Advertisement

பேய் இருக்கிறதா? இல்லையா? உள்ளிட்ட கருத்து மூட்டைகளுடன் வாக்காளர் சுவாமி

அதிகாலையிலேயே பூங்கா இதழ் அலுவலகத்துக்கு வருகை புரிந்தார் வாக்காளர் சாமி. அவருக்கு வணக்கம் செலுத்தி விட்டு, “என்ன சாமி செய்திகள்?” என கேட்டதும் கருத்து மூட்டையை அவிழ்க்க தொடங்கினார் அவர்.

“நேற்று மதியம் சுமார் 4 மணிக்கு டீக்கடை ஒன்றுக்கு சென்றேன். அங்கு 50 வயது மதிக்கத்தக்க மூன்று பெண்மணிகள் பேசிக் கொண்டு இருந்தார்கள். சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு காடாக இருந்த இடத்தில் இலவச பட்டா கொடுத்தார்கள். அங்கு நானும் எனது கணவரும் குடியிருந்தோம். நான் குடிசைக்குள்ளும் குடிசைக்கு வெளியில் கட்டிலில் எனது கணவரும் இரவில் படுத்து தூங்குவது வழக்கமாகும். ஒரு நாள் இரவு சுமார் ஒரு மணிக்கு திடீரென ஏதோ சத்தம் கேட்க குடிசைக்குள் இருந்து வெளியில் பார்த்தேன். எனது கணவர் படுத்திருந்த கட்டில் அருகே வெள்ளையான ஒரு மனித உருவம் ஒன்று கால் இல்லாமல் நடந்து சென்று கொண்டிருந்தது”  என்றார்ஒரு பெண்மணி. 

“சுமார் 6, 7 வருடங்களுக்கு முன்னர் தோட்டத்தில் உள்ள வீட்டில் நாங்கள் குடியிருந்தோம். இரவு சுமார் 12 மணிக்கு தூங்கிக் கொண்டிருந்தபோது திடீரென முழிப்பு ஏற்பட்டு ஜன்னல் வழியாக பார்த்த போது தோட்டத்து கிணத்து மேட்டில் இரண்டு, மூன்று வெள்ளை கலரில் மனித உருவங்கள் நின்று கொண்டிருந்தன. ஆனால், அவற்றுக்கு கால் இல்லை.  கணவரை எழுப்பி சொன்ன போது, அவர் வெளியே வந்து பார்த்தார், ஆனால், அந்த உருவங்கள் அப்போது இல்லை”  என்றார் மற்றொரு பெண்மணி. “முன்பு பேயைப் பார்த்து மனிதர்கள் பயப்பட்டார்கள். தற்போது மனிதனைப் பார்த்து பயப்படுவதால் மனிதர்கள் இருக்கும் பகுதியில் அவை வருவதில்லை” என்றார் மூன்றாவது இந்த பெண்மணி.

“சரி சாமி, பேய் இருக்கிறதா? இல்லையா?” என்று வாக்காளர் சாமியிடம் கேட்டபோது “இது குறித்து பல விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள். மாறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன. பூங்கா இதழில் நீங்களும் ஒரு கட்டுரை வெளியிடுங்கள் என்பதற்கு இந்த செய்தியை கூறினேன் “   பேய் கருத்து முட்டையை கட்டி வைத்தார் வாக்காளர் சாமி. பேய் இருக்கிறதா? இல்லையா? என்பது குறித்த கருத்துக்களை வாசகர்களும் என்ற [email protected] மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு வாரத்துக்குள் அனுப்பலாம். தகுதி வாய்ந்த கருத்துக்கள் விரைவில் வெளியாகும் பேய் குறித்த கட்டுரையில் இடம்பெறும்.இன்று பூங்கா இதழின் 30 பயிற்சி கட்டுரையாளர்களுக்கும் கூட்டம் நடைபெறுகிறது அல்லவா? முதலில் அவர்கள் சிலரிடம் பேய் இருக்கிறதா? இல்லையா? என்று கருத்து கேட்டு வெளியிடுங்கள்” என்று வாக்காளர் சாமி வேண்டுகோள் வைத்தார்.

“முதல் அமைச்சர் வெளிநாட்டில் இருக்கும் சமயத்தில் தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தின் தரம் குறைவு என்று ஆளுநர் பேசியிருக்கிறாரே?”   என கேட்டேன் வாக்காளர் சாமியிடம். “கலைஞர் நாணய வெளியீட்டு விழா, ஆளுநரின் சுதந்திர தின தேநீர் விருந்து உள்ளிட்டவற்றால் மத்திய அரசுடன் திமுக நல்லிணக்கத்தை பேணுவதாக தமிழகத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் பேசத் தொடங்கினார்கள். இந்த கருத்துக்கு எதிராக ஆளுநரின் பேச்சு அமைந்து விட்டதால் திமுக தரப்பில் வருத்தத்தில் இருப்பதாக அறிவு புள்ளிகள் தெரிவிக்கிறார்கள். அரசியல் சதுரங்கத்தில் மாநில ஆளுங்கட்சியை மத்திய ஆளுங்கட்சிக்கு ஆதரவாக கொண்டு வரவும் மத்திய ஆளுங்கட்சியை மாநில ஆளுங்கட்சிக்கு எதிராக இல்லாமல் பார்த்துக் கொள்ளவும் நடக்கும் கண்ணாம்பூச்சி விளையாட்டு இது. முடிவு ஏற்படும் வரை மாறி மாறி விளையாட்டு தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்” என்று கூறினார் வாக்காளர் சாமி.

