நியமனம்
தமிழகத்தில் உள்ள மாநில தகவல் ஆணையத்தில் ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி மது ஷகீல் அதர், மாநில தலைமை தகவல் ஆணையராகவும் ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி தாமரைக்கண்ணன் (ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி), பிரிய குமார் (முன்பு வழக்கறிஞராக பணியாற்றியர்), திருமலை முத்து (முன்பு மத்திய அரசின் பணியில் இருந்தவர்), செல்வராஜ் (முன்பு பேராசிரியராக பணியாற்றியவர்) ஆகியோர் மாநில தகவல் ஆணையராகவும் பணியாற்றி வருகின்றனர்.

தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் காலியாக உள்ள இரண்டு மாநில தகவல் ஆணையர் பதவிகளுக்கு வழக்கறிஞர்களாக உள்ள இளம்பரிதி, நடேசன் ஆகிய இருவரை மாநில முதலமைச்சர் தலைமையிலான தேர்வுக்குழுவின் பரிந்துரையின்படி மாநில தகவல் ஆணையராக நியமித்து மாநில ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.

Tamil Nadu Lokayukta
உயர் நீதிமன்றத்தில் அரசின் கூடுதல் வழக்கறிஞராக வழக்கறிஞர் வி. பி. ஆர். இளம்பரிதி தற்போது பணியாற்று வருகிறார். இவர் ராஜபாளையம் தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ விபி ராஜனின் மகன் ஆவார். திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் பிறந்து அறிவியலில் முதுநிலை பட்டம் பெற்று பின்னர் சட்டம் படித்து கடந்த 1991 ஆம் ஆண்டு முதல் வழக்கறிஞராக பணியாற்றுபவர் எம். நடேசன். இவர் பெங்களூர் நீதிமன்றங்களிலும் தமிழக நீதிமன்றங்களிலும் ஆஜராகி இதுவரை வழக்கறிஞராக பணியாற்றி வந்துள்ளார். தமிழ்நாடு லோக் ஆயுக்தாவில் உறுப்பினராக உள்ள டாக்டர் வீ. ராமராஜ் அவர்களும் இவரும் ஒரே சட்டக் கல்லூரியில் ஒரே வகுப்பில் படித்தவர்கள்.
தகவல் அறியும் உரிமைச் சட்டம்
அரசு மற்றும் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அலுவலகங்களில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை (transparency and accountability) ஊக்குவிப்பதற்காக, கடந்த 2005 ஆம் ஆண்டு, பொதுமக்கள் தகவல்களை கேட்டு பெறுவதற்கான உரிமையை வழங்கும் தகவல் உரிமை சட்டம் (Right to Information Act) இயற்றப்பட்டு 2005 ஜூன் 15 அன்று குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெற்று நடைமுறைக்கு வந்தது.
விண்ணப்பம்
இந்தச் சட்டம் இயற்றப்பட்டவுடன் மத்திய அரசு மற்றும் மாநில அரசு அலுவலகங்களில் பொது தகவல் அலுவலர்கள் (public Information Officer) இன்னார் என்று வரையறுக்கப்பட்டது. பொதுமக்கள் எவரும் தகவல் உரிமைச் சட்டப்படி தகவல்களை கேட்டு விண்ணப்பங்களை பொது தகவல் அலுவலரிடம் சமர்ப்பிக்கலாம். இதற்கு ரூபாய் பத்து கட்டணமாக (fee) செலுத்த வேண்டும். கேட்கப்படும் தகவல்கள் அதிக பக்கங்களை கொண்டதாக இருப்பின் ஒவ்வொரு பக்கத்துக்கும் ரூபாய் இரண்டு கூடுதலாக செலுத்த வேண்டும். ஒவ்வொரு அலுவலகத்திலும் பொது தகவல் அலுவலர் யார் என்ற ஒவ்வொரு அலுவலகத்திலும் பொது தகவல் அலுவலர் யார் என்ற அறிவிப்பு பகலையாக (notice board) வைத்திருக்க வேண்டும்.
தகவல் பெறும் உரிமைச் சட்டப்படி சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களுக்கு 30 நாட்களுக்குள் பொது தகவல் அலுவலர் பதில் வழங்க வேண்டும். விண்ணப்பதாரர்களால் கேட்கப்பட்டுள்ள தகவல்கள் தங்கள் அலுவலகம் சார்ந்தது அல்ல எனில் சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் உள்ள பொது தகவல் அலுவலருக்கு விண்ணப்பத்தை பெற்ற பொது தகவல் அலுவலர் அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பங்களில் கேட்கப்பட்டுள்ள தகவல்கள் மறுக்கப்பட்டால் (rejection) அதற்கான காரணங்களை விண்ணப்பதாரருக்கு தெரியப்படுத்த வேண்டும்.
