் போயி அப்படி நடந்துகிட்டேன்! அதனாலே பிடிபட்டேன்! நியாயப்படி எனக்கு மூணு வருஷம் சிறைத்தண்டனை கிடைச்சுது. அதனாலே நான் இங்கே வர்றதுக்கு வேறே யாரும் காரணம் இல்லே! நான் தான் காரணம்| செஞ்ச குற்றத்தை நினைச்சி நான் தினமும் அழுதுகிட்டிருக்கேன்”. அப்படின்னான் அந்த ஆள்!
ராஜா உடனே சிறை அதிகாரியைக் கூப்பிட்டார் வேகமா. அவர் வந்து நின்னார். “இதோ பாருங்க! இங்கே வந்திருக்கிறவங்க யாருமே ஒரு குற்றமும் பண்ணாதவங்க! இந்த ஒரு ஆள் மட்டும்தான் குற்றம் பண்ணினவன். நல்லவங்க பலபேரு இருக்கிற இந்த இடத்துலே ஒரு பொல்லாதவன் இருக்ககூடாது! அதனாலே உடனே இவனை விடுதலை செய்து வெளியிலே அனுப்பிச்சுடுங்க!”ன்னு உத்தரவு போட்டார். தவறை உணர்ந்தவன் வெளியிலே வந்துட்டான்.
பூங்கா இதழ் (The News Park) கருத்து:
செய்த குற்றத்தை ஒப்புக் கொள்றதுங்கறது ஒரு பெரிய குணம். அதுக்குத் தைரியமும் மனப்பக்குவமும் வேண்டும்! மனிதனுக்கு அந்த மனப்பக்குவமும் வந்துவிட்டால் அதன் பிறகு எல்லாமே நன்மை தான்.




