2025 ஜூன் 4: பெங்களூரில் நடைபெற்ற ஐபிஎல் வெற்றி கொண்டாட்டத்திற்கு லட்சக்கணக்கில் ரசிகர்கள் வருகை. கூட்ட நெரிசலில் சிக்கி 11 நபர்கள் உயிரிழப்பு, பலர் படுகாயம்.
அகமதாபாத்தில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர் அணி வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து பெங்களூரில் உள்ள சின்னச்சாமி கிரிக்கெட் மைதானத்தில் ஜூன் 4, மாலை 5 மணிக்கு தேதி வெற்றி கொண்டாட்டத்தை நடத்துவதாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் சமூக வலைதள பக்கத்தில் செய்தி வெளியிடப்பட்டது. இந்த தகவலை வெளியிட்ட நேரம் 2025 ஜூன் 4, மதியம் 3. 14 மணி.
எவ்வித தகவலையும் தராமல் வெற்றி கொண்டாட்டத்தை நடத்துவதாக வெளியிட்ட அறிவிப்பால் காவல்துறையும் மாநகராட்சி நிர்வாகம் அதிர்ச்சி அடைந்தது. இரண்டு மணி நேரத்துக்குள்ளாக போதிய ஏற்பாடுகளை செய்ய உள்ளூர் நிர்வாகத்திற்கும் காவல்துறைக்கும் போதிய நேரமில்லை. இத்தகைய போக்குக்கு காரணம் கிரிக்கெட் அணியின் நிர்வாகமே ஆகும். கூட்ட நெரிசலில் உயிரிழந்த அப்பாவி ரசிகர்களின் மரணத்திற்கு காரணம் யார்? என்பதை நீங்களே யூகிங்கள்.
2025 ஜூன் 9: மும்பையில் திவா மற்றும் மும்பிரா ரயில் நிலையங்களுக்கிடையே இரண்டு ரயில்கள் எதிர் எதிர் திசையில் சென்று கொண்டிருந்தன. அதிக கூட்டம் காரணமாக இரண்டு ரயில்களிலும் பயணிகள் படிக்கட்டுகளில் தொங்கிக் கொண்டிருந்தனர். இரண்டு ரயில்களுக்கு இடையே தொங்கிக் கொண்டிருந்த பயணிகளின் பைகள் உரசியதால் ரயிலிலிருந்து 13 பயணிகள் கீழே விழுந்தத விபத்தில் 4 பயணிகள் உயிரிழந்ததுடன் ஆறு பயணிகள் சிகிச்சையில் உள்ளனர்.
ரயில் பெட்டிகளில் அமர்வதற்கும் நிற்பதற்கும் அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக பயணிகளை ஏற்றாமல் இருக்க போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது யார் பொறுப்பு? கூட்டத்தை கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பில் இருப்பவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்?
2025 ஜூன் 12: அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் சில நிமிடங்களிலேயே இரண்டு இன்ஜின்களும் இயங்காததால் மேலே செல்ல முடியாமல் கீழே விழுந்ததில் 241 பயணிகள் உயிரிழப்பு. விமானம் விழுந்த இடத்தில் இருந்த கட்டிடத்தில் இருந்த சுமார் 30 நபர்கள் உயிரிழப்பு. இந்த உயிரிழப்புகளுக்கு தொழில்நுட்ப கோளாறு காரணமா? மனித தவறு காரணமா? முன்னெச்சரிக்கை இல்லாததா? என்பது விசாரணைக்கு பின்னர் தெரிய வரும் என நம்புவோமாக.
2025 ஜூன் 15: உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத் அருகே ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானதில் பைலட் உட்பட ஏழு பேர் உயிரிழப்பு. மலை பிரதேசமான உத்தரகாண்ட் மாநிலத்தில் ஹெலிகாப்டர்கள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. இங்கு இயந்திர கோளாறு, வானிலை பிரச்சனை காரணமாக ஹெலிகாப்டர்கள் அவசர அவசரமாக தரை இறக்கும் சம்பவங்கள் அதிகம். இங்கு அடிக்கடி ஹெலிகாப்டர் விபத்துக்கள் நடக்கின்றன. சரியான திட்டங்களும் முன்னெச்சரிக்கையும் இல்லாத நிர்வாகமே இந்த விபத்துகளுக்கு காரணம் என்றால் மிகையாகாது.
2025 ஜூன் 15: மகாராஷ்டிரா மாநிலம், புனே மாவட்டத்தில் குண்ட்மாலா கிராமத்தில் இந்திரயானி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த இரும்பு பாலம் இடிந்து விழுந்ததில் நான்கு பேர் உயிரிழப்பு, 28 பேர் அடித்துச் செல்லப்பட்டு இருக்கலாம் என்று அச்சம் நிலவுகிறது. இந்த பாலம் துருப்பிடித்து சேதம் அடைந்திருந்த நிலையில் அதிக மக்கள் கூடியதால் இடிந்து விழுந்து இருக்கலாம் என்று மகாராஷ்டிரா துணை முதல்வர் கருத்து தெரிவித்துள்ளார். சேதமடைந்த பாலத்தில் அதிக மக்கள் கூட்டம் செல்லாமல் கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பு உள்ளூரில் நிர்வாகமா? உள்ளூர் காவல்துறையா? ஏன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.
பூங்கா இதழ் (The News Park) கருத்து: உரிய முன்னெச்சரிக்கை திட்டங்கள் இருப்பின் திட்டங்களை மேற்கொண்டால் விபத்துக்களை தடுத்து அப்பாவிகளின் உயிர்களை காப்பாற்ற முடியும். திட்டமிடல் என்பது உள்ளூர் நிர்வாகம் முதல் மாநில மற்றும் மத்திய அரசுகளின் அமைப்புகளின் கைகளில் உள்ளது.