மேல்முறையீடு
கேட்கப்பட்ட தகவல்களை மறுத்து அதற்கான காரணங்களை (grounds of rejection) பொதுத் தகவல் அலுவலர் தெரிவித்தாலும் காரணங்களை தெரிவிக்காமல் (non-disclosure of reasons of rejection) பொதுப்படையாக மறுத்தாலும் வழங்கப்பட்ட கேட்கப்பட்ட கேள்விகளுக்கு போதுமான பதில்களாக இல்லை (insufficient information) என்றாலும் தகவலை கேட்ட விண்ணப்பதாரர் தகவல் உரிமைச் சட்டப்படி நியமனம் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு அலுவலருக்கு (appellate authority) 30 நாட்களுக்குள் மேல் முறையீடு செய்யலாம். இதற்கு கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை. இவ்வாறு மேல்முறையீட்டை பெறும் அலுவலர் 30 நாட்களுக்குள் விண்ணப்பதாரருக்கு தகவல்களை வழங்க வேண்டும். தகவல்களை திரட்ட கால அவகாசம் வேண்டும் எனில் மேலும் 15 நாட்கள் எடுத்துக் கொள்ளலாம். ஆனால், இந்த விவரத்தை மேல்முறையீட்டு அலுவலர் விண்ணப்பதாரருக்கு தெரிவிக்க வேண்டும்.
இரண்டாவது மேல்முறையீடு
பொது தகவல் அலுவலர் தகவல் மறுத்த தர மறுத்ததை சரி என்று மேல்முறையீட்டு அலுவலர் உறுதி செய்தாலும் வழங்கப்பட்ட தகவல்கள் போதுமானவை என்று தெரிவித்தாலும் அதில் திருப்தி அடைய விட்டால் இரண்டாவது மேல்முறையீட்டை (second appeal) விண்ணப்பதாரர் 90 நாட்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும். மாநில அரசு தொடர்புடைய துறையின் மேல்முறையீட்டு அலுவலரின் முடிவை எதிர்த்து மாநில தகவல் ஆணையத்திலும் மத்திய அரசு தொடர்புடைய மேல்முறையீட்டு துறையின் மேல்முறையீட்டு அலுவலரின் முடிவை எதிர்த்து மத்திய தகவல் ஆணையத்திலும் இரண்டாவது மேல்முறையீடு செய்ய வேண்டும்.
மத்திய அரசின் மேல்முறையீட்டு அலுவலர்களின் முடிவுக்கு எதிரான இரண்டாவது மேல் முறையீடுகளை விசாரிக்க மத்திய தகவல் ஆணையம் (central information commission) அமைக்கப்பட்டுள்ளது. இதில் மத்திய தலைமை தகவல் ஆணையரும் மத்திய தகவல் ஆணையர்களும் மத்திய அரசால் நியமனம் செய்யப்படுகின்றனர். இதை போலவே, மாநில அரசின் மேல்முறையீட்டு அலுவலர்களின் முடிவை முடிவுக்கு எதிரான இரண்டாவது மேல் முறையீடுகளை விசாரிக்க மாநில தகவல் ஆணையம் (state information commission) அமைக்கப்பட்டுள்ளது. இதில் மாநில தலைமை தகவல் ஆணையரும் தகவல் மாநில தகவல் ஆணையர்களும் மாநில அரசால் நியமனம் செய்யப்படுகின்றனர். தகவல் ஆணையராக நியமனம் செய்யப்படுபவர்கள் மூன்றாண்டு காலத்திற்கு அல்லது 65 வயது முடியும் வரை (இதில் எது முதலில் வருகிறதோ) பணியாற்றுகிறார்கள்.
விலக்கு
அரசின் இறையாண்மை, பாதுகாப்பு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ,வெளிநாட்டு உறவுகள் உள்ளிட்ட தகவல்களையும் நீதிமன்றத்தால் வெளிப்படையாக வழங்கக் கூடாது என்று தடை செய்யப்பட்ட தகவல்களையும் வழக்கு விசாரணைக்கு பாதிப்பு ஏற்படுத்த கூடும் என்ற விவரங்களையும் வெளிநாட்டு அரசுகளிடமிருந்து ரகசியமாக கிடைக்கப்பெற்ற தகவல்களையும் தனிநபரின் சொந்த விவரங்கள் உள்ளிட்ட தகவல்களையும் பெற இயலாது. தகவல்களை வழங்குவதற்கு சில சங்கதிகளுக்கு தகவல் உரிமைச் சட்டம் பிரிவு 8 -ன்படி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எத்தகைய தகவல்கள் வழங்கப்பட மாட்டாது என்ற விவரங்கள் இந்த பிரிவில் கூறப்பட்டுள்ளது.
பூங்கா இதழ் (The News Park) கருத்து: மக்களாட்சி முறையில் நல்லாட்சிக்கு தகவல் அறியும் உரிமை சிறந்த கருவியாகும்.