கடவுளை தேட வேண்டாம்
ஒரு குளத்தில் ஒரு குட்டி மீனுக்கு நீரைப் பார்க்க வேண்டுமென்று ஆசை. ”அம்மா! நாம் வாழ தண்ணீர் மிக அவசியமென்று சொல்கிறாய்.. அந்த தண்ணீர் எங்கே இருக்கிறது ? எனக்குக் காட்டு” எனக் கேட்டது. உடனே தாய் மீன் இதுதான் தண்ணீரென்று தண்ணீரைக் காட்டியது. குட்டி மீனுக்கு ஒன்றும் புரியவில்லை. ”அம்மா!நீ தண்ணீரைக் காட்டு” என மீண்டும் சொல்லியது. மீண்டும் தாய் மீன் தண்ணீரைக் காட்டியது. அப்போதும் குட்டிமீனுக்கு தண்ணீர் தெரியவில்லை.
உடனே அது இந்த அம்மாவுக்கு ஒன்றுமே தெரியாது என சொல்லிக் கொண்டே, அப்பா மீனிடம் இதே கேள்வியைக் கேட்டது. அப்பாவும் அதே மாதிரி தண்ணீரைக் காட்ட அப்பாவுக்கும் ஒன்றும் தெரியாது எனத் தீர்மானித்து விட்டது. பிறகு உறவினர்களிடம் போய் இதே கேள்வியைக் கேட்டது. எல்லோரும் ஒரே பதிலையே சொன்னார்கள்.
திருப்தி அடையாத மீன் யாருக்குமே ஒன்றும் தெரியாது என்று தீர்மானித்து இறுதியில் உருவத்தில் பெரிய திமிங்கலத்திடம் வந்து தண்ணீரைக் காட்டச் சொன்னது. உடனே திமிங்கலம் குட்டி மீனை தன் முதுகில் ஏறச் சொன்னது. குட்டி மீனும் முதுகில் ஏறியது. கரை நோக்கிச் சென்ற திமிங்கலம் குட்டி மீனை கரையில் எறிந்தது. குட்டி மீன் தண்ணீர் இல்லாமல் துடிதுடித்து உயிருக்குப் போராடியது.
அப்போது திமிங்கலம் இதுதான் தண்ணீர் என்று தண்ணீரைக் காட்டி மீண்டும் குட்டி மீனைத் தண்ணீரில் விட்டது. அப்போதுதான் குட்டி மீனுக்கு தண்ணீர் தண்ணீராகத் தெரிந்தது. அதுபோல்தான் கடவுளும் உலகின் ஒவ்வொரு அணுவிலும் ஒவ்வொரு உருவில் நிரம்பி இருந்தாலும் பலருக்கும் அவர் தெரிவதில்லை. எல்லோரும் கடவுளைத் தேடிக்கொண்டே இருக்கிறார்கள். தனக்கு உள்ளே இருக்கும் கடவுளை யாரும் உணர்வதே இல்லை. கடவுளை அனுபவித்துதான் அறிய முடியும்.
தங்க நாணய பாகப்பிரிவினை எளிதாக முடிந்து வைத்த கணிதமேதை
இரவு நேரம். ஆளரவமற்ற சாலையோர விடுதியில் 2 பயணிகள் அமர்ந்திருந்தனர். அப்போது அங்கே இன்னொருவர் வந்து சேர்ந்தார். வந்தவர் “நான் ஒரு வழிப்போக்கன் இரவு இங்கே தங்கலாமா?” எனக் கேட்டார். “தாராளமாய் தங்குங்கள்” என்றனர். சிறிது நேரம் கழித்து “எனக்கு சாப்பிட ஏதாவது கிடைக்குமா”? என்றார் வந்தவர்.
