அமைதியை ஒரு கலாச்சாரமாக்குவோம்! Let’s make peace a noble culture!

மனித வரலற்றில் யுத்தம் இல்லாத காலப்பகுதியை காண முடியாது. மனிதன் தோன்றி சிறுசிறு குழுக்களாக வசிக்கத் தொடங்கிய போது அந்த குழுக்களிடையே பாரம்பரிய முறையில் சண்டைகள் யுத்தங்களாக அவதரித்தன. மன்னர் ஆட்சி தோன்றிய போது நாடுகளிடையே யுத்தங்கள் நடைபெற்றுள்ளன மக்களாட்சி உலகம் முழுவதும் பரந்த போதும் ஒழுங்கமைக்கப்பட்ட அரசுகளிடையே தொடர்ந்து யுத்தம் நடைபெற்றுக் கொண்டுதான் உள்ளது.

1925 ஆம் ஆண்டு யுத்தத்திற்கான காரணங்களும் குணப்படுத்துதலும் (cause and cure of war) என்ற தலைப்பில் நடத்தப்பட்ட மாநாட்டில் 250 யுத்தத்திற்கான காரணங்கள் வெளியிடப்பட்டன. இதில் அரசியல், சமூக, சித்தாந்த, சமூக -சமய, பொருளாதார, உளவியல் காரணங்கள் அடிப்படை அம்சங்களாக இருந்தன. யுத்தம் எண்ணற்றோரின் வாழ்க்கையினை அழித்து ஒழித்து இருப்பதை சரித்திரம் நமக்கு தொடர்ந்து சொல்லிக் கொண்டுதான் உள்ளது யுத்தத்தின் பயங்கரத்தினை நிரூபிப்பதற்கான ஆதாரங்கள் தேவையற்றது.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இரண்டு முறை நடைபெற்றது போன்ற முழு யுத்தம் (total war), இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் நடைபெற்ற கார்க்கில் பிரதேசத்தில் நடைபெற்ற குறிப்பிட்ட குறிப்பிட்ட அளவிலான மட்டுப்படுத்தப்பட்ட யுத்தம் (limited war), உள்நாட்டில் இனக்குழுக்களுக்கு இடையே இனக்குழுக்களுக்கும் உள்நாட்டு அரசாங்கத்திற்கும் இடையேயவும் நடைபெறக்கூடிய சிவில் யுத்தம் (civil war), இலங்கையில் விடுதலைப்புலிகள் நடத்தியது போன்ற கொரில்லா யுத்தம் (guerrilla war), நவீன உலகில் தோன்றியுள்ள சைபர் யுத்தம் (cyber war) உள்ளிட்ட அறிவியல் போர்கள் என பல வகைகளில் யுத்தமானது சர்வதேச அளவில் வகைப்படுத்தப்படுகிறது சரித்திர ரீதியாக பார்க்கும் போதும் யுத்தங்கள் பல வகைகளில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

தற்போது ரஷ்யாவுக்கும் உக்கிரைனுக்குமான யுத்தமும் இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்குமான யுத்தமும் முழு அளவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கிரீன்லாந்தை கைப்பற்றுவதற்கு அமெரிக்கா யுத்தத்தை தொடங்கலாம் என்று சர்வதேச பார்வையாளர்கள் யூகிக்கின்றனர். யுத்தத்தில் யார் வெற்றி பெற்றாலும் இரண்டு பக்கமும் மனிதர்களின் இறப்புகளையும் உடல் ரீதியிலான அங்க இழப்புகளையும் பொருளாதார இழப்புகளையும் யுத்தம் பரிசாக வழங்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

காஷ்மீரில் பகல்காமில் பொதுமக்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் காரணமாக இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது நாடு முழுவதும் நாளை போர்க்கால ஒத்திகைகளை மாநில அரசு நடத்த வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. சர்வதேச நாடுகளிடையே தங்களது நிலையை விளக்கி இந்தியா மேற்கொண்டுள்ள ராஜதந்திர நடவடிக்கைகளையும் பாகிஸ்தான் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள பொருளாதார நடவடிக்கைகளையும் உற்று நோக்கும் பாகிஸ்தான் தங்கள் மீது எப்போது வேண்டுமானாலும் இந்தியா போர் நடத்தலாம் என்று உரக்க கத்திக் கொண்டுள்ளது.