“எங்கும் போலி! எதிலும் கலப்படம்!” என்றார் வாக்காளர் சாமி. “மொட்டையாக கூறுகிறீர்களே சாமி” என்றேன் நான். “போலி ஐஏஎஸ் – ஐபிஎஸ் அதிகாரி, போலி வக்கீல், போலீஸ் டாக்டர் என்றெல்லாம் செய்திகளை பார்த்திருக்கிறோம். என்சிசி முகாமே போலி என்பது போலிகளின் வளர்ச்சிக்கு உச்சகட்டமாக இருக்கிறது. போலி என்சிசி முகாம் நடத்தும் அளவுக்கு கிரிமினல்கள் ரூம் போட்டு யோசிக்கிறார்கள் என்பது வேதனையாக உள்ளது. சமூகத்தில் ஊடுருவியுள்ள போலி அதிகாரிகள், போலி போலீஸ்கள், வக்கீல்கள், டாக்டர்கள் ஆகியவற்றை கண்டறிய சிறப்பு புலனாய்வு குழு அமைத்து நடவடிக்கை எடுக்க விட்டால் மக்கள் பலர் ஏமாந்து விடுவார்கள் என்று புலம்பினார் வாக்காளர் சாமி. “எங்கும் கலப்படம் என்பது உணவுப் பொருட்களில் மிக அதிகமாகி விட்டது. குறிப்பாக, அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக ரசாயன பொருட்களை உணவுப் பொருட்களை பொருட்களில் சேர்ப்பது மனிதர்களின் உடல் நலத்துக்கு வேட்டு வைப்பதாக அமைந்து விடும்” என்று புலம்பினார் வாக்காளர் சாமி. 

“வங்காள தேசத்தில் நடைபெற்ற ஆட்சி கவிழ்ப்புக்கு பின்னர் அங்கு ஆட்சி புரிந்த ஹசீனா இந்தியாவில் தஞ்சம் புகுந்து வெகு நாட்கள் ஆகிவிட்டது.  சில வெளிநாட்டு அரசுகளிடம் அடைக்கலம் அளிக்குமாறு அவர் அணுகினாலும் எந்த நாடும் உடனடியாக அவரது கோரிக்கையை ஏற்றுக் கொள்வதாக தெரியவில்லை. அவரை தங்கள் நாட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வங்கதேசத்தில் அதிகரித்துள்ளன.  தலாய்லாமாவுக்கு இந்தியா அடைக்கலம் கொடுத்த பின்னரே இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே உறவுகள் கெட்டுப் போயின. இதைப்போல ஹசீனாவும் இந்தியாவுக்கு தலைவலியாக மாறி இந்தியாவுக்கு எதிரான நாடாக வங்காளதேசம் மாறிவிடுமோ? என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்” என்றார் வாக்காளர் சாமி.

“720 அடி விட்டம் கொண்ட சிறிய கோள் ஒன்று பூமிக்கு அருகில் நெருங்கி வருகிறது என்றும் அதன் சுற்றுப்பாதை ஏதேனும்  மாறி பூமியை தாக்கினால் ஆயிரக்கணக்கான அணு குண்டுகள் தாக்கத்துக்கு உள்ளானது போல   பூவுலகம் அழிந்துவிடும் என்றும் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா தெரிவித்திருப்பது அச்சத்தை தரும் செய்தியாகும். ஆனால், அவ்வாறு நடப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என்றே கருதப்படுகிறது” என்றார் வாக்காளர் சாமி. 

“சாமி கடந்த 10 ஆண்டுகளில் பண மோசடிகள் தொடர்பாக 5,297 வழக்குகளை அமலாக்கத்துறை பதிவு செய்திருக்கிறது. ஆனால் 40 வழக்குகளில் மட்டுமே குற்றத்தை நிரூபித்து தண்டனை வாங்கிக் கொடுத்திருக்கிறது. அரசியல் பழிவாங்கலுக்கு அமலாக்கத்துறை பயன்படுத்தப்படுகிறதா? என்று கேட்டதற்கு,” நீயே புரிந்து கொள். தற்போது புள்ளி விவரங்களை நீயும் வழங்க ஆரம்பித்து விட்டாய்” எனக் கூறி விட்டு கிளம்பினார் வாக்காளர் சாமி. “வாரம் ஒரு முறை வாருங்கள் கருத்து மூட்டையை அவிழ்த்து விடுங்கள்” என கூறி வணக்கம் வைத்து வழி அனுப்பினேன். 

உண்மையை தெரிந்து கொண்டால் சர்க்கரை கசக்கும்
https://theconsumerpark.com/sugar-truths

நா.சின்னச்சாமி
நா.சின்னச்சாமி
நா.சின்னச்சாமி, பணி நிறைவுபெற்ற வருவாய்துறை அலுவலர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Google search engine

Latest Articles