இருவரில் ஒருவர் சொன்னார், “என்னிடம் 5 ரொட்டிகள் இருக்கின்றது”. இரண்டாமவர் “என்னிடம் 3 ரொட்டிகள் இருக்கின்றது. ஆக மொத்தம் 8 ரொட்டிகள். இதனை நாம் எப்படி மூவரும் சமமாய் பிரித்துக்கொள்ள முடியும்?” என்றார். 3ம் நபர், “இதற்கு நான் ஒரு வழி சொல்கிறேன்” என்றவர் “நீங்கள் உங்களது ஒவ்வொரு ரொட்டியையும் 3 துண்டுகளாக வெட்டுங்கள். இப்பொது 3X8=24 துண்டுகள் கிடைக்கும். நாம் மூவரும் ஆளுக்கு 8 துண்டுகள் எடுத்துக் கொள்ளலாம்” என்றார்.
இது சரியான யோசனை என்று அப்படியே செய்தனர். ஆளுக்கு 8 துண்டு ரொட்டிகளை சாப்பிட்டுவிட்டு உறங்கினர். பொழுது விடிந்தது. 3-வதாய் வந்தவர் கிளம்பும்போது, “உங்கள் உதவிக்கு மிக்க நன்றி”, என்று சொல்லி 8 தங்க நாணயங்களை கொடுத்து, “நீங்கள் உங்களுக்குள் பிரித்து கொள்ளுங்கள்”, என்று சொல்லிவிட்டு விடை பெற்றார்.
3 ரொட்டிகளை கொடுத்தவர் அந்த காசுகளை சமமாகப் பிரித்து, “ஆளுக்கு 4 எடுத்துக்கொள்ளலாம்” என்றார். மற்றவர் இதற்கு சம்மதிக்கவில்லை. “3 ரொட்டிகளிலிருந்து கொடுத்த உனக்கு 3 காசுகள். 5 ரொட்டிகளிலிருந்து கொடுத்த எனக்கு 5 காசுகள்” என வாதிட்டார். 3 ரொட்டிகள் கொடுத்தவர் ஏற்கவில்லை. “என்னிடம் 3 ரொட்டிகள் இருந்தபோதும், நான் பங்கிட சம்மதித்தேன்! நிறைய இருப்பவன் கொடுப்பது ஒன்றும் பெரிய செயல் ஆகாது. அதனால் என் செய்கையே பாராட்டத்தக்கது. எனினும் பரவாயில்லை, சமமாகவே பங்கிடுவோம்” என்றார்.
சுமுகமான முடிவு எட்டாததால், விஷயம் கணிதமேதையிடம் சென்றது. அவர் 3 ரொட்டிகளை கொடுத்தவருக்கு 1 காசும், 5 ரொட்டி கொடுத்தவருக்கு 7 காசுகளும் கொடுத்தார்.1 காசு வழங்கப்பட்டவருக்கு ஷாக் அந்த 1 காசு வழங்கப்பட்டவர், “இது அநியாயம். அவரே எனக்கு 3 காசுகள் கொடுக்க ஒப்புக் கொன்டார்” என அலறினார்.
கணிதமேதை சொன்னார், “நீ உன்னிடம் இருந்த 3 ரொட்டிகளை 9 ரொட்டித் துண்டுகளாக்கி கொடுத்தாய். அதிலும் 8 துண்டுகள் உன்னிடமே வந்து விட்டது. அவர் தன் கையிலிருந்த 5 ரொட்டிகளை 15 ரொட்டித துண்டுகளாக்கி கொடுத்தார். அவருக்கும் 8 துண்டுகள்தான் கிடைத்தது. ஆக நீ கொடுத்தது 1 துண்டு ரொட்டி. அவர் கொடுத்தது 7 துண்டுகள். நீ கொடுத்த 1 துண்டுக்கு 1 காசு வீதம் பிரித்துக் கொடுத்திருக்கிறேன்” என்றார்.
பூங்கா இதழ் (The News Park) கருத்து: இரண்டு குட்டிக் கதைகள் நம் சிந்தனை வலையை விரிக்கின்றன.