இந்தியாவின் தரைப்படை (army), விமானப்படை (air force), கப்பல் படை (navy) போன்றவை பாகிஸ்தானை விட வலுவானது என்பதோடு பாகிஸ்தானில் உள்ள எண்ணிக்கையை விட பல மடங்கு பெரியதாக உள்ளது. உலகில் மிகப்பெரிய ராணுவங்களில் இந்திய ராணுவமும் ஒன்று என்பது உலகறிந்த உண்மை. பொருளாதார நிலைமையிலும் பாகிஸ்தானை விட இந்தியா முன்னேறியுள்ளது. பாகிஸ்தானில் பொருளாதாரம் மிகவும் மோசமாக உள்ளதோடுபலுசிஸ்தான் போராளிகள் நடத்தும் உள்நாட்டு யுத்தம், அரசியல் நிலையற்ற தன்மை, அரசாங்கத்தில் ராணுவத்தின் ஆதிக்கம், சீனாவை தவிர ஓரிரு இஸ்லாமிய நாடுகள் மட்டுமே ஆதரவு என்ற நிலை பாகிஸ்தானுக்கு உள்ளது. இருந்த போதிலும் இந்தியாவில் உள்ள அணு ஆயுதத்தை போலவே பாகிஸ்தானும் அணு ஆயுதத்தை பெற்றுள்ளது.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் முழு அளவிலான நேரடி யுத்தம் என்று வந்துவிட்டால் அணு ஆயுதத்தை பாகிஸ்தான் பிரயோகிக்க தயங்காது என்பதே சர்வதேச அரசியல் நிபுணர்களின் கருத்தாகும். அணு ஆயுதப் போர் என்று வந்து விட்டால் மிகப்பெரிய ஆபத்து மனித குலத்துக்கு ஏற்படும் என்ற உண்மையை ஏற்றுக் கொள்ள வேண்டியதாகவே உள்ளது.
மூன்றாம் உலகப்போர் வராது ஏனென்றால் அணு ஆயுதங்கள் மூன்றாம் உலகப்போரை தடுத்து நிறுத்தி வைத்துள்ளன என்ற கட்டுரை ஏற்கனவே பூங்கா இதழில் வெளியாகி உள்ளது. இந்தக் கட்டுரையின் இறுதியிலும் அதன் மறு பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் மிகவும் அவசியமானது என்ற நிலை வரும் வரை இந்தியா நேரடியாக போரை தொடங்காது என்றும் பாகிஸ்தான் மீது மிகப்பெரிய பொருளாதார தாக்குதலையும் எல்லைகளை பலப்படுத்தி எல்லை பிரதேசங்களில் உள்ள பயங்கரவாதிகளை அழிக்கும் போரையும் இந்தியா நடத்தும் என்றே சர்வதேச பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.
அமைதி நிலவ ராஜேந்திர நடவடிக்கைகள் மூலமும் சிறப்பு ஆயுத தாக்குதல்கள் மூலமும் பொருளாதார போர் மூலமும் இந்தியாவின் இறையாண்மையை காக்க போரிடுவோம்! நாம் சாலையில் விதிகளை மதித்து வாகனத்தை ஓட்டிக் கொண்டு இருந்தாலும் எதிரே உள்ளவர் விதிகளை மீறி நம் மீது விபத்து ஏற்படுத்தினால் நாமும் நம்மை காப்பாற்ற வாகன இயக்கத்தின் தன்மையை மாற்றுவது இயல்புதானே? போரை இந்தியா விரும்பவில்லை என்றாலும் அதனை பாகிஸ்தான் தொடக்கி வைக்கும் நிலையை உருவாக்கினால் என்ன செய்ய முடியும்?

பூங்கா இதழ் (The News Park) கருத்து: உலக அமைதி (peace) எங்கள் கொள்கை. எங்கள் இறையாண்மையை தாக்கினால் நாங்கள் கொள்கையை விட்டுக் கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்பதே நிதர்சனம்.