யார் வேண்டுமானாலும் பச்சை மையில் கையெழுத்து போடலாமா?

சாமானிய இந்திய குடிமகன் பச்சை மையினால் கையொப்பமிடக்கூடாது என அரசாணை இருப்பின் அதன் நகல் வழங்கவும் என்று தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டம், லோயர் கேம்பில் வசிக்கும் சண்முகசுந்தரம் என்பவர் தகவல் பெறும் உரிமைச் சட்டப்படி விண்ணப்பம் செய்துள்ளார். மனுதாரர் கோரிய சாமானிய இந்திய குடிமகன் பச்சை மையினால் கையப்பமிடக்கூடாது என்பதற்கான அரசால் பிறப்பிக்கப்பட்ட ஆணைகள் எதுவும் இப்போது அதிகார அமைப்பில் இல்லை என்று தகவல் பெறும் உரிமைச் சட்டப்படி மேல்முறையீட்டு அலுவலராக உள்ள தேனி மாவட்ட வருவாய் அலுவலர் இதற்கு பதில் அளித்துள்ளார்.
இவ்வாறான பதில் கடிதம் ஒன்றை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இந்திய குடிமகன் யார் வேண்டுமானாலும் பச்சை மையினால் கையெழுத்து இடலாம் இவ்வளவு நாள் அறியாமையில் இருந்திருக்கிறோம் எனக் குறிப்பிட்டு சமூக வலைத்தளத்தில் ஒருவர் செய்தி வெளியிட்டுள்ளார்.
யாரெல்லாம் பச்சை மையில் கையெழுத்து இடலாம்? என்ற தகவலை தகவல் உரிமைச் சட்டப்படி சம்பந்தப்பட்ட தகவல் வழங்கும் அலுவலரிடம் கேட்டால் அது குறித்து அரசாணை விவரங்கள் வழங்கப்படும். யாரெல்லாம் பச்சை மையில் கையெழுத்திடலாம் என்று அரசு வரையறைத்துள்ள நிலையில், இதற்கு பொருள் என்னவெனில் இவ்வாறு வரையறுக்கப்பட்டுள்ளவர்களை தவிர மற்றவர்கள் பச்சை மையில் கையொப்பம் செய்யக்கூடாது என்பதாகும்.
இதிலிருந்து தெரிய வருவது என்னவெனில், கேட்கப்படும் தகவலை பொறுத்தே தகவல் வழங்கும் அலுவலரால் பதில் தரப்படுகிறது. இவ்வாறு வழங்கப்பட்ட பதிலை அடிப்படையாக வைத்து எதிர்மறையான கருத்துக்களை நாமே யூகித்துக் கொள்ளக் கூடாது.
குறைந்த கடன் வாங்கி மோசடி செய்தால் உடனே காவல்துறையில் புகார், கைது. ரூ 31,850 கோடி மோசடிக்கு ரிசர்வ் வங்கியில் மட்டுமே புகார்?

இந்தியாவில் முக்கியமான தொழிலதிபரான அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் மற்றும் அதன் துணை நிறுவனங்கள் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியிடம் ரூ 31,850 கோடி கடன் பெற்றிருந்தது. இந்த கடன் தொகையை என்ன கடனுக்கு பெறப்பட்டதோ அந்த காரணங்களுக்காக பயன்படுத்தாமல் வேறு வணிக நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டதாக ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா கண்டறிந்துள்ளது. இதன் மூலம் கோடிக்கணக்கான கடன் பெறும்போது ஒப்புக்கொள்ளப்பட்ட விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் இந்த நிறுவனங்கள் மீறிவிட்டதாக ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா கூறியுள்ளது. இதுகுறித்து ரிசர்வ் வங்கியில் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் மற்றும் அதன் துணை நிறுவனங்கள் மீது ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா புகார் அளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது (தினகரன் செய்தி 03.07.2025).
இந்திய குடிமக்களின் பணத்தை கையாளும் முக்கிய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா என்பது மத்திய அரசு சொந்தமான வங்கி என்பது அனைவருக்கும் தெரியும். இத்தகைய வங்கிகளில் ரூபாய் ஒரு லட்சம் கடன் பெற்றுக் கொண்டு அதனை வேறு தொழிலுக்கு பயன்படுத்தினால் உடனடியாக கடன் வாங்கியவர் மோசடி செய்து விட்டார் என்று காவல் நிலையத்தில் புகார் கொடுத்து விடுவார்கள் என்று தானே நாம் அறிந்திருக்கிறோம்? ஒருவேளை கோடிக்கணக்கில் கடன் வாங்கினால் குறைந்த கடன் வாங்குபவர்களுக்கு வரக்கூடிய பிரச்சனைகள் வராதோ என்னவோ?
ஏற்கனவே கார், ஆட்டோ வாடகை அதிகமாக வசூலிக்கப்படுகிறது மத்திய அரசின் புதிய கொள்கை எதிரொலியால் இரண்டு மடங்காக வாடகை உயரும் அபாயம்.

