Advertisement

இதுதான் உலகமா? – படித்ததில் பிடித்தது

நான் நண்பரது வீட்டு விழாவிற்கு சென்றிருந்த போது, ஓர் ஆடிட்டரும் வந்திருந்தார். அவரது வேடிக்கையான பேச்சில் மயங்கி, அவரைச் சுற்றி, ஒரு கூட்டமே இருந்தது. நானும் அருகில் சென்று கவனித்தேன். அவர் கூறியது:

எங்க தொழில் வலிமை வாய்ந்தது. எங்களால் ஆக்கவும் முடியும், அழிக்கவும் முடியும். வேடிக்கைக்காக, எங்கள் ஆடிட்டர் வட்டத்தில் உலவும், ஒரு கதையை சொல்கிறேன், கேளுங்கள்.

இராமாயணத்தில், இந்திரஜித்தின் பாணத்தால் அடிபட்டுக் கிடக்கும் லட்சுமணன். அவனைக் காப்பாற்ற சஞ்சீவி மூலிகையைக் கொண்டு வரும்படி, அனுமன் பணிக்கப்படுகின்றான். அனுமனும், சஞ்சீவி மூலிகையைத் தேடித் தேடி, சலித்துப் போய், சஞ்சீவி மலையையே, பெயர்த்து எடுத்துக் கொண்டு வருகின்றான். இலட்சுமணன் பிழைத்துக் கொள்கிறான்.யுத்தம் முடிகிறது.

அனைவரும் அயோத்திக்குத் திரும்புகின்றனர். அயோத்தித் திரும்பிய அனுமன், சஞ்சீவி மூலிகையைக் கொண்டு வந்ததற்கான, பயணப் படிக்கு விண்ணப்பிக்கிறார். ஆனால், அவரது பயணப்படி மறுக்கப்படுகிறது. அக்கவுண்டண்ட், சுட்டிக் காட்டிய விபரம்.

1. அனுமன், சஞ்சீவி மூலிகையைக் கொண்டுவரும் பயணத்திற்கு, முறைப்படி அயோத்தி அரசரது அனுமதியைப் பெறவில்லை.

2. அனுமன் ஒரு அரசின் நான்காம் நிலை ஊழியர். எனவே, அவருக்கு வான் வழிப்பயணம் அனுமதி இல்லை.

3. சஞ்சீவ மூலிகை கொண்டு வரச் சொன்னால் சஞ்சீவ மலையை கொண்டு வந்தது கூடுதல் சுமையை ஏற்படுத்தி அதிக செலவுக்கு வழிவகுத்து விட்டது. அவரது செயலால் ஏற்பட்ட அதிக செலவுக்கு அனுமதி இல்லை.

“மேற்கண்ட காரணங்களுக்காக, அனுமனின் பயணப்படி மறுக்கப்படுகிறது,” என்று எழுதிய ஆடிட்டர்/அக்கவுண்டண்டின் குறிப்பைப்படித்த, அயோத்தி மன்னன், உடனே அனுமனை வரச்சொல்கிறார்.

அனுமனிடன் இது குறித்துச் சொல்ல, அனுமனும் கவலை கொள்கிறார். “எஜமானரே! நீங்கள் இட்டப் பணியைச் செய்யத்தானே பயணித்தேன். அதற்குக்கூட, பயணப்படி கிடையாதா?’’ எனப் புலம்பிய அனுமனைத் தேற்றிய இராமன், கோப்பில் ‘மீண்டும் ஆய்வு செய்யவும்‘ என எழுதி அரண்மனை ஆடிட்டர்/ அக்கவுண்டண்டுக்குத் திருப்பி அனுப்புகிறார். கூடவே அனுமனுக்கு ஆடிட்டர்/ அக்கவுண்டண்டை, நேரில் ஒருமுறை சந்திக்கும்படியும், அறிவுறுத்துகிறார்.

கவலையுடன் சென்ற அனுமன் ஆடிட்டர்/ அக்கவுண்டண்ட்டிடம் சென்று பேசிப் பார்க்கிறார். ஆனால் பயணப்படி கிட்டுவதாக இல்லை. இறுதியில், அனுமன்,” இதோ பார் இந்தப் பயணப்படியை நீ எனக்கு கிடைக்கும்படிச் செய்தாயானால், உனக்கு, நான் அதில் 20 சதவீதம் பங்களிக்கிறேன்,” எனச் சொன்னவுடன், சற்று யோசித்தபிறகு, சரி நீ போ. உனது பயணப்படி உனக்கு விரைவில் கிடைக்கும், என்று பதில் வந்தது.

அதன் பிறகு, இரண்டே நாளில் அனுமனின் பயணப்படி அனுமதிஅவருக்குக் கிடைத்தது. ஆச்சரியத்துடன், அனுமன் அந்தக் கோப்பைப் பார்த்தபோது, அதே ஆடிட்டர், அவர் எழுப்பிய எழுப்பிய கேள்விகளுக்கும் (Query) அவரே விளக்கத்தை (Clarification) எழுதி பயணப் பணியை அனுமதிக்க செய்துள்ளார். அந்த விளக்கங்கள் என்ன என்று பார்த்தால்,

1. அனுமன் அன்றைய அயோத்தி மன்னனாகிய பரதனின் அனுமதியைப் பெறா விட்டாலும், தற்போதைய மன்னனாகிய, இராமனின் அனுமதியைப் பெற்றே பயணித்ததால், அவரது பயணம் அனுமதிக்கப்பட்ட, பயணமாகிறது.

2. அனுமன் அரசின் நான்காம் நிலை ஊழியர் என்றாலும், அவசர நிமித்தம் காரணமாக பயணித்ததால், அவருக்கு, வான்வழிப் பயணத்திற்கான அனுமதி அளிக்கப் படுகிறது.

3. அனுமன் சஞ்சீவி மூலிகையைக் கொண்டுவரப் பயணித்தாலும், தவறான மூலிகையைக் கொண்டு வந்திருந்தால், மீண்டும் பயணிக்க வேண்டியிருக்கும். எனவே, சஞ்சீவி மலையைக் கொண்டு வந்ததினால், மற்றொருமுறை செல்லவேண்டிய அதிகப்படியான பயணமும் செலவும் மிச்சமாவதால், இந்த கூடுதல் சுமை (excess luggage) அனுமதிக்கப்படுகிறது.

இந்தக் கதை காட்டும் பாடம் என்ன என்பதையும் உலகம் இப்படித்தானா? என்பதையும் தாங்களே யோசியுங்கள்! இத்தகைய சூழல் மாற்றப்பட வேண்டும் என்பதையும் மறந்து விடாதீர்கள்!

பொருளூர் செல்வா
பொருளூர் செல்வா
கட்டுரையாளர் சமூக அறிவியல் சிந்தனையாளர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Google search engine

Latest Articles