பெரிய நகரங்களில் இருந்து சிறிய நகரங்கள் வரை ஆட்டோ, கார் போன்றவை ஆன்லைன் மூலம் முன்பதிவு பதிவு செய்து அதனை பயன்படுத்தி மக்கள் வாடகை செலுத்துகிறார்கள். இவ்வாறான ஆன்லைன் முன்பதிவு பயண முறை தொடங்கிய காலத்தில் மிக குறைவான கட்டணங்களை வசூலிக்கப்பட்டது. இதனால் தனிநபர்கள் இயக்கி வந்த ஆட்டோ மற்றும் கார் உள்ளிட்டவற்றை மக்கள் நாடவில்லை. இதனால், தனிநபர்களின் ஆட்டோ மற்றும் கார் ஆகியவை பயன்பாட்டில் குறைந்துவிட்டது. இந்த நிலை ஏற்பட்டவுடன் ஆன்லைனை நிறுவனங்கள் முன்பு இருந்ததை விட அதிக அளவில் வாகன கட்டணங்களை உயர்த்தி விட்டனர். இந்த நிலையில் அதிக பயன்பாடு உள்ள நேரங்களில் ஆட்டோ மற்றும் கார் உள்ளிட்ட வாகனங்களின் வாடகை கட்டணத்தை இரண்டு மடங்காக உயர்த்திக் கொள்ள ஆன்லைன் வாகன வாடகை நிறுவனங்களுக்கு மத்திய அரசு சமீபத்தில் ஒப்புதல் அளித்துள்ளது.
மாநில கல்விக் கொள்கை பரிந்துரையின்படி பள்ளியில் நடத்தப்படும் பயிற்சி மையங்கள் எப்போது தடை செய்யப்படும்?

மாநிலத்தின் புதிய கல்விக் கொள்கையை தயாரிக்க கடந்த 2022 ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் 14 நிபுணர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவானது கல்வியாளர்கள், ஆசிரியர்கள் உட்பட பல்வேறு தரப்பினரின் கருத்துக்களை கேட்டறிந்து சுமார் 600 பக்கங்கள் கொண்ட அறிக்கையை தயாரித்து கடந்த 2023 அக்டோபரில் தமிழக அரசிடம் சமர்ப்பித்தது.
பள்ளிகளில் நடத்தப்படும் பயிற்சி மையங்களை தடை செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு மாநில கல்விக் கொள்கை பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் பள்ளியில் நடத்தப்படும் பயிற்சி மையங்கள் எப்போது தடை செய்யப்படும்? என்ற கேள்வியை கல்வியாளர்கள் எழுப்பி உள்ளதாக தெரிகிறது. மாநில புதிய கல்விக் கொள்கை குறித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகள் என்ன? என்பதை தமிழக அரசு உடனடியாக வெளியிட வேண்டும் என்றும் அமல்படுத்தக்கூடிய பரிந்துரைகளை உடனே அரசு அமல்படுத்த வேண்டும் என்றும் கல்வியாளர்கள் கோரி வருகிறார்கள்.
பூங்கா இதழ் (The News Park) கருத்து: சின்ன சின்ன செய்திகள் ஆனால் பெரிய பெரிய கேள்விகளை எழுப்பி உள்ளது.